search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virudhachalam"

    விருத்தாசலம் அருகே பெயிண்டரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). பெயிண்டர். இவருக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த நவீன், பரத்ராஜ், சுகுந்த், பிரேம், சுரேஷ் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய நவீன் உள்ளிட்டவர்கள் சதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

    இதில் முகம், கைகளில் காயமடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.

    இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைராகி மடத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (26), மேட்டுத்தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியில் பஸ் பயணியிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.

    இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் ரூ.3 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி வந்த போது போலீசாரிடம் சிக்கிய சென்னை வாலிபர்கள், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் விஜயமாநகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்கலம் பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் இல்லை என கூறி முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பணம் இருந்தது. அந்த பணம் குறித்து விசாரித்தபோது அந்த வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தகாதவார்த்தைகளால் திட்டினர்.

    உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அந்த வாலிபர்கள் சென்னை துறைமுகம் ஆதன்தெருவைச் சேர்ந்த லுக்மோன்அகமது (வயது 24), என்பதும், மற்றொருவர் சென்னை மன்னடியைச் சேர்ந்த ஷேக் அப்துல்காதர் (28) என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த 3 லட்சம் பணத்துக்கு அவர்களிடம் எந்தவித கணக்கும் இல்லை, உரிய ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் ஹவாலா பணம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? 3 லட்சம் பணத்தை யாருக்கு கொடுக்க கொண்டுச்சென்றனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைதான 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதன் பேரில் லுக்மோன் அகமது, ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×