search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பரசன்"

    • பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
    • கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.

    பெறப்பட்ட 316 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகம் இருந்தன.

    இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 389 பயனாளிகளுக்கு ரூ. 452.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன்,  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
    • பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென் அமெரிக்காவில் உள்ள சிலி குடியரசு நாட்டிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று உள்ளார். சிலி குடியரசு நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சான்டியாகோ மாநகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றார்.

    சிலி குடியரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் கார்லோஸ் மான்டெஸ் சிஸ்டர்னாஸ் புதிய தொழில் நுட்பம் குறித்து பேசினார்.

    இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒரு குடியிருப்புக்கு ரூ.1.5 லட்சம் மானியமாகவும் தமிழ்நாடு அரசு ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள தொகை பயனாளிகளால் ஏற்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் திறனுக்கேற்ற வாடகை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முன்னோடியாக 6 திட்டப் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள், தங்கும் இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து 5 லட்சம் குடியிருப்புகள், தனி வீடுகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.30 லட்சம் குடும்பங்களுக்கு மனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்டிடத்தை புதுபிக்கவும், பழுது பார்க்கவும், புதிய உபகரணங்களைக் கொண்டு மேம்படுத்தவும், ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை:

    சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டையில் 1965-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழில் கூட்டுறவு பகுப்பாய்வு ஆய்வகத்தில் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகளை, குறைந்த விலையில், ரசாயனப் பகுப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்த ஆய்வுக்கூடத்திற்கான கட்டிடத்தை புதுபிக்கவும், பழுது பார்க்கவும், புதிய உபகரணங்களைக் கொண்டு மேம்படுத்தவும், ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    புதியதாக புனரமைக்கப்பட்ட இந்த ஆய்வகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று திறந்து வைத்து, தயாரிப்பாளர்கள் ஆய்வகத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து கிண்டி தொழிற்பேட்டையில் குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.90.13 கோடி மதிப்பீட்டில் 1,97,024 சதுர அடி பரப்பளவில் 6 தளங்கள், 152 தொழிற்கூடங்களுடன், கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு தொழில் வளாக கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

    • சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை சரிசெய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
    • புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவநேரி மீனவர் பகுதி "மாண்டஸ்" புயலால் அதிகளவில் சேதமடைந்த கடலோர பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் இன்று மாலை நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

    அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அருகில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சில வடமாநில மக்களுக்கு ஜவ்வரிசி தான் உணவாக உள்ளது.
    • மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறு என்பதை உணர்ந்து தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அவர் பேசுகையில், சேகோ தொழிற்சாலையில் உள்ள பிரச்சனைகளை உற்பத்தியாளர்கள் சரி செய்து கொள்ள வேண்டும். உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

    இதுவரை செய்தது போல் இனியும் தவறு செய்ய அரசு அனுமதிக்காது. கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், சில வடமாநில மக்களுக்கு ஜவ்வரிசி தான் உணவாக உள்ளது. மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறு என்பதை உணர்ந்து தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய அரசு தயாராக உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்கள் தவறு செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மற்றும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் செல்வகணபதி, சிவலிங்கம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    • குங்பூ தற்காப்பு கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தில் மன்சூரியா குங்பூ தற்காப்பு கலையின் சர்வதேச தலைமையகம் உள்ளது. இதை நிறுவிய குங்பூ வீரர் சேகரின் 8வது நினைவஞ்சலி விழா நேற்று மதியம் பூஞ்சேரி கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் பேசிய அமைச்சர், தற்போது இளைஞர்கள் செல்போன், சோஷியல் மீடியா என அதில் முழு நேரமும் மூழ்கி உடலையும், மனதையும், முயற்சியையும் இழந்து வருகிறார்கள். குங்பூ தற்காப்புக்கலை, அவர்களை தீய செயல்களில் இருந்து மீட்டு வருவதை இங்குள்ள இளைஞர்களை பார்த்து உணர்கிறேன். இந்த கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.

    விழாவில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, குங்பூ பயிற்சியக செயலாளர் அஷோக்குமார் மற்றும் பிறமாநில, வெளிமாவட்ட குங்பூ மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×