search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி ஏற்றுமதி தடை"

    • பல நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படுகிறது
    • எதிர்பாராத பருவகால மாற்றங்களால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.

    இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம், ஜூலை 20 அன்று 'பாஸ்மதி அல்லாத அரிசி' ஏற்றுமதிக்கு தடைவிதித்தது.

    இந்த தடைகுறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் அரிசிக்கு பெரும் தேவை உருவானது. குறிப்பாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அரிசி கிடைப்பது சவாலானதால், அங்குள்ள கடைகளில் விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் முண்டியடித்து வாங்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

    அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த தடை குறித்து குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas) கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் இந்த நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேனியல் லெய் (Daniel Leigh).

    அவர் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதுபோன்ற கட்டுபாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதனால் ஏற்படும் தாக்கத்தால் உலக அளவில் விலைவாசி உயருமே தவிர குறையாது. படிப்படியாக இந்த கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார தரவுகளின்படி 2024 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 5.9% என சதவீதமாக மதிப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
    • உலகெங்கும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கிவருகின்றன.

    சிட்னி:

    உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.

    கோடிக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவுப்பொருளாக அரிசி உள்ளது. அதிலும் இந்தியர்களுக்கு, அவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாட்டில் வசித்தாலும், அரிசி சோறு உண்டால்தான் 'சாப்பிட்டது' போலவே இருக்கும்.

    இந்த நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டால் அரிசி விலை உயரக்கூடும் என்ற கவலை வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே, கனடா முதல் அமெரிக்கா வரை, மலேசியா முதல் ஆஸ்திரேலியா வரை அவசர அவசரமாக இந்தியர்கள் கடைகளில் அரிசி வாங்கி சேர்த்து வருகின்றனர். கடைகளுக்கு அரிசி பைகள் வந்திறங்கியதுமே விறுவிறு விற்பனையால் மாயமாய் மறைந்துவிடுகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன.

    அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

    'கடந்த சில நாட்களாக, பலர் தாங்கள் வழக்கமாக வாங்குவதை இரு மடங்கு அதிகமாக அரிசி வாங்குகின்றனர். அதனால்தான் அரிசி விற்பனைக்கு கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு 5 கிலோ அரிசி பை மட்டுமே விற்கிறோம். சிலர், ஒரு அரிசி பைக்கு மேல் கேட்டு சண்டை போடுகிறார்கள். அதற்காக நாங்கள் அசைந்துகொடுப்பதில்லை' என்று ஆஸ்திரேலியா சர்ரே ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்திய மளிகை அங்காடி ஒன்றின் மேலாளரான சிஷிர் சைமா கூறுகிறார்.

    இந்த 'கிராக்கி'யை பயன்படுத்தி சில கடைகள் சத்தமில்லாமல் விலையை உயர்த்தி இருப்பதும் நடந்திருக்கிறது.

    தற்போது உலகெங்கும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கிவருகின்றன. இந்தியர்களின் 'அரிசி வேட்டை'யால் அதிகரிக்கும் இதன் பற்றாக்குறை, இந்திய உணவக உரிமையாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.

    மலேசிய நாட்டின் இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி ஜெயபாலன், 'அரிசி தட்டுப்பாட்டால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். விலை அதிகம் கொடுத்து அரிசி வாங்க வேண்டியிருந்தால், தோசை, இடியாப்பம் போன்றவற்றின் விலை உயரும். எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் பிரிவினர் என்ற நிலையில் நாங்கள் தற்போது விலையை உயர்த்தவில்லை. ஆனால் அரிசி தட்டுப்பாடு தொடர்ந்தால் எங்களுக்கு பிரச்சினை ஏற்படும்' என்று கூறுகிறார்.

    மோசமான காலநிலை, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உலக உணவுச் சந்தைகள் தடுமாற்றத்தில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு, சர்வதேச அளவில் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • வழக்கமாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை இல்லாததால் அந்த நேரத்தில் அரிசி விலை கூடும்.
    • இன்னும் ஓரிரு நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 வரை குறையும்.

    சென்னை:

    ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியை பொறுத்தவரையில் 70 லட்சம் டன் இருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு மாநிலமாக இல்லை என்பது தெரியவருகிறது. உற்பத்தி செய்யப்படும் 70 லட்சம் டன் அரிசியில் கூட 5 முதல் 10 லட்சம் டன் கேரள மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.

    மீதமுள்ள 60 லட்சம் டன் அரிசியுடன், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்டுக்கு 35 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் தேவையைவிட 5 லட்சம் டன் அரிசியாகவோ, நெல்லாகவோ நம்மிடம் இருப்பு இருந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.

    வழக்கமாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை இல்லாததால் (ஆப்-சீசன்), அந்த நேரத்தில் விலை கூடும். அதன் பின்னர் விலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். பொதுவாக ரூ.2 முதல் ரூ.3 வரை ஆப்-சீசனில் விலை உயரும். ஆனால் இந்த முறை ரூ.4 வரை உயர்ந்துள்ளது.

    இதற்கு உக்ரைனில் நிலவும் போர் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் கருங்கடலில் உணவு தானியங்களை கொண்டு செல்லக்கூடாது என ரஷியா போர்க்கொடி தூக்கியுள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் அரிசிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகளவில் இருந்தது. வழக்கமாக வெளிநாடுகளுக்கு 11½ லட்சம் டன் ஏற்றுமதி இருந்த நிலையில், அங்கு தேவை அதிகரித்து கூடுதலாக 3 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி ஆனது. இதன் காரணமாகவே ஆப்-சீசனில் விலை அதிகமாக உயர்ந்தது என்கின்றனர், அரிசி ஆலை உரிமையாளர்கள்.

    இந்த நிலையில் மத்திய அரசு, உள்நாட்டு தேவையை கருத்தில்கொண்டு, 'சூப்பர் பைன் வெரைட்டி' அரிசி ஏற்றுமதிக்கு கடந்த 20-ந் தேதி தடை விதித்து இருக்கிறது. இந்த சூப்பர் பைன் வெரைட்டியில் பி.பி.டி., சோனார்மசூரி அரிசி ரகங்கள் வருகின்றன. இவை பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் விளையக்கூடியது. தற்போது இந்த ரக அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதால், உள்நாட்டின் தேவையை அதிகளவில் இந்த ரக அரிசி பூர்த்தி செய்யும். எனவே வரக்கூடிய நாட்களில் அரிசி விலை குறையவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரிசி உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன செயலாளர் டாக்டர் மோகனிடம் கேட்டபோது, 'இன்னும் ஓரிரு நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 வரை குறையும். அதன் பின்னர் மேலும் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு புறம் இருக்க தற்போது குறுவை சாகுபடியின் அறுவடை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் இருக்கும். ஆனால் தென்மாநிலங்களில் போதிய மழை இல்லாதது, வட மாநிலங்களில் அதிகளவில் வெள்ளம் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த குறுவை சாகுபடி இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதன் நிலையை பொறுத்து அந்த நேரத்தில் அரிசி விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது' என்றார்.

    மேலும், உள்நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம் என்று கூறும் அரிசி ஆலை உரிமையாளர்கள், மத்திய அரசின் தற்காலிக ஏற்றுமதி தடைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்த தடை நிரந்தரமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது.
    • அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது. இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளதால், விரைவில் விற்று தீர்ந்துவிடுகின்றன.

    அரிசியை பிரதான உணவாக கொண்ட ஆசிய சமூகத்தினர் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து வகை அரிசி வகைகளையும் வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மக்கள் வருகை அதிகரிப்பதால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    சில கடைகளில் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தேவை அதிகரிப்பது தெரிந்ததும் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன.

    உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    • சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து விட்டது.
    • உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி ஒரு பிரதான உணவாகும்.

    உக்ரைன் நாட்டின் துறைமுகங்கள் மீதான ரஷிய தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் குறித்த கவலைகளை எழுப்பியதால், கோதுமை விலை இந்த வாரம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்கும்படி இந்தியா நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த ஏற்றுமதி தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. மத்திய வர்த்தக துறையின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்ககம் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    சில மாதங்களாகவே "எல் நினோ" (El Nino) பருவகால மாற்றங்களால் நிகழும் சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டும், உயர்ந்து வரும் விலைவாசியாலும், உள்நாட்டில் தடையின்றி அரிசி வினியோகம் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகளவில் அரிசி விலை உயரும் அபாயம் உள்ளதாகவும், இதனால் உலகளவில் அரிசி வர்த்தகர்கள் பெரும் லாபம் அடைவார்கள் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    "ஏற்றுமதி சந்தையில் அரிசி விலை மேலும் உயரப் போகிறது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ.4100 ($50) லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது ரூ.8000 ($100) அல்லது அதற்கும் மேல் அதிகரிக்கலாம். சந்தை எவ்வளவு உயரும் என்பதைப் பார்க்க விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் காத்திருக்கிறார்கள்," என்று சிங்கப்பூரை சேர்ந்த ஒரு சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகர் கூறியுள்ளார்.

    சிங்கப்பூரை சேர்ந்த வேறொரு வர்த்தகரும், பாங்காக்கின் ஒரு வர்த்தகரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி ஒரு பிரதான உணவாகும். அதிகளவில் நீர் தேவைப்படும் பயிரான அரிசியின் உற்பத்தி, 90% ஆசியாவில் நடக்கிறது. எல் நினோ வானிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி நிலை உற்பத்தியை தாறுமாறாக முடக்கியுள்ளது. இதனால் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளால், அரிசி ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளிலும், அதன் விலை உயர்ந்து வருகிறது.

    உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×