search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islam"

    • பொய் என்பதே பாவங்களின் அடிப்படையாக உருவெடுத்து விடுகிறது.
    • பொய் பேசுவதினால் உள்ளம் கலக்கம் அடைய ஆரம்பித்து விடுகிறது.

    பொய் பேசுவது என்பது தீமைகளின் அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. பொய் என்பதே பாவங்களின் அடிப்படையாக உருவெடுத்து விடுகிறது.

    பொய் பேசுவதின் விளைவாக அதை பேசுபவரின் உள்ளம் இருளடைந்து விடுகிறது. அவரின் உள்ளம் கடினமாகவும் மாறிவிடுகிறது. அவரின் நெஞ்சம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. பொய் பேசுவதினால் உள்ளம் கலக்கம் அடைய ஆரம்பித்து விடுகிறது.

    உள்ளத்தில் தோன்றிய பொய், நாவின் வழியே வெளியாகி, நாவை பாழாக்கி விடுவதுடன் நாவில் இருந்து உடலின் பிற உறுப்புகளுடன் பயணித்து ஒட்டுமொத்த உறுப்புகளையும், அதன் வழியே வெளிப்படும் செயல்பாடுகளையும் பாழாக்கி, அவன் சொற்களையும், செயல்களையும், நிலைகளையும், பழக்க வழக்கங்களையும் பாவமயமாக மாற்றி விடுகிறது.

    ஒரு மனிதனிடத்தில் இருக்கும் மோசமான ஆயுதம் என்னவெனில், தமது இரு தாடைகளுக்கு மத்தியில் அவன் மறைத்து வைத்திருக்கும் பொய் பேசும் நாவு தான்.

    பொய் என்பது ஒரு கொடிய வியாதி. அது இல்லாததை உருவாக்கும்; இருப்பதை இல்லாமல் ஆக்கும். அது சத்தியத்தை அசத்தியமாக காட்டும்; அசத்தியத்தை சத்தியமாக நிலைநாட்டும். நன்மையை தீமையாக மாற்றும்; தீமையை நன்மையாக மாற்றும்.

    ஒட்டு மொத்தத்தில் அது கொடிய நரகத்தின் வழிகாட்டி. நரகத்தை கண் முன் காட்டும் நாள்காட்டி. நரகத்தில் தள்ளும் ஆள்காட்டி.

    'பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிகாட்டும்; தீமை நரகத்திற்கு வழிகாட்டும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

    'நான்கு விஷயங்கள் கோபத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும். அவை: தற்பெருமை, பொறாமை, கோள் சொல்லுதல், பொய் ஆகும்'.

    ஒரு பொய்யன் தனது வாழ்நாளிலேயே கேவலத்தை எதிர்கொள்வான். அல்லது மரணத்திற்கு பிறகு கேவலத்தை சந்திப்பான். இப்படிப்பட்ட கேவலமே அவன் பொய்யன் என்பதற்கு சாட்சியாகும்.

    பொய் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

    'நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்யுரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி ஒப்படைத்தால் மோசடி செய்வான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    பொய் சாட்சியம் கூறுவது, பொய் பேசுவது சாதாரண பாவம் இல்லை. அது பெரும்பாவமாக பார்க்கப்படுகிறது.

    'பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என நபி (ஸல்) கேட்டுவிட்டு, 'அதுதான் 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம் கூறுவது' என்றார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

    'யார் பொய் சத்தியம் செய்து ஒரு இறைநம்பிக்கையாளரின் உரிமையை அபகரித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்கு தடை செய்து விட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)

    'மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேச மாட்டான். 1) செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், 2) பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவன், 3) தமது கீழங்கியை (கணுக்காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவன் என நபி (ஸல்) கூறினார்கள்'.

    'ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டு யார் பொய் சத்தியம் செய்கிறாரோ அவர் (மறுமையில்) தம் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்).

    பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

    ஒருவேளை பொய் பேசுவதாக இருந்தால் பின்வரும் மூன்று காரணங்களுக்கு மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது: 'மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர. 1) போர் தந்திரத்திற்காக சொல்லப்படும் பொய், 2) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்து வதற்காகச் சொல்லப்படும் பொய், 3) குடும்ப ஒற்றுமைக்காக கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு குல்சும் (ரலி), நூல்: முஸ்லிம்)'

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • இனிய தருணங்களில் இரு தரப்பினரின் பிரார்த்தனைகளும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.
    • மருந்துகளுக்குள்ள ஆற்றலை விட மந்திரச் சொற்களுக்குரிய ஆற்றல் அபாரமானவை; அதீத சக்தி கொண்டவை.

    முஸ்லிம் ஒருவர் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யவேண்டிய ஆறு முக்கியமான கடமைகளில் 'நோயாளிகளை சந்திப்பது' என்பதும் ஒன்று.

    "நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் நோயாளிகளை சந்தித்தால் அவரது உயிர் விஷயத்தில் ஆறுதலான சொற்களை சொல்லுங்கள், அதனால் அவரது மனம் ஆறுதல் பெறும்". (நூல்: இப்னு மாஜா)

    "நீங்கள் நோயாளிகளை சந்திக்கச் சென்றால் அமர்வதை குறைத்துக்கொள்வதும், வீண் பேச்சை சுருக்கிக்கொள்வதும் நபிவழி ஆகும்" என இப்னு அப்பாஸ் ரலி கூறியுள்ளார்கள்.

    "விரைவாக எழுவதுதான் உடல் நல விசாரிப்பில் சிறந்தது" என நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: பைஹகி)

    அதாவது நீண்ட நேரம் பேசாமல் விரைவாக எழுந்து வந்து விடவேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் தனது நடைமுறையாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள் என்று இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

    "நபிகள் நாயகம் கூறினார்கள்: நாளை மறுமையில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் கேட்பானாம்... ஆதமின் மகனே, நான் உடல் நலமில்லாமல் இருந்தேனே... ஏன் நீ என்னை சந்திக்க வரவில்லை...?". "இறைவா... நீயே இந்த அகில உலகின் அதிபதியாக இருக்கிறாய்... உன்னை நான் எப்படி உடல் நலம் விசாரிக்க வர முடியும்?" என்று கேட்க, அப்போது அல்லாஹ் சொல்வானாம்: "இன்ன அடியான் உடல் நலமில்லாமல் இருந்தானே... அன்று அவனை நீ சந்தித்திருந்தால் அங்கு என்னை நீ சந்தித்திருப்பாய்..." என்று. (நூல்: முஸ்லிம்)

    ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல ஒரு நோயாளியின் உடல்நல விசாரிப்பிலும் கூட இறைவனைக் காணமுடியும் என்று இந்த நபிமொழி மூலம் நாம் அறிய முடிகிறது. இப்படி இறைவனை நாம் காண்பதற்கு காரணமாக இருப்பதால் தான் 'காய்ச்சலை திட்டாதீர்கள்' என்று நபிகள் நாயகம் சொன்னார்களோ என்னவோ...?.

    ஏனெனில், காய்ச்சல் என்பது நமது உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலில் முன்னறிவிப்பு செய்யும் செயல்களில் ஒன்று தான் அது. எனவே அதை திட்டுவது என்பது ஒரு அறிவாளியின் அழகிய செயலல்ல, என்பதைத் தான் நபிகள் நாயகம் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தான் நோயாளி என்பதல்ல... சாதாரண கண் வலி ஏற்பட்டவரும் கூட நோயாளி தான்.

    "எனக்கு கண் வலி ஏற்பட்டிருந்தது, என்னை நலம் விசாரிப்பதற்காக நபிகள் நாயகம் வந்தார்கள்" என்று ஜய்து இப்னு அர்கம் என்ற நபித்தோழர் கூறியுள்ளார்கள்.

    ஆக நோய் என்பதில் கூடுதல் குறைவு இருந்தாலும் அதற்கான விசாரிப்பில் நாம் வேறுபாடு காட்டக்கூடாது என்பதைத் தான் நபிகள் நாயகம் நமக்கு காட்டித் தருகிறார்கள்.

    "சகோதரர் ஒருவர் மற்றொரு சகோதரரை நலம் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பி வரும் வரை சுவனப்பூஞ்சோலையில் இருக்கிறார்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)

    ஆனால் இன்றைக்கு நாம் நமது சுகநல விசாரிப்புகளை எப்படியெல்லாம் மாற்றி வைத்திருக்கிறோம் என்பது ஒருகணம் சிந்திக்கத்தக்கது. நமக்கு வேண்டியவர்கள், பணம் படைத்தவர்கள், தேவைப்படுபவர்கள், போகாவிட்டால் தவறாக எடுத்துக் கொள்பவர்கள் என நமக்குள் ஒரு பெரும்பட்டியலே போட்டு வைத்திருக்கிறோம்.

    ஆனால் நபிகள் நாயகம் எந்த ஒரு நோயாளியையும் பட்டியல் போட்டு பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை.

    தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல் நலமற்றிருந்த போது நபிகள் நாயகம் அவனது வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தார்கள் என்பது மறக்க முடியாத வரலாறு. (நூல்: புகாரி)

    எனவே நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கும் முறையில் நாம் பாகுபாடு பார்க்கக்கூடாது. நபிகள் நாயகமும் தம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பின்வரும் நிகழ்வுகளின் மூலம் அறியலாம்.

    "அன்னை ஆயிஷா அறிவிக்கிறார்கள்: 'உடல் வலிக்கிறது' என்று சொல்லிக்கொண்டு யாராவது நபியிடம் வந்தால் அவரை தமது வலது கரத்தால் தடவிக்கொடுத்து இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்: "மக்களின் இறைவனே, இவரது சிரமத்தை நீக்கு. நீ தான் குணமளிப்பவன், இவருக்கு குணமளி. நீ அளிக்கும் குணம் தான் நோய் நொடியில்லாத சிறப்பான குணமாகும்". (நூல்: புகாரி, முஸ்லிம்)

    அவ்வாறே அந்த நோயாளிகள் அந்த கடினமான நேரத்தில் நமக்காகச் செய்யும் பிரார்த்தனையும் உடனடியாக ஏற்கத்தக்கதாகும்.

    "நபிகள் நாயகம் கூறினார்கள்: நீ நோயாளியை சந்தித்தால் உனக்காக அவரிடம் துஆ செய்யச் சொல், ஏனெனில் அவரது பிரார்த்தனை வானவர்களின் பிரார்த்தனையைப் போன்றதாகும்". (நூல்: இப்னு மாஜா)

    ஆக, நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் போது அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வதைப் போல் நாமும் அவர்களிடமிருந்து அவர்களின் துஆவை பெற்றுக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில், கடினமான காலங்களில் அவர்கள் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருக்கிறார்கள்,

    இப்படிப்பட்ட இனிய தருணங்களில் இரு தரப்பினரின் பிரார்த்தனைகளும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. மருந்துகளுக்குள்ள ஆற்றலை விட மந்திரச் சொற்களுக்குரிய ஆற்றல் அபாரமானவை; அதீத சக்தி கொண்டவை.

    வாருங்கள்... நோயாளிகளிடம் பாரபட்சம் இன்றி உடல் நலம் விசாரிப்போம்...! சமூகத்துக்கு பலம் சேர்ப்போம்...!!

    மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

    • இன்று நேர்ச்சை வினியோகம் செய்யப்பட உள்ளது.
    • பல மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த புகாரி ஷெரிபு சபையின் 96-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் சபை வளாகத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையை தூத்துக்குடி முத்து கதீஜா மஸ்ஜித் பள்ளிவாசல் கத்திபு எஸ்.எம்.ரஹ்மத்துல்லா ஆலிம் நிகழ்த்தினார்.

    உலக அமைதிக்காகவும், நல்ல மழை வேண்டியும் இந்த பிரார்த்தனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தொடர்ந்து மாலையில் சன்மார்க்க சபையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வியாழக்கிழமை) காலை நேர்ச்சை வினியோகம் செய்யப்பட உள்ளது. அபூர்வ துஆ பிரார்த்தனையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி, காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் தலைவர் செய்யது அப்துர் ரகுமான், செயலாளர் வாவு முஹ்தஸிம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் இளவரசு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் வாவு சம்சுதீன், முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மீரா சாஹிப், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி என்.ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புகாரி ஷரிபு சபை தலைவர் அகமது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், வைபவ கமிட்டி நிர்வாகிகள் செய்யது முகமது சாஹிப், ஜகுபர் சாதிக், முகமது தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • நிம்மதியான வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகிறோம்.
    • நிம்மதியைத்தேடி நாம் எங்கும் அலையவேண்டியதில்லை.

    மனித வாழ்க்கை விசித்திரமானது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது படைத்த ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குள் அந்த மனிதன் போடும் திட்டங்களும், ஆடம்பர வாழ்க்கையும், ஆணவச்செயல்களும் கணக்கில் அடங்காதவை.

    இந்த நிமிடம் இருக்கும் மகிழ்ச்சி அடுத்த விநாடியே மாறிப்போகும் நிலையை நம்மில் பலர் அனுபவித்து இருக்கலாம். இந்த நொடியில் காணப்படும் துன்பம், வலி. வேதனைகள் இறைவனின் அருளால் அடுத்த விநாடியே மாறி சுகம் கிடைத்ததையும் பலர் அறிந்திருக்கலாம்.

    இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நம் வாழ்வும், வளமும், நலமும் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை. அந்த நிம்மதியான வாழ்வு கிடைக்க நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது. கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை முறையும் நமக்கு படிப்பினைகளை கற்றுத்தருகிறது.

    நிம்மதியான வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதற்கு தடையாக நமது பேராசைகள், ஆணவம், உறவுகளையும், நண்பர்களையும் ஒதுக்கி வைத்து வாழ்வது போன்ற தீய குணங்கள் உள்ளன.

    'கடப்பாரையை சாப்பிட்டு விட்டு சுக்கு கஷாயம் சாப்பிட்டால் எப்படி ஜீரணமாகும்?' என்று கிராமத்தில் பழமொழி உண்டு. அதுபோல மலையளவு பாவங்களையும், பாவச்செயல்களையும் செய்துவிட்டு, இறைவன் காட்டிய வழியில் வாழாமல் மனம்போன போக்கில் வாழ்ந்து விட்டு மன நிம்மதியைத்தேடினால் அது எப்படி கிடைக்கும்?.

    பணம், அழகிய வீடு, அழகான மனைவி-மக்கள், உயர்ந்த பதவி போன்றவை இருந்தால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்பது பலரது எண்ணம். ஆனால் இதுவெல்லாம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. இவை இருந்தால் இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் மிகப்பெரிய தவறு.

    நமது தேடல்களும், எண்ணங்களும், ஆசைகளும் தான் நமது வாழ்வின் மகிழ்ச்சியை நிர்ணயம் செய்கின்றது. நிம்மதியைத்தேடி நாம் எங்கும் அலையவேண்டியதில்லை. அது நம்மிடம், நம் வாழ்க்கை முறையிலேயே உள்ளது. இறைவனின் நெருக்கம் தான் நமது வாழ்வை முழுமையாக்குகின்றது.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    "உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர. அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடு இருப்பார்கள்". (திருக்குர்ஆன் 34:37).

    உயர்ந்த மாளிகைகளில் வாழும் வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கையல்ல. நாம் செய்யும் இறைவணக்கம், நற்செயல்கள் போன்றவற்றின் மூலம் இறைவனின் நெருக்கத்தையும், அன்பையும் பெறும் போது கிடைக்கும் நிம்மதி தான் மிகவும் சிறந்தது என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது.

    யார் அல்லாஹ்வின் மீதும், அவன் அருளிய திருக்குர்ஆன் வசனங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தார்களோ அவர்கள் வாழ்வு நிம்மதி நிறைந்ததாக இருக்கும். இதையே கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு விளக்குகிறது:

    "இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் 'ஸகீனத்' (நிம்மதியை) அல்லாஹ் தான் இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்". (திருக்குர்ஆன் 48:4).

    அன்பு சகோதரர்களே, இந்த திருக்குர்ஆன் வசனம் கூறும் பொருளை நாம் அனைவரும் மிகவும் கவனமுடன் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தால், அவன் அருளால் நமக்கு நிம்மதியைத் தருவான். இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் மிகச்சிறந்த சொர்க்க வாழ்வைத்தருவான். இதுபற்றி தனது திருமறையிலே அல்லாஹ் நமக்கு இவ்வாறு உறுதி அளிக்கின்றான்:

    "அல்லாஹ், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது". (திருக்குர்ஆன் 48:5).

    அல்லாஹ்விடத்தில் நாம் மகத்தான வெற்றியைப்பெற வேண்டுமா?. இந்த கணம் முதல் இறைவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறையச்சத்துடன் வாழ்ந்து இறைவன் காட்டிய வழியில் நமது வணக்க வழிபாடுகளை, வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொண்டு நிம்மதி பெறுவோம், பாவங்களை களைந்து சுவனத்தை நோக்கி நடைபோடுவோம்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல்காதர், சென்னை.

    • சுஹைல் தனது 60 -ம் வயதில் நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
    • சுஹைல் (ரலி) நபிகளாரின் மீது பேரன்பு கொண்டவராகவே விளங்கினார்.

    ஏக இறைவன் அல்லாஹ்வின் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வசித்த காலம் அது. அப்போது வாழ்ந்த மக்கள் தவறான வழிகளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரையும் ஓரிறைக்கொள்கையின் பக்கம் சேர்க்க நபிகளார் பிரசாரம் செய்துகொண்டு இருந்தார்.

    அப்போது, சுஹையில் இப்னு அம்ர் மக்காவின் குரைசியர் இன மக்களிடம் செல்வாக்கு மிக்கவராகவும், நாவன்மைமிக்க பேச்சாளராகவும் விளங்கினார். அபூயசீத் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.

    இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு இவர் நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையினை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றவர். பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக போரிட்டவர். பின்னர் அந்தப்போரில் இவர் போர்க்கைதியாகவும் பிடிக்கப்பட்டார்.

    கைதியாக இருந்த சுஹைலைக் கண்ட நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாத்திற்கு எதிராக துஷ்பிரச்சாரம் செய்த சுஹைலின் முன்பற்களை உடைத்து விடவேண்டும்" என நபிகளாரிடம் அனுமதி கேட்டார்கள்.

    ஆனால் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்ட நபிகளார், "உமரே! சுஹைலை விட்டு விடும். நான் எவரையும் சித்திரவதை செய்ய அனுமதிக்க மாட்டேன். ஒருகாலம் வரும் அப்போது சுஹைல் உங்கள் எல்லோரின் உள்ளங்களும் குளிரும்படியாக நடந்து கொள்வார்" என்று ஒரு முன்னறிவிப்புச் செய்தார்கள்.

    புத்திக் கூர்மையும், சாதுரியமான சொல்லாற்றலும் வாய்ந்த சுஹைல் இஸ்லாத்தை ஏற்றிட வேண்டும் என்று நபிகளார் விரும்பினார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

    ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது குரைசிகளின் சார்பாக நபிகளாரிடம் பேச்சுவார்த்தை நடத்திட புதைல், உர்வா பின் மஸ்வூத் என சிலர் வந்தனர். ஆனால் அவர்களால் உடன்படிக்கையை நிறைவு செய்ய முடியவில்லை. அதனைத்தொடர்ந்து சுஹைல் பேச்சுவார்த்தைக்கு குரைசிகளால் அனுப்பி வைக்கப்பட்டார். தனது சாதுரியமான பேச்சுவார்த்தையினால் நபிகளாருடனான உடன்படிக்கையை நிறைவு செய்தார்.

    அந்த உடன்படிக்கை குரைசிகளுக்கு சாதகமாகவும், முஸ்லிம்களுக்கு பாதகமாகவுமே அமைந்திருந்தது. இருந்தபோதிலும், சமூக நல்லிணக்கத்திற்காக நபிகளார் பெரிதும் விட்டுக்கொடுத்தே அந்த உடன்படிக்கையை ஏற்று அதன்படி நடந்து கொண்டார்கள்.

    குரைசிகள் சார்பாக அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவரும் இந்த சுஹைல் இப்னு அம்ர் தான். விட்டுக்கொடுத்து நபிகளார் செய்த இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையே, பிற்காலத்தில் இறையருளால் இஸ்லாத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தது.

    மக்காவின் வெற்றிக்குப் பின்னர் ஏகத்துவத்திற்கு எதிராக மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட குரைசிகளிடம் நபிகளார், "குரைசிகளே, நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று வினவியபோது, அதற்கு பதில் தந்தவரும் இந்த சுஹைல் தான்.

    "எங்களை நீங்கள் நல்லவிதமாக நடத்த வேண்டும். ஏனென்றால் நீங்கள் கண்ணியமான எங்களது சகோதரரின் மகன்" என்று நபிகளாரின் உள்ளத்தை தொடும்படியாக பேசினார். சகிக்க முடியாத கொடுமைகள் புரிந்த அந்த நிராகரிப்பாளர்களை தண்டிக்கும் வாய்ப்பு இருந்தும் கருணைக்கடலான நபிகளார் அவர்களை மன்னித்தார். அப்போது, "யூசுப் நபி தன் சகோதரர்களை மன்னித்ததை போன்று நானும் இன்று உங்களை மன்னித்து விட்டேன்" என்றார்கள்.

    இது உலகச் சரித்திரத்தில் மன்னிப்பின் மாண்பினை மனித குலத்திற்கு பறைசாற்றிடும் நபிகளாரின் வைர வரி வார்த்தைகளாகும். மேலும், இந்த வாசகம் "மன்னிப்பைக் கொண்டே இந்த உலகம் அமைதி அடையமுடியும்" என்பதை நமக்கு நினைவுபடுத்தித் தருவதாகவும் அமைந்துள்ளது.

    மக்காவின் வெற்றிக்கு பின் ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்த தனது மகன்களான அப்துல்லாஹ் மற்றும் அபூஜந்தல் ஆகியோரின் உதவியுடன் நபிகளாரை அணுகி சுஹைல் தனது 60 -ம் வயதில் நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

    குறுகிய காலமே நபிகளாருடன் இணைந்து செயல்பட்டாலும் சுஹைல் (ரலி) நபிகளாரின் மீது பேரன்பு கொண்டவராகவே விளங்கினார்.

    நபிகளாரின் மறைவுக்குப் பின் மக்காவில் பலர் இஸ்லாத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்தி, சுஹைல் (ரலி) அவர்கள் ஆற்றிய உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மதம் மாற எண்ணம் கொண்டிருந்த மக்களிடையே அவர் இவ்வாறு பேசினார்:

    "இஸ்லாம் மார்க்கம் நபியின் மறைவுடன் ஓய்ந்து நின்று போய் விடவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அம்மார்க்கம் சந்திரனும் சூரியனும் தோன்றி, போகும் இடமெல்லாம் நீடித்து சென்றடையும் சத்திய மார்க்கமாகும்".

    இவ்வாறு அவர் உறுதியாகப்பேசி அந்த மக்களின் இதயங்களில் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பையும், உறுதியையும் ஏற்படுத்தினார்.

    இது, நபிகளார் உமர் ரலியிடம் சுஹைல் (ரலி) பற்றி முன்னதாகச்சொன்ன முன்னறிவிப்பினை உண்மைப்படுத்துவதாக அமைந்தது.

    சொல்லாற்றல் வாய்ந்த நபித்தோழர் சுஹைல் இப்னுஅம்ர் (ரலி), இறுதிவரை தன்னை இறைவழியில் அர்ப்பணிப்புடன் தியாகம் செய்து மறைந்தார்.

    மு.முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    • நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
    • இறைவனை நம்பி இருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருப்பதோ மிக மேலானதும் நிலையானதுமாகும்.

    அரூப உலகில் இறைவனிடமிருந்து தொடங்கிய மனிதன் மீண்டும் தன்னைப் படைத்த இறைவனை நோக்கிப் பயணிப்பதே உலக வாழ்வாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நம்முடைய திரும்புதலும் (மீட்சியும்) அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது". (திருக்குர்ஆன் 2:156)

    கருவில் அமைவதற்கு முன் மனிதன் இன்னப்பொருள் என்று கூற முடியாத ஒரு அம்சமாகவே இருந்தான். வானுலகில் இறைவனிடம் அடைக்கலப் பொருளாக இருந்த மனிதன் இறையருளால் அரூப உலகில் நின்றும் சொரூப உலகிற்கு வருவதற்காக இறை நாட்டப்படி பல்வேறு நிலைகளை கடந்து இறுதியில் தாயின் கருவறையில் வந்து குடிபுகுந்தான். கருவறையில் அவனுக்கு வேண்டியதை வேண்டியபடி இறைவன் கொடுத்து வந்தான். இறைவனைத் தவிர அவனுக்கு அங்கு வேறு எந்த உறவுகளும் கிடையாது.

    உரிய காலம் கனிந்தவுடன் மனிதன் உலகில் வந்து பிறக்கின்றான். அப்படி பிறக்கும் மனிதன் சிசுவில் மிக பலகீனமானவனாகவே காணப்பட்டான். கண் உண்டு, ஆனால் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியாது. வாய் உண்டு, ஆனால் அவனால் பேச முடியாது. காது உண்டு, ஆனால் அவனுக்கு கேள்வியின் ஞானம் கிடையாது. அழுகை ஒன்றே அவனது தேவைகளை பூர்த்தி செய்கின்ற ஒரே ஆயுதமாக இருந்தது.

    அல்லாஹ் என்ற ஏகப் பரம்பொருள் அன்னையின் மனதில் அளப்பரிய அன்பினை ஏற்படுத்தி மனிதனை அரவணைத்து காத்து வளர்த்தான். உலகில் வந்ததும் அவனுக்கு தாய், தந்தை, சகோதரர்கள் போன்ற உறவுகள் ஏற்படுகிறது. இந்த உறவுகள் வளர வளர தனது பூர்வீகமான இறைவனை மனிதன் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்குகிறான். அவனது ஐம்புலன்களின் ஆற்றலும் வலுவடைந்ததும் ஒரு புது உலகத்தையே அவன் காண்கின்றான்.

    அவ்வாறு கண்ட அந்த உலகம் தன்னுடன் எப்போதும் நிலையாக இருக்கப்போவதாக எண்ணி அதன் மாய வலையில் சிக்குகின்றான். அதனால் நீண்ட நெடிய மறுஉலக வாழ்க்கையை மறந்தவனாக வாழ்கின்றான்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு இயம்புகிறது: "இங்கு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் நிலையற்ற இவ்வுலக வாழ்வின் அற்ப இன்பங்களே. நம்பிக்கை கொண்டு இறைவனை நம்பி இருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருப்பதோ மிக மேலானதும் நிலையானதுமாகும்". (திருக்குர்ஆன் 42:36).

    மதிகெட்ட மனிதன் திருந்துவதற்காக, இறைவன் வேதங்களை தந்து தனது உறவை அவனுக்கு நினைவூட்டிக் காட்டினான். ஆனால் உலகம் மனிதனை மிக இறுக்கமாக பிடித்து ஏமாற்றவே முயல்கிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் படைத்த இறைவனை என்றும் மறக்காமல் இந்த உலகில் வாழ்பவர்கள் பாக்கியவான்களே.

    மு. முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும்.
    • நபிகளார், மக்கள் மத்தியிலே சிறந்த முறையில் வாழ்ந்து காட்டினார்கள்.

    எத்தனையோ கோடி மனிதர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும். நபிகளார் மனிதாபிமானம் மிக்கவராவும், திடமான சித்தம் கொண்டவராவும் இருந்தார்கள்.

    மனித குலத்தில் உதித்த ஒரு மாமனிதராகவே இந்த உலகில் வாழ்ந்து காட்டியவர்கள் நபிகளார். அரபு உலகின் மக்காவில் பிறந்தாலும், தனது இறையியல் கொள்கை மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

    மனித சமுதாயத்தை சமத்துவம் மிக்கதாக மாற்றி அமைப்பதில் மகத்தான வெற்றியும் கண்டார்கள். தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையையும், தனது 6 வயதில் தாயையும் இழந்தார். பெற்றோரை இழந்த அனாதைகளின் உணர்வும், வலியும் எத்தகையது என்பதை நன்கு உணர்ந்ததால், அவர்கள் தன் வாழ்நாள் எல்லாம் அனாதைகள், ஏழைகளிடம் பேரன்புடனும் பரிவுடனும் நடந்து கொண்டார்கள்.

    இளம் வயது முதலே மற்ற குழந்தைகளை போல வீண் விளையாட்டில் நபிகளார் ஈடுபடவில்லை. 'நான் இந்த உலகிற்கு விளையாட்டுக்காக வரவில்லை' என்றார்கள். இறைத்தேடலும், ஆழமான சிந்தனையும் கொண்ட நபிகளார், மக்கள் மத்தியிலே சிறந்த முறையில் வாழ்ந்து காட்டினார்கள்.

    நபிகளாரின் இயல்பான குணமே பிறருக்கு உதவுவது தான். அதனால் தன்னிடம் கேட்பவர்களுக்கு, 'இல்லை' என்று சொல்லாமல், இருப்பதை கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

    அன்றைய மக்கள், நபிகளாரை 'அல் அமீன்' (நம்பிக்கைக்கு பாத்திரமானவர்), 'அஸ்ஸாதிக்' (சத்தியம் தவறாத உண்மையாளர்) என்றே போற்றினார்கள். 40 வது வயதில் தொடங்கி, நபிகளாருக்கு திருக்குர்ஆன் வேதம் படிப்படியாக இறக்கி அருளப்பட்டது. 'அல்லாஹ்' என்ற ஏகப் பரம்பொருள் குறித்து மக்கள் மத்தியிலே சன்மார்க்கப் பிரசாரம் செய்ததோடு, தன்னை இறைவனின் தூதர் என்றும் நபிகளார் பிரகடனப்படுத்தினார்கள்.

    'மனிதர்கள் எல்லோரும் ஆதமுடைய மக்களே' என்றார்கள். இனத்தாலும், நிறத்தாலும், குலத்தாலும், வேற்றுமை பாராட்டும் தீண்டாமை போக்கிற்கு எதிராக போரிட்டு சமத்துவத்தை நிலை நாட்டினார்கள்.

    ஆண்டியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற உயரியக் கோட்பாட்டை உலகில் நடைமுறை படுத்திக்காட்டினார்கள். பரிசுத்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட பல இன்னல்களையும், துயரங்களையும் தாங்கி, சகித்துக் கொண்டு, சவால்களை பொறுமையுடன் எதிர்கொண்டு, அதில் இறையருளால் வெற்றி கண்டார்கள்.

    எழுதப்படிக்கத் தெரியாத நபிகளார், நன்றாக படித்த பண்டிதர்களும் கூற முடியாத பல பேருண்மைகளை எல்லாம் உலகிற்கு எடுத்துக்கூறினார்கள். மக்கா, மதீனாவின் மன்னராக இருந்த போதும் எளிமையாக வாழ்ந்தார்கள்.

    தனது 63-வது வயதில் இந்த உலகை விட்டு நபிகளார் மறைந்தாலும், அவர்களது சொல்லும், செயலும், நடைமுறைகளும், உலகெங்கும் அவர்களை பின்பற்றும் மனிதர்களின் மனங்களில் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது.

    இத்தகைய இவர்களது உயர்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

    "(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?. மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம். (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது. மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்". (திருக்குர்ஆன் 94:1-4)

    மு.முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    • பாவச் செயல்களில் பொறுமை காட்ட வேண்டும்.
    • நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

    உலக மக்களுக்கு சாந்தியும், சமாதானத்தையும் கற்றுத்தரும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. மனித சமுதாயத்திற்கு நற்பண்புகளை கற்றுத்தரும் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகள் குறித்து தங்களது தோழர்களிடமும், தங்களை சந்திக்க வருபவர்களிடம் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.

    'பிறரிடம் சொல்லாலும், செயலாலும் அழகிய நற்பண்புகளை பொழிய வேண்டும். நாவின் மூலம் பிறருக்கு நோவினை செய்பவன் முஸ்லிமில்லை' என்பது நபிகளார் அடிக்கடி தங்களது தோழர்களிடம் கூறும் நற்செய்தியாகும்.

    அதுபோல பொறுமை குறித்தும் நபிகளார் அடிக்கடி வலியுறுத்தி கூறி உள்ளார்கள். இதுபற்றி நபிகளார் கூறி இருப்பதாவது:

    பொறுமை என்றால் மூன்று நிலைகளில் இருக்க வேண்டும். அதில் முதலாவது இறைவனை வணங்குவதில் என்ன சிரமங்கள் இருப்பினும் அதை செய்து முடிக்க வேண்டும். வேலைப்பளு, சோம்பேறித்தனம் போன்றவற்றால் பொறுமை இழந்து இறை வணக்கத்தை விட்டுவிடக் கூடாது.

    "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்", என்பது திருக்குர்ஆன் (2:153) வசனமாகும்.

    அடுத்தது, பாவச் செயல்களில் பொறுமை காட்ட வேண்டும். அதாவது, எவ்வளவு தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அது பாவமான காரியம் என்றால், அதை செய்யாமல் பொறுமை காக்க வேண்டும். பொறுமையிழந்து அதை செய்து விட்டால், கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். பின்னர் அந்த அவப்பெயரை நீக்குவது கஷ்டமாகி விடும். நல்லவராக வேண்டும் என்றால் கடினமான உழைப்பு தேவை. ஆனால், தீயவனாக வேண்டும் என்றால் சிறு தவறு செய்தால் போதும். எனவே பாவங்களைச் செய்யாமல் பொறுமை காக்க வேண்டும்.

    "பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" என்று திருக்குர்ஆன் (6:164) எச்சரிக்கின்றது.

    மூன்றாவதாக, மனிதர்கள் தங்களுக்கு சோதனை ஏற்படும் காலங்களில் பொறுமை காக்க வேண்டும். நம் வாழ்வில் எத்தனை கஷ்டம் வந்தாலும், 'என்னைப் படைத்தவன் என்னை எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணி இருக்கிறானோ அப்படியே நடக்கும்' என்ற உறுதியான எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் சோதனையிலும் சாதனை படைக்க முடியும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

    "பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூருவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்" (திருக்குர்ஆன் 11:114).

    "நபியே! எந்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்". (திருக்குர்ஆன் 11:115).

    "இறையச்சத்துடன் யார் நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்" (திருக்குர்ஆன் 22:23).

    இம்மையிலும் மறுமையிலும் ஒருமனிதன் உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்றால் அதற்கு உதவும் நற்பண்புகள் எவை? என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அந்த நல்வழியில் நாம் நடந்தால் இறைவனின் திருப்பொருத்தத்தை பெறமுடியும்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை

    • நாம் அனைவரும் அழகிய நன்மைகளை செய்வோம், அல்லாஹ்வின் நேசத்தைப்பெறுவோம்.
    • ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை என்ற நிலையில் தான் மனித வாழ்வு அமைந்துள்ளது.

    ஏக இறைவன் அல்லாஹ்வின் படைப்பிலே சிறந்த படைப்புகளில் ஒன்றாக மனித இனம் திகழ்கிறது. அதே நேரத்தில் இந்த உலக வாழ்வு ஒரு சோதனைக் களமாகவே மனிதனுக்கு அமைந்துள்ளது.

    பல்வேறு வகையான இன்பங்கள், சுகங்கள், துக்கங்கள், சோதனைகள் என்று அனைத்து வகையிலும் இம்மை வாழ்க்கையில் மனிதன் சோதிக்கப்படுகின்றான்.

    பணம் இருப்பவருக்கு உடல் நலம் இருப்பதில்லை. வசதியானவருக்கு பிறருக்கு கொடுக்கும் மனம் வருவதில்லை. கோடிகளில் புரண்டாலும் மனித மனம் ஆசையின் பின்னோக்கித்தான் பயணிக்கிறது. அதேபோல வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வோம் என்ற எண்ணம் கொண்ட மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை என்ற நிலையில் தான் மனித வாழ்வு அமைந்துள்ளது. இதனால் மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களிடம் இருப்பதைக்கொண்டு மன நிறைவு காணாமல் இல்லாத ஒன்றைத்தேடி அலைகிறார்கள். அவர்கள், தங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனை நினைக்க மறந்து விடுகிறார்கள்.

    உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பதை மக்கள் எளிதில் மறந்துவிடுகிறார்கள். இறைவனின் அருளால் தான் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கின்றது என்பதை உணராமல் தங்களது அறிவால், முயற்சியால் மற்றும் பிற செயல்களால் தான் எல்லாம் கிடைத்தது, கிடைக்கின்றது என்று அறியாமையுடன் இருக்கிறார்கள். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    "வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத் தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா?" (திருக்குர்ஆன் 2:107)

    "இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும்". (திருக்குர்ஆன் 22:11)

    உலக வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் அல்ல. ஒவ்வொரு உயிரினமும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை அடைந்தே தீரும். இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. வாழும் காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம், நமது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதற்கு ஏற்பவே நாம் நினைவுகூரப்படுவோம். அப்படி வாழ்ந்ததால் தான் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றளவும் உலக மக்களால் சிறந்த முறையில் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றி வாழுவதே சிறந்த உலக வாழ்க்கை.

    மனித வாழ்க்கையில் வரும் இன்பங்கள் மட்டுமல்ல, சோதனைகளும் இறைவனால் தான் அனுப்பப்படுகிறது. இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன் இறையச்சத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மனிதன் சோதிக்கப்படுகின்றான். இறைவனின் இந்த சோதனைகள் குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

    "நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்". (திருக்குர்ஆன் 8:28).

    இறையச்சத்துடன் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    "இறையச்சம் உள்ளவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக்கொள்ளக்கூடியவர்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிக்கக் கூடியவர்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:134)

    நாம் அனைவரும் அழகிய நன்மைகளை செய்வோம், அல்லாஹ்வின் நேசத்தைப்பெறுவோம்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

    • பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்.
    • இறையருளைப்பெற்று இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களைப்பெறுவோம், ஆமீன்.

    தான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு. அதிலும் மனித மனம் பேராசை மிக்கது. 'எதிலும் வெற்றி, எல்லாவற்றிலும் வெற்றி' என்ற எண்ணமே இன்றைய மனித சமுதாயத்தில் மேலோங்கி இருக்கிறது.

    ஆனால், எல்லாரும் வெற்றியாளர் ஆகிவிட முடியுமா?, எல்லோரும் பெரும் பாக்கியம் பெற்றவர்களாக ஆக முடியுமா?

    ஆம், முடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறது இஸ்லாம். அத்துடன் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

    இதற்கு முதலில் நீங்கள் ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், அவனை முறைப்படி வணங்க வேண்டும். இறைவன் வகுத்த வழியில் உங்கள் வாழ்க் கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    ஈமான் (இறையச்சம்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்டது இஸ்லாம். இந்த கடமைகள் குறித்த விவரங்கள் உள்பட மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று திருக்குர்ஆன் விரிவாக எடுத்துரைக்கிறது.

    ஒரு முஸ்லிம் இந்த கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், இஸ்லாமிய வழியில் மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நபிகள் பெருமகனார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டி, நமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

    அவற்றை பின்பற்றி நடந்தால் நமது வாழ்க்கையும் வெற்றியாகும், நாமும் வெற்றியாளர்களில் ஒருவராக, பெரும்பாக்கியம் நிறைந்தவர்களாக இந்த உலகில் வாழ முடியும். அதுமட்டுமின்றி மறுமையிலும் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்பிக்கை அளிக்கிறது திருக்குர்ஆன்.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    "மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்". (திருக்குர்ஆன் 2:21.)

    "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்". (திருக்குர்ஆன் 24:52)

    அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து வந்தால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்:

    "(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். மேலும், அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன்றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள் தாம்". (திருக்குர்ஆன் 24:55).

    "(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்" (திருக்குர்ஆன் 24:56).

    "பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல" (திருக்குர்ஆன் 2:45).

    வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இறைவன் நமக்கு காட்டியுள்ள இந்த வழிகளை பின்பற்றி வாழ்வோம், இறையருளைப்பெற்று இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களைப்பெறுவோம், ஆமீன்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

    • வரலாற்றில் அதிகமாக பேசப்படாத ஒரு நபித்தோழர் உண்டு.
    • நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

    அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகளார் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

    வரலாற்றில் அதிகமாக பேசப்படாத ஒரு நபித்தோழர் உண்டு. ஜுலைபீப் என்பது அவரது பெயராகும். அவரது முகம் மற்றும் உடல் தோற்றம் அழகு குறைந்ததாக காணப்பட்டது. இதனால் இவருக்கு எவரும் பெண் தர முன்வரவில்லை. அவரது உணர்வுகளை புரிந்து கொண்ட நபிகளார் குறிப்பிட்ட ஒரு வீட்டில் பெண் இருக்கிறாள். நீர் போய் அவ்வீட்டில் பெண் கேளும் என்றார்கள்.

    அந்த வீட்டிற்கு சென்று ஜுலைபீப் பெண் கேட்டார். அந்த வீட்டார் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள். மனமுடைந்த நிலையில் திரும்பி வந்த ஜுலைபீப் நடந்தவற்றை நபியிடம் சொன்னார். பின்பு ஜுலைபீப்பை நபிகளார் வேறொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வீட்டிலிருந்தவர் தன் மனைவியிடம் இதுபற்றி ஆலோசித்தார். அப்போது அவரது மனைவி, தன் மகளோ சிறந்த அழகி.

    அப்படிப்பட்டவரை அழகில் குறைந்தவருக்கு திருமணம் செய்து கொடுப்பது சரியாக இருக்குமா? என்று தயங்கினார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த வீட்டுப்பெண் தன் பெற்றோரை அழைத்து இவ்வாறு கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே நம் வீடு தேடி வந்து ஜுலைபீப் பிற்கு பெண் கேட்கிறார்கள். கேட்பது நபிகளார் என்பதால் நான் அதற்கு சம்மதிக்கின்றேன்" என்றார். இதையடுத்து அவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. இவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவும் செல்வச் செழிப்புடையதாகவும் அமைந்தது.

    காலங்கள் பல உருண்டோட, போருக்கான பிரகடம் செய்யப்பட்டது. அப்போரில் ஜுலைபீபும் கலந்து கொண்டார். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற போதிலும் ஜுலைபீப் வீரமரணம் அடைந்தார். யுத்த களத்தில் ஜுலைபீப்பின் உடலை நபிகளார் தேடச் சொன்னார்கள். ஜுலைபீப் (ரலி) ஏழு எதிரிகளுக்கு மத்தியில் வீர மரணமடைந்தவராக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைப் பார்த்த நபிகளாரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

    "இவர் என்னைச் சேர்ந்தவர், நான் அவரைச் சேர்ந்தவன்" என்று நபிகளார் கூறினார்கள். அதன்பின் நபிகளாரே தன் கைகளால் ஜுலைபீபின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்தார்கள். இது ஜுலைபீப்பிற்கு கிடைத்த மகத்தான பெரும் பாக்கியமாகும். அழகும் அழகின்மையும் இறைவன் தந்ததே. எனவே, எதற்காகவும் எவரையும் புறம் தள்ளுவதோ, அல்லது ஒதுக்கி வைப்பதோ கூடாது என்பதையே நபிகளாரின் இந்த வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

    • திருக்குர்ஆனில் சுமார் ஒன்பது இடங்களில் வணிகம், வியாபாரம் குறித்து பேசப்பட்டிருக்கின்றன.
    • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மிகப்பெரிய வணிகர்தான்.

    பொருள்கள்தான் இன்று வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது. கொடுப்பதும்-வாங்குவதும்தான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வணிகத்திற்கு முக்கிய இடத்தை இஸ்லாம் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

    திருக்குர்ஆனில் சுமார் ஒன்பது இடங்களில் வணிகம், வியாபாரம் குறித்து பேசப்பட்டிருக்கின்றன. மத்யன்வாசிகள் என்ற சமூகத்திற்கு அளவையில் சரியாக அளந்துகொடுக்க வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்க சுஐப் எனும் இறைத்தூதரையே அந்த சமூக மக்களுக்கு இறைவன் அனுப்பி வழிகாட்டியிருக்கிறான் என்றால் வணிகத்திற்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

    இவ்வளவு ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மிகப்பெரிய வணிகர்தான். தனது இளமைக்காலத்தின் பெரும்பகுதியை வணிகம் சார்ந்த பயணத்திற்காக அவர் செலவளித்திருக்கிறார். வணிகத்திற்காக நான்கு முறை ஏமனுக்கும், இரண்டு முறை ஷாம் நாட்டிற்கும் சென்று வந்திருக்கிறார்.

    வியாபாரத்தில் நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற நற்பெயர் பெற்று சிறந்து விளங்கியவர் நபியவர்கள். அந்த காலத்தில் வணிகர்கள், தரகர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். நபியவர்கள்தான் வணிகர் (துஜ்ஜார்) சமுதாயமே! என முதலில் அழைத்தார்கள். வணிகர்களுக்கு உண்டான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள். நேர்மையுடனும், நீதியுடனும் நடந்துகொள்ள வலியுறுத்தினார்கள்.

    'உண்மை பேசி நாணயத்துடன் நடந்துகொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள்' என்று நபியவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி).

    'விற்பதிலும், வாங்குவதிலும் மென்மையாக நடந்துகொண்ட மனிதரை சுவர்க்கத்தில் அல்லாஹ் நுழைய வைப்பான்' எனவும், 'கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும், நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர்மீது அல்லாஹ் அருள்பொழிவான்' எனவும் நபியவர்கள் வாக்குறுதி தருகிறார்கள்.

    வியாபாரத்தில்; வணிகத்தில் வெற்றிபெற வேண்டுமானால் நேர்மையாக செயல்பட முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருபொருள் சேதமடைந்திருக்கிறது என்று சொன்னால் அந்தப்பொருளை விற்கக்கூடாது அல்லது அந்த பொருளை விற்கும்பொழுது வாங்குபவர்களிடம் அது சேதமடைந்த விவரத்தை கூறிவிட்டுதான் விற்க வேண்டும். இதுதான் இஸ்லாம் சொல்லும் வழிமுறை.

    இது இன்று பின்பற்றப்படுகிறதா? பொருள் சேதமடைந்திருந்தாலும் பசைபோட்டு ஒட்டி யாருக்காவது விற்று காசாக்குகிறார்கள். காலாவதியாகிவிட்ட பொருளை யாருக்கு தெரியப்போகிறது என்று விற்று காசாக்குகிறார்கள். பொருள்களில் கலப்படம் செய்து விற்று காசாக்குகிறார்கள். எடை குறைவாக போட்டு விற்று காசாக்குகிறார்கள். பொருட்களை பதுக்கி வைத்து தட்டுப்பாடு வரும்போது விற்று காசாக்குகிறார்கள். இப்படித்தான் வணிகம் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

    'அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்பவர்களுக்கு கேடு உண்டாகும்' என்று திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. 'பதுக்கல் செய்பவன் பாவியாவான்' என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

    நபியவர்கள் சொன்னார்கள் 'மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர் தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பொருட்படுத்தமாட்டார்கள்' (நூல்: புகாரி).

    ஒருமுறை நபியவர்களை பார்த்து 'யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம் எது?' என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் 'ஒருவன் தன் கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் இருப்பதும் ஒருவன் நடத்தும் வணிகமும் தான்' (நூல்: முஸ்னது அஹ்மத்).

    நபிகளாரின் கூற்றுப்படி சிறந்த சம்பாத்தியமாக நேர்மையான வணிகம் இருக்கிறது. நபியவர்களின் வலியுறுத்தலின்படி வணிகத்தை, வியாபாரத்தை மோசடி செய்யாமல் நேர்மையுடன் நடத்த வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வணிகத்தை தர்மத்துடன் கலந்து நடத்த வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும். நபியவர்களின் வழிமுறையாகும்.

    வி. களத்தூர் பாரூக்

    ×