search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Save Soil"

    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.
    • இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கோவை:

    உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் "பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த மண் காப்போம். இதற்காக அவர் உலகம் முழுக்க பயணித்து கோவை திரும்பியபோது பேரூர் ஆதீனம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் காப்போம் இயக்கத்தின் இந்த நிகழ்ச்சி மகளிருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது" என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திட்ட விளக்க உரை வழங்கிய மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 25 வருடங்களாக மண் வள மேம்பாடு, அதன் மூலம் மனித ஆரோக்கியம், விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்கள் செய்து வருகிறது.

    பெண்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். இது துவக்கம் தான். இதில் தங்களுக்கு திறக்கும் வாய்ப்புகள் வழியாக உங்களை வெற்றிக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்றார்.

    மண்வாசனை நிறுவனத்தின் மேனகா பேசுகையில், தினமும் மூன்று வேளை சமைப்பதையே பலரும் வாழ்வின் இலக்காக வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். நீங்கள் சொல்வதை செய்ய விரும்புகிறோம். ஆனால் வாழ்வாதாரம் பற்றி உள்ள பயத்தை அவரிடம் சொன்னோம். அதற்கு அவர், 'உங்கள் வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக் கொள்ளும்' என்றார். அந்த ஒரு வார்த்தை எங்களை இன்று வரை நகர்த்துகிறது.

    பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை நேரடியாக தரும்போது உட்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.

    இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தளவிற்கு சிறுதானிய உணவுகளுக்கான அதிமுக்கியமான தேவை உள்ளது, என்றார்.

    அவரைத்தொடர்ந்து மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜோஸ்பின் மேரி, நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் யமுனாதேவி ஆகியோரும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.

    பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கேள்வி பதில் பகுதியும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கருப்பு கவுனி அரிசியை கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.
    • இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம்.

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது.

    இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், "எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

    அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.

    பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் ஜீவாமிர்தம் மட்டுமே பயன்படுத்தி விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும்போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது. பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம்.

    கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது. இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தபோது ஏற்பட்ட பூஞ்சை தாக்குதலுக்கு புளித்த மோர்க்கரைசல் தெளிக்கப்பட்டு நன்றாக வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதால், விளைச்சலில் எந்தக்குறையும் ஏற்படவில்லை. நாளை நடக்கவுள்ள அறுவடையில் 1.5 டன் அளவிற்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்  அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம். இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்." என்றார்.

    • வாகன ஓட்டுநர்களுக்கு ‘மண் காப்போம்’ என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்தனர்.
    • மண் காப்போம் இயக்கத்திற்கு 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் ஆதரவு

    சென்னை:

    உலக மண் தினத்தை முன்னிட்டு 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர் 5) நடைபெற்றன.

    வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இழந்த மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் எதிர்கால தலைமுறையினர் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பார்கள்" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியின் துணை முதல்வர் ராஜஸ்ரீ, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

    இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கபாலீஸ்வரர் கோவில், தில்லைநகர் சப் வே, ஆவடி பஸ் டிப்போ, மீனாட்சி கல்லூரி, வளசரவாக்கம் சிவன் பார்க், பெரம்பூர் பஸ் நிறுத்தம், மாதவரம் ரவுண்டானா உட்பட சுமார் 20 இடங்களில் 'மண் காப்போம்' இயக்கத்தின் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். வாகன ஓட்டுநர்களுக்கு 'மண் காப்போம்' என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்து இவ்வியக்கத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

    அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம சத்து இருக்க வேண்டும். அதற்காக செயல் செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும். மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் என்ற பெயரில் மானியம் வழங்க வேண்டும். 3 சதவீதற்கும் மேல் கரிம சத்து கொண்ட மண்ணில் விளையும் விளைப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் பிரதான பரிந்துரைகள் ஆகும்.

    மண் வளப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு, மண் காப்போம் இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார். இதற்காக அவர் மார்ச் 21-ம் தேதி முதல் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சவாலான பயணம் மேற்கொண்டு உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் விளைவாக, 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும், இதுவரை 391 கோடி மக்களும் இவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், உலக மண் தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன
    • மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் சத்குரு நன்றி தெரிவித்தார்

    உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன.

    இது தொடர்பான நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கும் பார்வையும், செயல்களும் பாராட்டுக்குரியதாக உள்ளது. மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகள்.

    சவாலான மோட்டர் சைக்கிள் பயணம் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கடினமான வேலை இப்போது தான் தொடங்கியுள்ளது. மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகள் எவ்வளவு வேகமாக நாம் நடைமுறைப்படுத்த போகிறோம் என்பது தான் இப்போதைய முக்கிய சவால்.

    மண் காப்போம் இயக்கம் உலகம் முழுவதும் 'மண்' குறித்த பார்வையை மாற்றியுள்ளது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால் மக்களும், அரசாங்கங்களும் மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் நிகழ்த்த தொடங்கியுள்ளன. இத்திட்டங்களுக்கான நிதிகளும் ஒதுக்கப்பட தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்த சட்டங்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் வரை நம்முடைய பணி நிறைவு பெற போவதில்லை" என்றார்.

    Actyv.ai நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக சி.இ.ஓ திரு. ரகு சுப்பிரமணியன் மற்றும் 1Digi Investment Management நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்த நன்கொடை வழங்கியது. இது குறித்து திரு. ரகு சுப்பிரமணியன் கூறுகையில், "சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்றும் எங்கள் வர்த்தகத்தின் முக்கிய அம்சங்கள். சத்குரு தலைமையிலான மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றுவதில் Actyv.ai நிறுவனம் பெருமை கொள்கிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி. மரியம் பிண்ட் முகமது அல்ஹெரி பேசுகையில், "எங்களுடைய அரசு மண் காப்போம் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வியக்கத்துடன் இணைந்து நாங்கள் செய்ய உள்ள பணிகள் எதிர்கால சந்ததியினருக்காக மதிப்புமிக்க மண்ணை பாதுகாக்கும் பணியின் தொடர்ச்சியாக இருக்கும்" என்றார்.

    புர்ஜ் கலிஃபா மட்டுமின்றி, நயாகரா நீர் வீழ்ச்சி, ஜெனிவாவில் உள்ள ஜெட் டியோ, தி மோண்ட்ரியல் ஒலிம்பிக் மைதானம், டொரோண்டோ டிவி டவர், மும்பை மாநகராட்சி கட்டிடம், சென்னை மற்றும் ஹூப்ளி ரயில் நிலையங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நா அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வியக்கம் கடந்த 3 மாதங்களில் 390 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், 8 இந்திய மாநிலங்கள் இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

    • அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு தகவல்.
    • ஆதியோகி முன்பு நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    கோவை:

    மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆதியோகியில் நேற்று (ஜூன் 21) இரவு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:

    இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்து வந்துள்ளேன். பைக் ஓட்டும்போது கவனம் மிக மிக அவசியம். ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிவேகமாக பைக் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் சிதறினாலும், விளைவு மிக மோசமாக இருக்கும். துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பைக் ஓட்டும் போது வெயில் 54 டிகிரி சுட்டெரித்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் செல்லும் போதும் வெயில் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு குளிர்ச்சியான சூழலை இங்கு தான் அனுபவிக்கிறேன்.

    உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலம் இந்த 100 நாள் மோட்டார் சைக்கிகள் பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இனிமேல் தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது. 'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்த கட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன்.

    அடுத்த ஒன்றரை மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் நாடுகளில் உள்ள 21 முதல் 22 நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன். அதுமட்டுமின்றி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    எனவே, இந்த 100 நாள் பயணம் முடிந்துவிட்டது என நீங்கள் நினைத்து அமைதியாகவிட கூடாது. உலக நாடுகள் அனைத்து உரிய சட்டங்கள் இயற்றும் வரை நீங்கள் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு தினமும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்களாவது மண் வளப் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இதை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் மற்றவர்களுடன் நேரில் இது குறித்து பேச வேண்டும்.

    இவ்வாறு சத்குரு பேசினார்.



    மேலும், இப்பயணம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், "நம் காலத்தின் அதிமுக்கியமான #SaveSoil இயக்கத்தை நிகழ்த்த வியக்கத்தக்க அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் உலகெங்கும் ஒன்றிணைந்த ஈஷா குழுவிற்கு மகத்தான நன்றிகள். உங்கள் பிராந்தியங்களில் மண் காக்கும் கொள்கைகள் இயற்றப்படும் வரை முழுவீச்சில் தொடருமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு எல்லையான பண்ணாரியில் இருந்து ஆதியோகி வரை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    'மண் காப்போம்' இயக்கத்துடன் இதுவரை இந்தியாவின் 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 74 நாடுகளும் பல்வேறு ஐ.நா அமைப்புகளும், 320 கோடி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • மண் காப்போம் இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு
    • கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்றார்.

    மண் காப்போம் இயக்கத்திற்கு மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கடும் குளிரையும், கன மழையையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சுற்றி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் என கிட்டத்தட்ட முக்கியமான அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்ற சத்குரு அந்நாடுகளின் அரசியல் தலைவர்களோடும், விஞ்ஞானிகளோடும் கலந்துரையாடினார்.

    இதை தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி இஸ்தான்புல்லில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடர்ந்தார். சுட்டெரிக்கும் பாலைவன வெயிலிலும், புழுதி புயலுக்கு இடையில் சத்குரு தனது சவாலான பயணத்தை இடைவிடாமல் மேற்கொண்டார்.

    அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அரங்கே நிரம்பி வழியும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.

    10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துபாய் நிகழ்ச்சியில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திருமதி. மரியம் பின்ட் முகமது பங்கேற்று தங்களுடைய அரசின் முழு ஆதரவை தெரிவித்தார்.

    இதேபோல், இஸ்லாமிய முஸ்லீம் லீக் அமைப்பும், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டேயேவும் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

    பின்னர், ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக மே 29-ம் தேதி பாரத நாட்டிற்கு வந்த சத்குருவிற்கு குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சத்குருவின் பயணத்தை பாராட்டி பேசினார். மேலும், தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார். 

    குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பயணித்த சத்குரு அம்மாநில முதல்வர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் பிற துறை அமைச்சர்களையும் சந்தித்து மண் வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தினார். இதையடுத்து அந்த மாநில அரசுகள்  மண்காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.



    வரலாற்று சிறப்புமிக்க தமது பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு சத்தியமங்கலத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சத்குருவை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். 

    பூரண கும்ப மரியாதையுடன் சத்குருவுக்கு வரவேற்பு
    பூரண கும்ப மரியாதையுடன் சத்குருவுக்கு வரவேற்பு

    இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், பொது மக்களும் ஆரத்தி எடுத்து சத்குருவை வரவேற்றனர்.

    அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்றார்.

    பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு ஆதியோகியை வந்து அடைந்தார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்றனர்.

    ஆதியோகி முன்பு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு நாளை தமிழகம் திரும்புகிறார்
    • கொடிசியாவில் நாளை மாலை நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்கிறார்.

    கோவை:

    மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார். இதையொட்டி, கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும், பொது மக்களும் தயாராகி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

    அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெறும் 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.



    பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக இந்தியா வந்து பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்தார். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயணத்தின் மூலம் இதுவரை 74 நாடுகள் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 8 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 320 கோடி மக்களின் ஆதரவை இவ்வியக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலத்தில் மண் காப்போம் இயக்கத்துடன் ஒப்பந்தம்
    • இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது.

    மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை லண்டனில் இருந்து மார்ச் 21-ம் தேதி தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27 நாடுகளில் 100 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய 5 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

    இந்தியாவில் 6-வது மாநிலமாக தெலுங்கானா அரசு மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டியும் சத்குருவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.

    அரங்கு நிறையும் அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தயாகர் ராவ், நடிகைசமந்தா, தெலுங்கு பாடகர்கள் ராம் மிரியாலா,மங்கலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மண் காப்போம் இயக்கத்திற்கு அரசின் முழு ஆதரவை தெரிவித்த வேளாண் அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி, பேசுகையில்,  சத்குரு, மண் வளத்தை மீட்டெடுக்கும் விஷயத்தில் நாங்கள் உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறோம் என்றார். 

    உங்களுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றி, அதை நடைமுறைப்படுத்துவோம். தனி நபர்களின் தார்மீகப் பொறுப்புணர்வு மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வின் மூலம் நம்மால் மண்ணை காப்பற்ற முடியும். இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது; பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதை தொடர்ந்து சத்குருவுடன் நடிகை சமந்தா அவர்கள் சுற்றுச்சூழல், ஆன்மீகம், மதம் என பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    அப்போது, இந்த வயதில் 27 நாடுகளுக்கு 26,000 கி.மீ உங்களால் எப்படி மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது ஆச்சரியமாக உள்ளது. இது எப்படி சாத்தியம்?" என சமந்தா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த சத்குரு, "மண் வளப் பாதுகாப்பு குறித்து நான் 30 வருடங்களுக்கு மேலாக பேசி வருகிறேன். நான் பேசும்போதெல்லாம், மக்கள் ஓ, இது அற்புதமான விஷயம், அருமையான விஷயம் என சொல்வார்கள் என்றும்,  ஆனால்,அதன் பிறகு அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தூங்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.

    அவர்களை விழிப்படைய செய்வதற்காக தான் நான் இந்த கடினமான  பயணத்தை மேற்கொண்டுள்ளேன், பல்வேறு விதமான தட்பவெப்ப நிலைகளில் 30.000 கி.மீ மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆபத்தான பயணத்தில் நான் என்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    நான் எடுத்த சவால் நன்றாக பலன் தந்துள்ளது, நான் பயணம் தொடங்குவதற்கு முன்பு மண் வளம் குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை. ஆனால், இப்போது பாருங்கள், எங்களுடைய சமூக வலைத்தள கணக்கீடுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 280 கோடி பேர் மண் குறித்து பேசியுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


    • மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார் சத்குரு

    மும்பை:

    இந்தியாவின் 5-வது மாநிலமாக மஹாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு மற்றும் மஹாராஷ்ட்ரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களின் இல்லத்திற்கு சென்ற சத்குரு, மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய 'கொள்கை விளக்க கையேட்டை' முதல்வரிடம் வழங்கினார்.

    இது தொடர்பாக, மஹாராஷ்ட்ரா முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அவர்களை சத்குரு இன்று சந்தித்து மண் காப்போம் இயக்கம் குறித்து பேசினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக இவ்வியக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்" என பதிவிடப்பட்டுள்ளது.

    இதற்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, "நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் உத்தவ் தாக்கரே, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. வளர்ச்சி மாநிலமான மஹாராஷ்ட்ரா, உங்களுடைய தலைமையின் கீழ் ஆரோக்கியமான மண்ணையும், வளமான விவசாய சமூகத்தையும் உருவாக்கும் பணியில் சிறந்த வழிகாட்டியாக திகழட்டும்" என தெரிவித்துள்ளார். 


    புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் சத்குரு, ஆதித்யா தாக்கரே

    புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் சத்குரு, ஆதித்யா தாக்கரே

    அதேபோல், ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், "சத்குரு அவர்கள் எங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்ததை பெருமையாக கருதுகிறோம். அவர் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களுடன் மண் காப்போம் இயக்கம் குறித்து கலந்துரையாடினார். இவ்வியக்கத்திற்கும், எங்களது நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும் பிற முன்னெடுப்புகளுக்கும் மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.

    மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சத்குரு பேசுகையில், "15 முதல் 18 இன்ச் வரையிலான மேல்புற மண் தான் பூமியின் செழிப்பிற்கும் நாம் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 40 முதல் 50 வருடங்களில் நாம் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம். இப்போது இருக்கும் மக்கள் தொகையை கொண்டு பூமியில் ஒரு இன்ச் வளமான மண்ணை உருவாக்க 13,000 வருடங்கள் தேவைப்படும். அந்தளவிற்கு இது கடினமானது.

    கடந்த காலத்தில் நம் நாடு எதிர்கொண்ட கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள 'பசுமை புரட்சி' உதவியது. ஆனால், அது தற்காலிகமான தீர்வு தான். மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு நாம் நம்முடைய விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் அனைவரும் மண் அழிவிற்கு காரணமாக உள்ளோம். எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்" என்றார்.

    சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பேசுகையில், "நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். மண் வளத்தை மீட்டெப்பதில் நாம் இந்த தலைமுறையிலேயே செயல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால், நமக்கு நல்ல எதிர்காலம் இருக்காது." என்றார்.

    இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா, மெளனி ராய், இசை கலைஞர்கள் மீட் பிரதர்ஸ் உட்பட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

    நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும் என சத்குரு பேசினார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜஸ்தான் முதல்வர், “மண் நம்முடைய தாய். மண்ணை நாம் எப்போதுமே அன்பாகவும், மரியாதையாகவும் அணுகியுள்ளோம். மண் வளம் இழந்து வருவது பற்றி கேள்விப்படும் போது எனக்கு வேதனையாக உள்ளது. அதேசமயம், இதற்காக சத்குரு அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இவ்வியக்கம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

    ஒப்பந்தம்

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சத்குரு பதிவிட்டுள்ள பதிவில், “நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் அசோக் கெலாட் ஜி, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களது ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். மண் வளத்தை பாதுகாக்கும் கொள்கைகளை உருவாக்கி, இந்த அழகான நிலத்தில் நீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணியில் உங்களது தலைமையில் ராஜஸ்தான் முன்னணியில் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த பொது நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில பஞ்சாயத் ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேஷ் சந்த் மீனா, வேளாண் துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியா மற்றும் சத்குரு கலந்து கொண்டு மண் வள மீட்பின் அவசியம் குறித்து பேசினர்.

    ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசுகையில், “இயற்கையில் நாம் பார்க்கும் அனைத்துமே மண்ணில் இருந்து வருகிறது; மீண்டும் மண்ணுக்கே திரும்ப செல்கிறது” என கூறினார். மேலும், “இந்த இயக்கம் சத்குருவுடைய தனிப்பட்ட இயக்கம் அல்ல, ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் பயன் தரும் இயக்கம். எனவே, மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் அனைவரும் பங்காற்ற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதற்காக உறுதி ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

    மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய வேளாண் துறை அமைச்சர்  லால் சந்த் கட்டாரியா, “அறிவியம் மற்றும் தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் உருவாவதற்கு பல ஆண்டுகள் முன்பாக மக்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்” என கூறினார்.

    விழாவில் சத்குரு பேசுகையில், “கடந்த 25 வருடங்களில் மட்டும் உலகின் 10 சதவீத நிலப்பரப்பு பாலைவனமாக மாறியுள்ளது. மண் அழிவு எந்தளவுக்கு வேகமாக நிகழ்ந்து வருகிறது என்பதற்கு இது உதாரணம்” என்றார். மேலும், “நம்முடைய கலாச்சாரம் மண்ணை நாம் ‘தாய் மண்’ என்றே அழைக்கிறோம். காரணம், நம்முடைய அனைத்து தாய்மார்களுக்கும் மண் தான் தாய். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும். 60 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுப்பட்டு இருக்கும் நம் நாட்டில் போதிய மரங்களும், கால்நடைகளும் இருப்பது அவசியம். அடுத்த 10 முதல் 15 வருடங்களில் இந்த கால்நடைகள் எல்லாம் காணாமல் போனால், நாமும் காணாமல் போவோம். நம் தேசத்தின் கதையும் முடிந்துவிடும்” என்றார்.

    வேளாண் துறை அமைச்சரும், சத்குருவும் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். ஜெய்ப்பூர்  கண்காட்சி மையத்தில் நடந்த இந்த பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பிரபல நாட்டுப்புற கலைஞர்கள் இல்லா அருண், குட்லே கான் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து தொடங்கும் சைக்கிள் பேரணி, சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.
    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் ஜூன் 5-ம் தேதி நடக்க உள்ளது.

    இந்த சைக்கிள் பயணம் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக பாப் (BOB)அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து அன்றைய தினம் காலை 5 மணிக்கு தொடங்கும் இப்பயணம் அங்கிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.

    இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 98842 55712 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயணம் குறித்த விளக்க நிகழ்ச்சி ஹோட்டல் சவேராவில் ஜூன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது நேரடி முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

    உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், சர்வதேச விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பல தரப்பினர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு, 100 நாட்களில் 30,000 கி.மீ. தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சத்குரு மே 29-ம் தேதி முதல் இந்தியாவில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
    சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர்.

    மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு, வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

    குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகளின் கமாண்டிங் ஆபிஸர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். அத்துடன் மண் காப்போம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வழிநெடுகிலும் நின்று கொண்டு சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவர்களின் அன்பான வரவேற்பை மனதார ஏற்றுக்கொண்ட சத்குரு அங்கு பேசுகையில், “இன்று மட்டுமின்றி, குறைந்தப்பட்சம் அடுத்த 30 நாட்கள் நீங்கள் மண் வளப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேச வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும், மண் வளத்தை மீட்டெடுக்க சட்டங்களை உருவாக்கும் வரை நீங்கள் இதற்காக விடாது குரல் கொடுக்க வேண்டும். உங்கள் கரங்களில் இருக்கும் மொபைல் போன் ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மண் வளம் குறித்து தொடர்ந்து பேசுங்கள். இதற்காக, தினமும் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்களாவது செலவிடுங்கள்” என கூறினார்.

    ஜாம்நகர் அரச குடும்பத்தின் பிரதிநிதி திருமதி. ஏக்தபா சோதா பேசுகையில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசாங்கங்கள் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து வருகிறார். இது மிக முக்கியமான விஷயம்” என்றார்.

    மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்து வரும் சத்குரு தனது பயணத்தை மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் கடந்து மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர்.

    சத்குருவுக்கு வரவேற்பு

    கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஐரோப்பாவிலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஆசியா மற்றும் அரேபியாவிலும், யூதர்கள் பெரும்பான்மையாக  வாழும் இஸ்ரேலிலும் சத்குரு பேரன்போடு வரவேற்கப்பட்டார். மதம், இனம், தேசம், மொழி  கடந்து அனைத்து தேசத்து  தலைவர்களும், பொதுமக்களும்  ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு பேராதரவு அளித்தனர். பல மொழி பேசி, பல்வேறு இனமாக வாழும் மக்களை சத்குருவின் இந்த இயக்கம் ‘மண்’ என்ற ஒற்றை புள்ளியில் இணைத்துள்ளது. தனது பயணத்தின் நிறைவு பகுதியாக, பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் வழியாக ஜூன் 21-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.

    சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர். இதனால், #BharatWelcomesSadhguru என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்தியாவில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
    ×