search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி விலை உயர்வு"

    • சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது.
    • பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு குறுவை பருவத்தின்போது போதிய மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாத நிலையில் அக்டோபர் மாதமே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் இருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்.

    அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய மழை பெய்யவில்லை. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.

    சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. பிராண்டட் அரிசி கிலோவு க்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் சென்னையில் சில்லரை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. ரூ.1300-க்கு விற்பனையான 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.1400-க்கு விற்பனையாகிறது.

    இதேபோன்று அரிசியின் தரத்தை பொறுத்து அனைத்து மூட்டைகளும் 100 முதல் 200 ரூபாய் வரையில் உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது அறுவடை காலம் ஆகும். இந்த நேரத்தில் அரிசியின் விலை சற்று குறைந்திருக்கும். ஆனால் தற்போது விலை ஏறி உள்ளது என்று கூறியிருக்கும் வியாபாரிகள் மிச்சாங் புயலும் இதற்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக அரிசி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும். மிச்சாங் புயல் பாதிப்பால் அறுவடை நேரத்தில் காற்று அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 30 மூட்டைகள் விளையும் இடத்தில் புயல் பாதிப்பு காரணமாக 18 மூட்டை நெல்லே உற்பத்தியாகி உள்ளது. இதனால் நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

    அறுவடை நேரத்தில் காற்று அதிகமாக வீசியதன் மூலம் நெற்பயிரில் பால் சிதறி தரமும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அரிசியின் விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.4 வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.

    இது தவிர அந்த ஆலைகள் கர்நாடகாவிலிருந்து நெல்லைப் பெறுகின்றன. பல்வேறு இடங்களில் அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உள்ளனர். தற்போது டெல்டா பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து குறைந்துள்ள காரணத்தால் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடக பொன்னி என்று பிரபலமாக அழைக்கடும் 1 கிலோ ஆர்.என். ஆர். அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது சில்லறை சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் (ஒரு வருட ரகம்) கிலோ ₹65 ஆக உள்ளது.

    மொத்த சந்தையில் பொதுவான அரிசி வகைகளின் விலை (அளவில் பெரியது) கிலோ 46-ல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் பெரும்பாலும் 2-வது போகம் நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி முதல் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வரையிலான பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவ சாகு படியை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் வரத்து மேலும் சரியும் என கூறப்படுகிறது.

    இது பற்றி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, எங்களால் எங்கள் ஆலைகளை அதன் திறனுக்கு ஏற்ப இயக்க முடியவில்லை. நெல் பற்றாக்குறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. இது அரிதான நிகழ்வு.

    வரும் ஆண்டில் அடுத்த சம்பா பருவம் வரை பொன்னி போன்ற பிரபலமான ரகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் சப்ளையை இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வணிகர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்றார்.

    இதனால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • பல நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படுகிறது
    • எதிர்பாராத பருவகால மாற்றங்களால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.

    இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம், ஜூலை 20 அன்று 'பாஸ்மதி அல்லாத அரிசி' ஏற்றுமதிக்கு தடைவிதித்தது.

    இந்த தடைகுறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் அரிசிக்கு பெரும் தேவை உருவானது. குறிப்பாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அரிசி கிடைப்பது சவாலானதால், அங்குள்ள கடைகளில் விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் முண்டியடித்து வாங்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

    அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த தடை குறித்து குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas) கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் இந்த நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேனியல் லெய் (Daniel Leigh).

    அவர் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதுபோன்ற கட்டுபாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதனால் ஏற்படும் தாக்கத்தால் உலக அளவில் விலைவாசி உயருமே தவிர குறையாது. படிப்படியாக இந்த கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார தரவுகளின்படி 2024 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 5.9% என சதவீதமாக மதிப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
    • உலகெங்கும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கிவருகின்றன.

    சிட்னி:

    உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.

    கோடிக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவுப்பொருளாக அரிசி உள்ளது. அதிலும் இந்தியர்களுக்கு, அவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாட்டில் வசித்தாலும், அரிசி சோறு உண்டால்தான் 'சாப்பிட்டது' போலவே இருக்கும்.

    இந்த நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டால் அரிசி விலை உயரக்கூடும் என்ற கவலை வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே, கனடா முதல் அமெரிக்கா வரை, மலேசியா முதல் ஆஸ்திரேலியா வரை அவசர அவசரமாக இந்தியர்கள் கடைகளில் அரிசி வாங்கி சேர்த்து வருகின்றனர். கடைகளுக்கு அரிசி பைகள் வந்திறங்கியதுமே விறுவிறு விற்பனையால் மாயமாய் மறைந்துவிடுகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன.

    அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

    'கடந்த சில நாட்களாக, பலர் தாங்கள் வழக்கமாக வாங்குவதை இரு மடங்கு அதிகமாக அரிசி வாங்குகின்றனர். அதனால்தான் அரிசி விற்பனைக்கு கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு 5 கிலோ அரிசி பை மட்டுமே விற்கிறோம். சிலர், ஒரு அரிசி பைக்கு மேல் கேட்டு சண்டை போடுகிறார்கள். அதற்காக நாங்கள் அசைந்துகொடுப்பதில்லை' என்று ஆஸ்திரேலியா சர்ரே ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்திய மளிகை அங்காடி ஒன்றின் மேலாளரான சிஷிர் சைமா கூறுகிறார்.

    இந்த 'கிராக்கி'யை பயன்படுத்தி சில கடைகள் சத்தமில்லாமல் விலையை உயர்த்தி இருப்பதும் நடந்திருக்கிறது.

    தற்போது உலகெங்கும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கிவருகின்றன. இந்தியர்களின் 'அரிசி வேட்டை'யால் அதிகரிக்கும் இதன் பற்றாக்குறை, இந்திய உணவக உரிமையாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.

    மலேசிய நாட்டின் இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி ஜெயபாலன், 'அரிசி தட்டுப்பாட்டால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். விலை அதிகம் கொடுத்து அரிசி வாங்க வேண்டியிருந்தால், தோசை, இடியாப்பம் போன்றவற்றின் விலை உயரும். எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் பிரிவினர் என்ற நிலையில் நாங்கள் தற்போது விலையை உயர்த்தவில்லை. ஆனால் அரிசி தட்டுப்பாடு தொடர்ந்தால் எங்களுக்கு பிரச்சினை ஏற்படும்' என்று கூறுகிறார்.

    மோசமான காலநிலை, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உலக உணவுச் சந்தைகள் தடுமாற்றத்தில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு, சர்வதேச அளவில் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது.
    • அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது. இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளதால், விரைவில் விற்று தீர்ந்துவிடுகின்றன.

    அரிசியை பிரதான உணவாக கொண்ட ஆசிய சமூகத்தினர் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து வகை அரிசி வகைகளையும் வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மக்கள் வருகை அதிகரிப்பதால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    சில கடைகளில் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தேவை அதிகரிப்பது தெரிந்ததும் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன.

    உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    • சந்தையில் பாரம்பரியம் மிக்க நல்ல நெல் ரகங்கள் ஏராளமானவை புத்துயிர் பெற்றுள்ளது.
    • ஆந்திர மாநில நெல் ரகமான பி.பி.டி. 5204 மற்றும் தெலுங்கானாவின் நெல் ரகமான ஆர்.என்.ஆர். ஆகியவற்றின் வரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி:

    தென்னிந்திய உணவு வகைகளில் அரிசி சாதம் பிரதானமாக இடம்பெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் அரிசி தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆந்திரா மாநிலம் முக்கிய பங்கு வைத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ள காரணத்தால் விலை உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சியை சேர்ந்த வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சந்தையில் பாரம்பரியம் மிக்க நல்ல நெல் ரகங்கள் ஏராளமானவை புத்துயிர் பெற்றுள்ளது. தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரத்து குறைந்துள்ளது.

    இந்நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் அரிசியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.10 கிலோ வரை உயரக்கூடும் என அரிசி ஆலை அதிபர்கள் கூறுகிறார்கள். கோவிட்-19 ஊரடங்கின்போது தேவை குறைந்ததால் அதிக அளவில் நெல் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் அவற்றின் இருப்புக்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. மேலும் பிற மாநிலங்களில் இருந்து நெல்வரத்தும் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றார்.

    இதற்கிடையே ஆந்திர மாநில நெல் ரகமான பி.பி.டி. 5204 மற்றும் தெலுங்கானாவின் நெல் ரகமான ஆர்.என்.ஆர். ஆகியவற்றின் வரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நுண்ணிய நெல் வகைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆலைகளின் நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், பிரபலமான அரிசி வகைகளின் சில்லறை விலை இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு ஒவ்வொரு நெல் மூட்டையும் (ஒரு மூடைக்கு 63 கிலோ) 1,400 ரூபாய்க்கு வியாபாரிகளுக்கு விற்றேன். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.300 கூடுதலாக இருந்தது என்று லால்குடியைச் சேர்ந்த விவசாயி வெற்றிவேல் கூறினார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொண்டு வரப்படும் நெல் ரகங்கள் குறைந்த விலையில் சந்தையைப் பிடிக்கின்றன. தற்போது சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் இரண்டாம் பருவ சாகுபடியில் நிலைமை மாறலாம் என்றார்.

    இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் முன்னணி நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில், தடிமனான நெல் ரகங்கள் நமது நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் உணவுக்கு நல்ல அரிசி வகைகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, இப்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து நல்ல ரகங்கள் நமது அரிசி ஆலைகளுக்கு வந்திருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை பெற்ற நெல் அளவு மற்ற ஆண்டுகளை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. இதனால் நுண்ணிய ரகங்களுக்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆந்திரா பி.பி.டி. மற்றும் அம்மன் பொன்னி ரகங்களுக்குச் சென்ற ஆண்டு திருச்சி விவசாயிகளுக்கு ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.1,400 என்ற விலை கிடைத்தது என்றார்.

    இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர் ஆர்.ஏ.ரகுராமன் கூறுகையில், திருச்சியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நன்றாக இருந்தது. பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. நெல் வகைகளின் விலையில் இது ஒரு சாதனை ஆண்டாக இருக்கும். 2022-ம் ஆண்டில், சிறந்த வகைகளுக்கான தேவை உச்சத்தை எட்டியதைக் கண்டோம். ஒரு மூட்டை ரூ.1,800 வரை கூட விலை உயர்ந்தது. ஆகவே இந்த ஆண்டு நல்ல கிராக்கியை எதிர்பார்த்து, மில் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நெல் இருப்புக்களை குவித்து வருகின்றனர் என்று கூறினார்.

    மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு நெல் அரிசி வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சின்னசாமி கூறும்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பி.பி.டி. ரக நெல் அதிக அளவில் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது அம்மாநில அரசுகள் இந்த ஆண்டு முதல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. இதனால் இங்கு வரத்து குறைந்துள்ளது.

    அதே நேரம் தமிழகத்தில் தேவைகளை அதிகம் பூர்த்தி செய்வதில் கர்நாடகம் இருக்கிறது. அங்கு தற்போது நெல் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சென்னை மாநகரின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதில் மட்டுமே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. வேறு பகுதிகளுக்கு அதிகம் கர்நாடக அரிசி வருகிறது. அரிசி விலையை பொருத்தமட்டில் 2022-ம் ஆண்டின் நிலையே நீடிக்கிறது என்றார்.

    ×