search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sadhguru"

    • கால்பந்தாட்ட சீசன் வேளையில், வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.
    • வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    உலக மண் தினமான இன்று, மண் காப்போம் இயக்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு தொடங்கி வைத்தார். கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றும் இவ்வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 


    நிகழ்ச்சியில் சத்குரு கூறுகையில், நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலகளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் மண் காப்போம் இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலகளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் மண் குறித்து யாரும் பேசவில்லை.

    ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்தாண்டு எகிப்தில் நடைபெற்ற மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது. எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது.

    எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு பங்கேற்றார்.

    • பாரத கலாச்சாரத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும் என சத்குரு வாழ்த்து தெரிவித்தார்.

    கோவை:

    பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், இந்நாள் அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும் வெற்றியைப் பெறும் சாத்தியத்தைக் குறிக்கும் நாளாகும்.

    தீபம் என்றால் வெளிச்சம். பொதுவாக வெளிச்சம் தெளிவோடும், இருள் அறியாமையோடும் ஒப்பிடப்படுகிறது. இருள் என்பது வெளியில் இருந்தாலும், நமக்குள் இருந்தாலும் நம் கண் முன் இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும் வீட்டில் விளக்கேற்றும் தினம் கிடையாது. நமக்குள்ளும் விளக்கு ஏற்ற வேண்டும்.

    வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அப்போது சூரியன் மறைந்த பிறகு விளக்கின் தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டுமென்றால், தீபாவளி நாளன்று மின் விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய் விளக்குகளை வீட்டில் ஏற்றுங்கள். அப்படி செய்தால், அதன் தாக்கத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணருவீர்கள். அது வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடும். பூஜை அறையில் தினமும் எண்ணெய் விளக்குகளை ஏற்றினால், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

    வெளியில் மட்டுமின்றி, உங்களுக்குள்ளும் வெளிச்சம் வரவேண்டும். உங்களுக்குள் தெளிவை ஏற்படுத்த ஈஷாவின் மூலம் பல யோக கருவிகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அறியாமை என்னும் இருளை நீக்குவதற்கு அதனுடன் நீங்கள் போராடக் கூடாது. இருள் நிறைந்த ஒரு இடத்தில் ஒரு ஒளி விளக்கை ஏற்றினால், இருள் காணாமல் போய்விடும். அதேபோல், தெளிவு பிறந்தால் அறியாமை இல்லாமல் போய்விடும். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும் என்னுடைய ஆசை, என்னுடைய அருள் என தெரிவித்துள்ளார்.

    • சத்குரு பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது
    • சத்குருவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    கோவை:

    சத்குரு அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சத்குருவின் பிறந்த தினம் இன்று ஈஷா யோகா மையத்திலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் சத்குருவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கமல்நாத், மத்திய மந்திரிகளான நிதின் கட்கரி, ஷோபா, ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட பலவேறு துறை மந்திரிகளும், பல்வேறு மாநில அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, பாரம்பரிய நடனக்கலைஞர் சோனல் மான்சிங், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

    பிரபலங்கள் மட்டுமல்லாமல் ஈஷா தன்னார்வலர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் டுவிட்டரில் #HappyBirthdaySadhguru #RiverRevitalizationDay ஆகிய ஹேஷ்டேக் உடன் சத்குருவை வாழ்த்தி டுவீட் செய்தனர். இது தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டிங் ஆனது.

    30 வருடங்களுக்கு முன்பு ஈஷா யோகாவை துவங்கி யோகாவை உடல், மன, ஆன்மீக நலத்திற்கான கருவியாக வெகுஜன மக்களுக்கு தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பவர் சத்குரு. மேலும் சமூக பங்களிப்பாக 'கிராம புத்துணர்வு இயக்கம்', கிராமப்புற ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட 'ஈஷா வித்யா பள்ளிகள்', சூழலியல் மேம்பாட்டிற்கென 'பசுமைக்கரங்கள் இயக்கம்', உழவர் நலனுக்காகவும், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் 'உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' மற்றும் 'இயற்கை விவசாய இயக்கம்', நதிகளை மீட்டெடுக்க 'நதிகளை மீட்போம்' மற்றும் 'காவிரி கூக்குரல் இயக்கம்' என சத்குருவின் தொலைநோக்குப் பார்வையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக நலனுக்கான பல்வேறு திட்டங்களால் உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

    தனது ஆன்மீக மற்றும் சமூக பணிகளுக்காக சத்குரு இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதினை கடந்த 2017-ம் ஆண்டு  பெற்றார். ஒரே நாளில் அதிக மரங்களை நட்டு கின்னஸ் சாதனை, நதிகளை மீட்பதற்கான இந்தியா முழுக்க மிகப்பெரிய விழிப்புணர்வு பயணம், சமீபத்தில் மண் காப்போம் இயக்கத்திற்காக உலக நாடுகளைக் கடந்து 100 நாள் பைக் பயணம் என உலக மக்களின் கவனத்தை சூழலியல் மேம்பாட்டின் பக்கம் திருப்பியவர். இவரின் பேச்சுக்களை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இவர் முன்னெடுத்துள்ள 'மண் காப்போம்' இயக்கம் 300 கோடிக்கும் அதிகமானோரைச் சென்றடைந்துள்ளது. ஒரு சமூக நலன் சார்ந்த விஷயம் ஒருமித்த குரலுடன் இத்தனை பெரிய ஆதரவோடு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது.
    • நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

    கோவை:

    சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் டிம்பர் மரங்களை நட்டு வருகின்றனர். மொத்தம் 130 விவசாயிகளின் பண்ணைகளில் 2 லட்சத்து 52 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 3-ம் தேதி வரையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    இதே போன்ற மரம் நடும் நிகழ்வுகள் நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்றோரின் பிறந்த நாளிலும் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

    காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் விவசாயிகள் மூலமாக மரம் நடும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. காவேரி வடிநில பகுதிகளில் 242 கோடி மரங்களை நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 35 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

    தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பல மடங்கு அதிகரிப்பதுடன் மண் வளமும், நீர் வளமும் அதிகரிக்கிறது. மேலும் நடப்பு மழைக்காலத்தில் அதிக அளவில் மரங்கள் நடுவதற்கு தேவையான நாற்று உற்பத்தி மற்றும் மரம் நடுவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகுப்புகள் நேரடியாகவும் இணைய வழியிலும் நடத்தி வருகிறது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து, அவர்களின் மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்து, நடவு செய்ய ஆலோசனை வழங்கி உடனிருக்கின்றனர். நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

    கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய செயல்களை செய்து வரும் ஈஷா தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மாபெரும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் பெண் காவலர்கள்
    • உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது என்று சத்குரு பாராட்டியுள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையை பல வருடங்களாக செய்து வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக, சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    'பிரவீனாவுக்கும் அமீனாவுக்கும் வணக்கம், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போருக்கு கண்ணியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் உங்களது கருணைமிக்க அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறோம். உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது' என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

    பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் பிரவீனா, கடந்த 7 வருடங்களாகவும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அமீனா என்கிற பெண் காவலர் கடந்த 4 வருடங்களாகவும் 'ஜீவ சாந்தி ட்ரஸ்ட்' எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உடல்களை அடக்கம் செய்யும் சேவையை செய்து வருகிறார்கள். கொரோனா லாக் டவுன் காலத்தில் கூட பாதுகாப்பு கவசம் அணிந்து உடல்களை அடக்கம் செய்ததாக அவர்கள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • மனிதர்கள் உள்நிலையில் அமைதியாக, ஆனந்தமாகவும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியால் பயன் இருக்காது.
    • நாடு முன்னேற வேண்டுமானால், அனைவரின் இதயங்களிலும் தேசப் பற்று உணர்வு துடிக்க வேண்டும் என சத்குரு பேச்சு

    கோவை:

    "சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது" என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார்.

    ஆதியோகி முன்பு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காமென்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    இவ்விழாவில் சத்குரு பேசுகையில், "பஞ்சத்தில் தவித்த நம் தேசம் இப்போது உலகிற்கே உணவு அளிக்கும் நிலையை அடைந்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மை நாடாக நம் நாடு உருவெடுத்துள்ளது. உலகின் 30 சதவீத அரிசி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடக்கிறது.


    அதேபோல், 1947-ல் நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 28 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், இப்போது அது 70 ஆண்டாக உயர்ந்துள்ளது. 2030-க்குள் இது 80 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது சாதாரணமான விஷயம் அல்ல. பலருடைய தியாகங்களாலும், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.

    உலகளவில் பொருளாதார வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் உள்நிலையில் அமைதியாக, ஆனந்தமாகவும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியால் பயன் இருக்காது. அது நமக்கும் நம்மை சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் அழிவை மட்டுமே உருவாக்கும். எனவே, பொருளாதாரம், வணிகம் மற்றும் அரசியல் என எதுவாக இருந்தாலும், அது மக்களின் நல்வாழ்வை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்" என்றார்.

    பிரதமரின் வேண்டுகோள்படி, சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை ஏற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சத்குரு பதில் கூறுகையில், "தேசப் பற்று உணர்வு நம் இதயங்களிலும் மனங்களிலும் துடிக்க வேண்டும். இந்த உணர்ச்சி இல்லாவிட்டால் நாம் நம் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியாது. உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள ஒற்றுமையே நாம் இந்தப் பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான். எனவே இந்த நாடு முன்னேற வேண்டுமானால், அனைவருடைய இதயங்களிலும் தேசப் பற்று உணர்வு துடிக்க வேண்டும்." என்றார்.

    காமென்வெல்த் பொதுச் செயலாளர் திருமதி. பெட்ரிசியா ஸ்காட்லாந்த் பேசுகையில், "இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் பட்டேல் ஆகிய தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியா உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 2 பெண்கள் குடியரசு தலைவர்களாகவும், ஒருவர் பிரதமராகவும், ஏராளமான பெண்கள் முதலமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். மற்ற பழமையான ஜனநாயக நாடுகளில் கூட இது இன்னும் சாத்தியமாகவில்லை.

    உலகளவில் பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதை எதிர்கொள்வதில் இந்தியாவின் தலைமையை காவென்வெல்த் எதிர்ப்பார்க்கிறது. அந்த வகையில் சத்குரு தொடங்கியுள்ள 'மண் காப்போம்' இயக்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவர் மேற்கொண்ட 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் உலகளவில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

    இவ்விழாவில் ஜி 20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளருமான ஹர்ஸ் வர்தன் ஸ்ரிங்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், "இந்தியா பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. காவென்வெல்த் பொதுச் செயலாளர் குறிப்பிட்டதை போல், உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இன்னும் 4 ஆண்டுகளுக்குள் நாம் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டிவிடுவோம். இந்தாண்டு ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது. இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 190 சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அதில் ஒரு நிகழ்ச்சி ஈஷாவில் நடக்க உள்ளது" என்றார்.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்றனர். ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    • நீங்கள் விழிப்புணர்வாக இல்லாவிட்டால் எதையும் உணர மாட்டீர்கள்.
    • நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் மூச்சு விடுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாது.

    யோக கலாச்சாரத்தில் ஆதியோகியான சிவன், ஆதி குருவாக மாறிய பெளர்ணமி நாள் குரு பெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.

    குரு பெளர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேற்று வருகை தந்தனர்.

    தியானலிங்கம், லிங்க பைரவி, ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று அவர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் நந்தி முன்பாக பழங்குடி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும், லிங்க பைரவி யாத்திரையும் நடைபெற்றது.

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் சத்குருவின் சிறப்பு சத்சங்கம் நேற்று நடைப்பெற்றது. இதில் அமெரிக்காவில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து சத்குரு பேசியதாவது:

    வருடத்தில் மற்ற எல்லா நாட்களையும் விட குரு பெளர்ணமி நாளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதனால், சந்திரனுடைய ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நம் மீது அதிகமாக இருக்கும். இன்றைய தினம் கடல் அலைகள் அதிகளவில் மேல் எழும்பும்.

    அதேபோல், நம் உடலில் உள்ள திரவங்களும் மேல் நோக்கி நகரும். இன்று நீங்கள் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறீர்களோ, அது பெருகும். நீங்கள் கோபமாகவோ, வருத்தமாகவோ இருந்தால் அந்த உணர்வு அதிகரிக்கும். மகிழ்ச்சியாகவோ,

    சந்தோசமாகவோ, ஆனந்தமாகவோ இருந்தால் அதுவும் அதிகரிக்கும். மனிதர்கள் பல்வேறு விதமான கட்டாயங்களின் கலவையாகவும், விழிப்புணர்வின் கலவையாகவும் இருக்கிறார்கள். இந்த கட்டாயங்கள் பிழைப்புணர்வை சார்ந்ததாக உள்ளது; இனப் பெருக்க உணர்வை சார்ந்ததாகவும் உள்ளது.

    மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் என பல்வேறு வித கட்டுப்பாடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இவையனைத்தும் அவர்களின் வாழ்நாள் முழுவதையுமே ஆட்டி படைக்கிறது.

    பெரும்பாலான மனிதர்கள் விழிப்புணர்வாக இருப்பதற்கு மிக நெருக்கமாக கூட வருவதில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாவிட்டால் எதையும் உணரமாட்டீர்கள். இது காற்றை போல. நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் நீங்கள் மூச்சு விடுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாது.

    இந்த பூமியில் எத்தனை மனிதர்கள் 24 மணிநேரத்தில் 5, 10 நிமிடங்களாவது அவர்கள் மூச்சு விடுகிறார்கள் என்ற விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்? ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் மூச்சை கவனிப்பது இல்லை. நீங்கள் 2 நிமிடங்கள் மூச்சு விடுவதை நிறுத்தினாலும் உங்கள் உயிர் பிரிந்துவிடும். இருந்தும் மூச்சை நீங்கள் கவனிப்பது இல்லை.

    விழிப்புணர்வு என்பது நீங்கள் சுவாசிக்கும் காற்றை விட அடிப்படையானது; அத்தியாவசியமானது. பெரும்பாலான மக்கள் வெறும் பிழைப்பு செயல்முறையிலேயே காலம் காலமாக மூழ்கி இருக்கிறார்கள். அவர்கள் பல விதங்களில் வாழ்வதற்கு இறந்து கொண்டு இருகிறார்கள்.

    வாழ்வதற்காக ஏங்கி ஏங்கியே இறந்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க கூடாது. நீங்கள் முழுமையாக வாழ்ந்து ஒரு நாள் இறந்து போக வேண்டும். வாழ்வதற்காகவே தினமும் இறக்க கூடாது. நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் அனைத்து கட்டுப்பாடுகளும் தானாகவே கீழே விழுந்துவிடும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    • அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு தகவல்.
    • ஆதியோகி முன்பு நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    கோவை:

    மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆதியோகியில் நேற்று (ஜூன் 21) இரவு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:

    இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்து வந்துள்ளேன். பைக் ஓட்டும்போது கவனம் மிக மிக அவசியம். ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிவேகமாக பைக் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் சிதறினாலும், விளைவு மிக மோசமாக இருக்கும். துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பைக் ஓட்டும் போது வெயில் 54 டிகிரி சுட்டெரித்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் செல்லும் போதும் வெயில் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு குளிர்ச்சியான சூழலை இங்கு தான் அனுபவிக்கிறேன்.

    உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலம் இந்த 100 நாள் மோட்டார் சைக்கிகள் பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இனிமேல் தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது. 'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்த கட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன்.

    அடுத்த ஒன்றரை மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் நாடுகளில் உள்ள 21 முதல் 22 நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன். அதுமட்டுமின்றி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    எனவே, இந்த 100 நாள் பயணம் முடிந்துவிட்டது என நீங்கள் நினைத்து அமைதியாகவிட கூடாது. உலக நாடுகள் அனைத்து உரிய சட்டங்கள் இயற்றும் வரை நீங்கள் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு தினமும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்களாவது மண் வளப் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இதை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் மற்றவர்களுடன் நேரில் இது குறித்து பேச வேண்டும்.

    இவ்வாறு சத்குரு பேசினார்.



    மேலும், இப்பயணம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், "நம் காலத்தின் அதிமுக்கியமான #SaveSoil இயக்கத்தை நிகழ்த்த வியக்கத்தக்க அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் உலகெங்கும் ஒன்றிணைந்த ஈஷா குழுவிற்கு மகத்தான நன்றிகள். உங்கள் பிராந்தியங்களில் மண் காக்கும் கொள்கைகள் இயற்றப்படும் வரை முழுவீச்சில் தொடருமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு எல்லையான பண்ணாரியில் இருந்து ஆதியோகி வரை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    'மண் காப்போம்' இயக்கத்துடன் இதுவரை இந்தியாவின் 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 74 நாடுகளும் பல்வேறு ஐ.நா அமைப்புகளும், 320 கோடி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • மண் காப்போம் இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு
    • கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்றார்.

    மண் காப்போம் இயக்கத்திற்கு மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கடும் குளிரையும், கன மழையையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சுற்றி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் என கிட்டத்தட்ட முக்கியமான அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்ற சத்குரு அந்நாடுகளின் அரசியல் தலைவர்களோடும், விஞ்ஞானிகளோடும் கலந்துரையாடினார்.

    இதை தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி இஸ்தான்புல்லில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடர்ந்தார். சுட்டெரிக்கும் பாலைவன வெயிலிலும், புழுதி புயலுக்கு இடையில் சத்குரு தனது சவாலான பயணத்தை இடைவிடாமல் மேற்கொண்டார்.

    அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அரங்கே நிரம்பி வழியும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.

    10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துபாய் நிகழ்ச்சியில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திருமதி. மரியம் பின்ட் முகமது பங்கேற்று தங்களுடைய அரசின் முழு ஆதரவை தெரிவித்தார்.

    இதேபோல், இஸ்லாமிய முஸ்லீம் லீக் அமைப்பும், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டேயேவும் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

    பின்னர், ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக மே 29-ம் தேதி பாரத நாட்டிற்கு வந்த சத்குருவிற்கு குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சத்குருவின் பயணத்தை பாராட்டி பேசினார். மேலும், தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார். 

    குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பயணித்த சத்குரு அம்மாநில முதல்வர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் பிற துறை அமைச்சர்களையும் சந்தித்து மண் வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தினார். இதையடுத்து அந்த மாநில அரசுகள்  மண்காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.



    வரலாற்று சிறப்புமிக்க தமது பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு சத்தியமங்கலத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சத்குருவை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். 

    பூரண கும்ப மரியாதையுடன் சத்குருவுக்கு வரவேற்பு
    பூரண கும்ப மரியாதையுடன் சத்குருவுக்கு வரவேற்பு

    இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், பொது மக்களும் ஆரத்தி எடுத்து சத்குருவை வரவேற்றனர்.

    அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்றார்.

    பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு ஆதியோகியை வந்து அடைந்தார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்றனர்.

    ஆதியோகி முன்பு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு நாளை தமிழகம் திரும்புகிறார்
    • கொடிசியாவில் நாளை மாலை நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்கிறார்.

    கோவை:

    மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார். இதையொட்டி, கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும், பொது மக்களும் தயாராகி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

    அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெறும் 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.



    பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக இந்தியா வந்து பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்தார். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயணத்தின் மூலம் இதுவரை 74 நாடுகள் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 8 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 320 கோடி மக்களின் ஆதரவை இவ்வியக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார் சத்குரு

    மும்பை:

    இந்தியாவின் 5-வது மாநிலமாக மஹாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு மற்றும் மஹாராஷ்ட்ரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களின் இல்லத்திற்கு சென்ற சத்குரு, மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய 'கொள்கை விளக்க கையேட்டை' முதல்வரிடம் வழங்கினார்.

    இது தொடர்பாக, மஹாராஷ்ட்ரா முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அவர்களை சத்குரு இன்று சந்தித்து மண் காப்போம் இயக்கம் குறித்து பேசினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக இவ்வியக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்" என பதிவிடப்பட்டுள்ளது.

    இதற்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, "நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் உத்தவ் தாக்கரே, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. வளர்ச்சி மாநிலமான மஹாராஷ்ட்ரா, உங்களுடைய தலைமையின் கீழ் ஆரோக்கியமான மண்ணையும், வளமான விவசாய சமூகத்தையும் உருவாக்கும் பணியில் சிறந்த வழிகாட்டியாக திகழட்டும்" என தெரிவித்துள்ளார். 


    புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் சத்குரு, ஆதித்யா தாக்கரே

    புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் சத்குரு, ஆதித்யா தாக்கரே

    அதேபோல், ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், "சத்குரு அவர்கள் எங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்ததை பெருமையாக கருதுகிறோம். அவர் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களுடன் மண் காப்போம் இயக்கம் குறித்து கலந்துரையாடினார். இவ்வியக்கத்திற்கும், எங்களது நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும் பிற முன்னெடுப்புகளுக்கும் மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.

    மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சத்குரு பேசுகையில், "15 முதல் 18 இன்ச் வரையிலான மேல்புற மண் தான் பூமியின் செழிப்பிற்கும் நாம் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 40 முதல் 50 வருடங்களில் நாம் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம். இப்போது இருக்கும் மக்கள் தொகையை கொண்டு பூமியில் ஒரு இன்ச் வளமான மண்ணை உருவாக்க 13,000 வருடங்கள் தேவைப்படும். அந்தளவிற்கு இது கடினமானது.

    கடந்த காலத்தில் நம் நாடு எதிர்கொண்ட கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள 'பசுமை புரட்சி' உதவியது. ஆனால், அது தற்காலிகமான தீர்வு தான். மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு நாம் நம்முடைய விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் அனைவரும் மண் அழிவிற்கு காரணமாக உள்ளோம். எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்" என்றார்.

    சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பேசுகையில், "நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். மண் வளத்தை மீட்டெப்பதில் நாம் இந்த தலைமுறையிலேயே செயல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால், நமக்கு நல்ல எதிர்காலம் இருக்காது." என்றார்.

    இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா, மெளனி ராய், இசை கலைஞர்கள் மீட் பிரதர்ஸ் உட்பட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

    • மண் வளம் இழப்பதை நம்மால் சரி செய்ய முடியும் என சத்குரு நம்பிக்கை தெரிவித்தார்
    • மண் வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம்

    இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக, உத்தரப் பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மண் காப்போம் இயக்கம் சார்பில் லக்னோவில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், அம்மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சர் சூர்யா பிரதாப் சாஹி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ் பிண்டால், தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

    விழாவில் சத்குரு பேசுகையில், "மனித குல வரலாற்றில் தற்போது முதல் முறையாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் 'மண் அழிவு' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்" என கூறி மண் வளம் இழப்பதன் இக்கட்டான நிலையை சுட்டிகாட்டி பேசினார். மேலும், இதை நம்மால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய சத்குரு, "மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் பாரதம் உலகிற்கு முன்னோடியாக தலைமை வகிக்க வேண்டும். ஏனென்றால், நாம் பாரதத்தில் மண்ணை 'தாய் மண்' என அழைக்கிறோம். குறிப்பாக, அதிக விவசாய நிலப்பரப்பை கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் இந்த முயற்சியில் தலைமை வகிக்க வேண்டும்" என்றார்.

    சத்குருவின் கருத்துக்களை வரவேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "சத்குரு அவர்கள் 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்' இயக்கத்திற்காக கடந்த முறை உத்தரப் பிரதேசம் வந்ததற்கு பிறகு நாங்கள் 60 நதிகளுக்கு புத்துயிரூட்டும் பணிகளை செய்து வருகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், அம்மாநிலத்தில் மண் வளத்தை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், கங்கை நதியை தூய்மையாக வைத்து கொள்ள மேற்கொள்ளப்படும், 'நமாமி கங்கா' திட்டம் குறித்தும் பேசினார். அத்துடன், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    மண் வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மார்ச் 21-ம் தேதி தொடங்கினார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்து பின்னர் சத்குரு கடந்த மாதம் 29-ம் தேதி இந்தியா வந்தார். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களுக்கு சென்ற அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்று இவ்வியக்கத்திற்கு மனமார்ந்த ஆதரவை தெரிவித்தார்.

    ×