search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swipe Machine"

    சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் வழங்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவீன கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், குற்ற செயல்களை குறைக்கவும் மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்போது வாகன ஓட்டிகள் தங்கள் அபராதத்தை செலுத்தும் போது, போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க அரசு திட்டமிட்டது.

    இதன்படி போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் மூலம் அபராத தொகையை வசூலிக்கும் முறை தமிழக அரசு மூலம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்வைப் மெஷின்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் தலைமை தாங்கி, போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களை வழங்கியதுடன், கண்காணிப்பு கேமராக்களின் நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் வாகன விதி மீறல் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூல் செய்யும் வகையில் முதல் கட்டமாக 14 ஸ்வைப் மெஷின்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. இந்த மெஷின்கள் திருப்பூர் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் மூலம், விதிமீறலுக்கு உள்ளாகும் வாகன ஓட்டுனர்கள், அபராத தொகையை தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம். இதன் மூலம் ரொக்க பரிவர்த்தனை தவிர்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குற்ற தடுப்பு நடவடிக்கைக்காகவும், போக்குவரத்து மேலாண்மைக்காகவும், முதல் கட்டமாக தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 38 நவீன கண்காணிப்பு கேமராக்களும், தனியார் பங்களிப்புடன் 9 கேமராக்கள் என மொத்தம் 47 கேமராக்கள் மாநகருக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு நவீன கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மேலும் ரூ.12 லட்சம் மதிப்பில் 46 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக் கப்பட உள்ளது. இந்த அனைத்து கேமராக்களும் ஆன்-லைன் மூலம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஒரு மாதம் வரை சேமிப்பில் இருக்கும் வகையில் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குற்றங்களை தடுக்கவும், நடைபெற்ற குற்றங்களை புலன்விசாரணை செய்து கண்டுபிடிக்க பயனுள்ள வகையில் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதவி மேலாளர் செல்வராஜ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கும் முறையில் சென்னை போலீசார் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
    சென்னை:

    வாகனங்களில் வேகமாக செல்வது, போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக ‘ஸ்பாட் பைன்’ முறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக அமலில் உள்ளது.

    இதற்காக வாகன ஓட்டி களிடமிருந்து போக்குவரத்து போலீசார் ரொக்கமாக பணவசூல் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு முடிவு கட்டும் வகையில் ரொக்கமில்லா அபராதம் வசூலிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி போலீசார் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்க முடியாது.

    ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய முறையை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப் மிஷின்களை அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் மனைவியும் மாநில குற்ற ஆவணகாப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருண், கூடுதல் கமி‌ஷனர்கள் சேசசாயி, ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தின் கீழ் 6 வழிகளில் அபராத தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் அபராதத்தை செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வங்கி பணபரிவர்த்தனை வழியாகவும் அபராதத்தை செலுத்தலாம்.

    சென்னையில் உள்ள 132 தமிழ்நாடு இ-சேவை மையங்கள் வழியாகவும் வாகன ஓட்டிகள் பணத்தை செலுத்தலாம். அஞ்சல் நிலையம் வழியாகவும் கோர்ட்டிலும் அபராதத்தை செலுத்தலாம்.

    ஸ்வைப் மிஷின் மூலம் அல்லது மற்ற 5 வழிகளிலும் பணம் செலுத்துபவர்கள் இ-செலான் ரசீதை காட்டி வாகன எண்ணை குறிப்பிட்டு அபராதம் செலுத்த வேண்டும். பின்னர் அபராத ரசீதை அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பித்தவுடன் அபராத நடவடிக்கை நிறைவு பெறும். இந்த அபராதத்தை வாகன ஓட்டிகள் 48 மணி நேரத்துக்குள் கட்ட வேண்டும்.

    இந்த புதிய முறை குறித்து கூடுதல் கமி‌ஷனர் அருண் கூறியதாவது:-

    ரொக்கமாக போலீசார் அபராத தொகையை பெறும்முறை 25 ஆண்டாக நடைமுறையில் இருந்தது. அது இன்று முதல் முடிவுக்கு வருகிறது. 1992-ல் இருந்து ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலில் உள்ளது. இதன்படி போலீசார் அபராதம் விதித்தபின்னர் அந்த தொகையை கோர்ட்டில் போய் கட்டுவதற்கு 3 நாட்கள் வரையில் அலைய வேண்டி இருக்கும்.

    புதிய முறை அமலுக்கு வந்துள்ளதால் இனி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடமிருந்து எக்காரணத்தை கொண்டும் ரொக்கமாக பணம் வாங்கக் கூடாது. அதுபோன்று வாங்கினால் அது லஞ்சம் பெற்றதாக கருதப்படும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×