search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokayukta"

    முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டசபையில் இன்று நிறைவேறியது. #TNAssembly #Lokayukta
    சென்னை:

    அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற் காக லோக் ஆயுக்தா எனும் அமைப்பை மாநில அரசுகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. தமிழக அரசு இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு இன்று லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை சட்டசபை யில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கான சட்ட முன் வடிவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    2013-ம் ஆண்டு லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது ஒவ்வொரு மாநிலமும் லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்பதற்கு வகை செய்கிறது.

    அதன்படி பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று தமிழ்நாடு மாநிலத்துக்காக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க உள்ளது.

    தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் போது மாநில அரசின் தொகுப்பு நிதியத்தில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் பின்வருமாறு:-

    * லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் அல்லது பொது நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் நியமிக்கப்படும் 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித் துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.

    * இந்த பொறுப்புக்கு வருபவர்கள் ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருந்தால் அந்த பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் அதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

    * அமைச்சராக இருக்கின்ற அல்லது அமைச்சராக இருந்துள்ள நபர் எவரும் (அமைச்சர் என்பது முதல்- அமைச்சரும் அடங்கும்) சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள நபர் எவரும் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இதில் விசாரிக் கப்படுவார்கள்.

    * லோக் ஆயுக்தா சட்டமானது மேற்கண்ட நபர்கள் மட்டுமின்றி ஊழல் குற்றச்சாட்டு, ஊழலுக்கு தூண்டி விடுதல், கையூட்டு பெறுதல், ஊழல் சதி செயலில் ஈடுபடுபவர்கள் மீதும் விசாரணை செய்யலாம்.

    * மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை மத்திய அரசின் இசைவின்றி இந்த பிரிவின் படி நடவடிக்கை எடுக்ககூடாது.

    * இதில் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக முதல்-அமைச்சருக்கு கவர்னர், அமைச்சர்களுக்கு- முதல்-அமைச்சர், 
    அமைச்சரை தவிர்த்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு- சட்டமன்ற பேரவை தலைவர், அரசுத்துறை அலுவலர்களுக்கு-அரசு என்ற வகையில் அதிகார அமைப்பு அமைக்கப்படும்.

    * லோக் ஆயுக்தாவானது புகாரை பெற்றுக் கொண்டதின் பேரில் முதலில் அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த புகாரை உறுதிப்படுத்துவதற்கு விழிப்பு பணி ஆணையத்திற்கு புகாரை அனுப்ப வேண்டும்.

    மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    * லோக் ஆயுக்தாவானது தகவல் முதலியவற்றை தருமாறு பொது ஊழியர் அல்லது பிறநபர் யாரிடமும் கேட்கலாம். இது தொடர்பான விசாரணைக்கு முன் அனுமதி தேவையில்லை.

    * லோக் ஆயுக்தா அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

    * ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொது ஊழியரை பணி மாறுதல் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது.

    * ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    * பொது ஊழியருக்கு எதிராக பொய் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையையும் அவர் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

    * குற்றம் சாட்டப்படும் நபர் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் சம்பவம் நடத்திருந்தாலோ அல்லது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து உரிய முயற்சிகளையும் எடுத்திருந்தாலோ அவர் தண்டிக்கப்படக் கூடாது.

    இவை உள்பட மேலும் பல்வேறு அம்சங்கள் லோக் ஆயுக்தாவில் இடம்பெற்றுள்ளது. பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்.

    மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஸ்டாலின் கூறினார். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.

    அமைச்சரின் பதிலை ஏற்காத திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து, சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். 
    தமிழக சட்டசபையில் இன்று லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். #TNAssembly #LokayuktaBill
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று வழக்கம் போல் காலை 10 மணிக்கு சபை கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

    அவர் உரையாற்றி முடிந்ததும் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசினார். அப்போது சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கினார். இதையடுத்து சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.

    ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கும் என்பதால் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokayuktaBill 
    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் லோக் அயுக்தா சட்ட மசோதா இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்படுகிறது. 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிவுக்கு வருகிறது. #TNAssembly #Lokayukta
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.

    இன்றைய கூட்டம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தா சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.

    ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இந்த மசோதாவை ஆதரித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.

    அதன்பிறகு, கடந்த 5-ந் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மீதான பதிலுரை இடம்பெறுகிறது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். இறுதியாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.

    இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளில், லோக் அயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 2013-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2014-ம் ஆண்டு நடைமுறைக்கும் வந்தது. இதுவரை, லோக் அயுக்தா விசாரணை மன்றம், மராட்டியம், பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, இமாச்சலபிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத், கேரளா, பஞ்சாப், டெல்லி, அரியானா, ஒடிசா ஆகிய 15 மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, தெலுங்கானா, அருணாசல பிரதேசம், திரிபுரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு ஒன்றில் நீதிபதிகள், “ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் அயுக்தாவை தமிழ்நாட்டில் அமைக்காதது ஏன்?. லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் (அதாவது நாளை) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில்தான் 16-வது மாநிலமாக தமிழகத்தில் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #TNAssembly #Lokayukta
    முதல்-அமைச்சர், அமைச்சர்களும் லோக் ஆயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Lokayukta #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான ஆயுதங்களில் முக்கியமானதாக கருதப்படும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டமுன்வரைவை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது ஆகும்.

    லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்காக சட்ட முன்வரைவை தாக்கல் செய்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு காரணம், அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை அல்ல. தமிழகம், புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்னும் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தாததற்காக கடந்த ஏப்ரல் மாதம் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அம்மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதிக்குள் லோக் அயுக்தாவை அமைக்க ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டதால் தான் வேறுவழியின்றி இத்தகைய நிலைக்கு பினாமி அரசு தள்ளப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற ஆணைக்கு பணிந்து தமிழக அரசு ஏற்படுத்தவிருக்கும் லோக் அயுக்தா பெயரளவில் செயல்படும் பொம்மை அமைப்பாக இருந்து விடக் கூடாது என்பது ஊழல் எதிர்ப்பாளர்களின் கவலை ஆகும். 21 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கும் போதிலும், அவற்றில் கர்நாடக லோக் ஆயுக்தா தான் சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும்.


    மராட்டிய லோக் அயுக்தா தான் எதற்கும் பயன்படாத பலவீனமான அமைப்பு ஆகும். தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் லோக் அயுக்தா கர்நாடகத்தில் இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, மராட்டியத்தில் இருப்பதை விட பலவீனமானதாக இருந்து விடக் கூடாது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கர்நாடகத்தில் இருப்பதைப் போலவே முதல்- அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ஆகியோர் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாடு லோக் அயுக்தாவுக்கு ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக லோக் அயுக்தாவாக நியமிக்கப்படுவர்கள் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ இருக்கும் வகையில் சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட வேண்டும்.

    மாறாக, ஊழல்வாதிகள் தப்பிக்க வசதியாக வலுவற்ற லோக் அயுக்தா அமைக்கப்பட்டால் அதைக் கண்டித்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஊழலில் திளைக்கும் தமிழக அரசு நிர்வாகத்தை ஓரளவாவது சீர் செய்ய வேண்டுமானால் அதற்கு லோக் அயுக்தா அமைப்பு தான் ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. அதனால் தான் தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


    2016-ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என்று முதன் முதலில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. அ.தி.மு.க.வும் அதன் தேர்தல் அறிக்கையில் அதே வாக்குறுதியை அளித்திருந்தாலும், ஊழல் ஒழிப்பை விட ஊழல் செய்வதில் தான் பினாமி ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கை அதிகம் என்பதால், புதிய அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் லோக் அயுக்தாவை அமைக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களும், முன்னெடுப்புகளும் ஈடு இணையற்றவை. மதுரையில் கடந்த ஆண்டு திசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழு கூட்டத்தில் 2018ஆம் ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக கடை பிடிக்கவும், லோக் அயுக்தா மற்றும் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி 2018ஆம் ஆண்டில் பா.ம.க. சார்பில் நான் வெளியிட்ட முதல் அறிக்கையும், எனது தலைமையில் நடத்தப்பட்ட முதல் போராட்டமும் லோக் அயுக்தா சட்டமுன்வரைவை நிறைவேற்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது லோக்அயுக்தா சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படுவது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும். #Lokayukta #Ramadoss
    ×