search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan navy"

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். #Fishermen #SriLankanNavy #TNFishermen

    ராமேசுவரம்:

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் மீனவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் சென்றனர்.

    இதில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 8 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது எனக்கூறி எச்சரித்தனர்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய அவர்கள் வலை, மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு ஏற்கனவே பிடித்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி ‘இங்கிருந்து செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள்’ என எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    இது குறித்து ராமேவரம் மீனவர்கள் கூறுகையில், வேலை நிறுத்தத்திற்கு பின் நேற்று தான் கடலுக்கு சென்றோம். இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து எங்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வருத்தத்துடன் கூறினர்.  #Fishermen #SriLankanNavy #TNFishermen

    வேதாரண்யம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மீன்பிடி சீசன் கடந்த 1-ந் தேதி தொடங்கியால் அங்கு ஏராளமான மீனவர்கள் வந்து மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த வாணகிரியை சேர்ந்த மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்துள்ளனர். நேற்று வாணகிரியை சேர்ந்த மீனவர்கள் 20 படகுகளில் சென்று மீன் பிடித்தனர். அவர்கள் இன்று காலையில் கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு படகில் வந்தனர். அவர்கள் வாணகிரியை சேர்ந்த 3 படகுகளில் ஏறி மீனவர் மிரட்டி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை அள்ளி கொண்டு அவர்களை விரட்டி விட்டனர். இதனால் அந்த படகுகளில் சென்ற தமிழ்மணி (வயது 24), தீபன் (20), அருள்மணி (25), தேன்ராஜ் (24), ராஜேஷ், சுப்பிரமணியன், ராஜீ, பாலகிருஷ்ணன், பாரதி, வேல்முருகன், சஞசய், சக்திவேல், சுரேஷ், மகேந்திரன், வினியரசன் ஆகிய 15 மீனவர்களும் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    கோடியக்கரை பகுதியில் கடந்த சில நாட்களில் 3 முறை கடற்கொள்ளையர்கள் வந்து மீனவர்களை தாக்கி அவர்களது மீன்பிடி வலைகளை அறுத்து சென்றனர்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்பு இலங்கை கடற்படையினர் 3 படகுகளில் மீன்களை அள்ளி சென்ற சம்பவம் மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடற்படையினர் கேட்டதும் மீனவர்கள் மீன்களை கொடுத்ததால் அவர்களை தாக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோடியக்கரையில் சீசனுக்கு மீன் பிடிக்கவந்த மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்கள், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து மீன்படிக்க செல்லும் மீனவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #TNFishermen
    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். #Fishermen #SriLankaNavy
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியைச் சோந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்கக்கூடாது எனக் கூறி மீனவர்களை எச்சரித்தனர்.

    தொடர்ந்து மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து எறிந்து சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளி கடலில் வீசினர்

    மேலும் சில மீனவர்களை தாக்கி அங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்ததாக தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்த மற்ற மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை கைவிட்டு விட்டு கரை திரும்பினர்.

    அப்போது அடைக்கலம் என்பவரு விசைப்படகின் மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியது. இதில் படகு சேதம் அடைந்தது.


    இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு நீடித்து வருவதால் எங்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியவில்லை.

    இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எங்களை தாக்கி விரட்டியடித்ததோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy
    நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக 6 குட்டி கப்பல்களில் 30-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குள் வீசியிருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப முயன்றனர்.

    ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், அதில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.
    ×