search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal affair"

    கள்ளக்காதலினால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கீழ் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கணவனை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #Highcourt #IllegalAffair
    சென்னை:

    சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்தது. இதை சங்கீதா கடுமையாக எதிர்த்தார். இதை மாணிக்கம் கேட்காததால், தன்னுடைய 18 மாத பெண் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.



    இதுகுறித்து மாணிக்கம் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் கோர்ட்டு, தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமை குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணிக்கம் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கில் மாணிக்கம் மீது வரதட்சணை கேட்டு மனைவி சங்கீதாவை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை சங்கீதாவின் தாயார் மட்டுமே சுமத்தியுள்ளார். மற்ற சாட்சிகள் இதற்கு ஆதாரமாக எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்கவில்லை.

    இந்த வழக்கில் வட்டார வருவாய் அலுவலரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் கூட, மனுதாரர் வரதட்சணை கொடுமை செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல பிற சாட்சிகள் வரதட்சணை கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை. அதனால் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அடுத்தப்படியாக தற்கொலைக்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டு மனுதாரர் மீது உள்ளது.

    கள்ளக்காதல் விவகாரத்தில், தன்னுடைய மனைவியை ஆத்திரமூட்டி, அவரை தற்கொலை செய்ய வைத்தார் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை. அந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு உருப்படியான ஆதாரங்களையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. சமீபத்தில் பிரகாஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தால், மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லா சூழ்நிலைகளிலும் கணவனை தண்டிக்க முடியாது. அதேநேரம், இந்த கள்ளக்காதல் விவகாரத்தினை சுட்டிக்காட்டி, விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறி உள்ளது

    மனுதாரர் 2008-ம் ஆண்டே ஜாமீனில் வெளியில் வந்து, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, கள்ளக்காதலினால் மனைவியை தற்கொலைக்கு மனுதாரர் தூண்டினார் என்று மாணிக்கத்தை தண்டிக்க முடியாது. அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.  #Highcourt #IllegalAffair


    நாகர்கோவிலில் ரூ.1½ கோடி மோசடி செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட ஜோடி கள்ளக்காதலர்கள் என்று போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 48). ஈரோடு மாவட்டம் பவானி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வி. இவர்கள் 2 பேரும் கணவன், மனைவியாக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரில் வசித்து வந்தனர். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

    இதுதொடர்பாக ஏராளமானவர்களிடம் சுமார் ரூ.1½ கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடி தம்பதி மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு ரெயிலில் சென்றது தெரியவந்தது.

    நாக்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது ராஜ்குமார், சிவசெல்வி ஆகிய இருவரும் ரெயிலில் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

    விசாரணையில் கணவன்- மனைவியாக வாழ்ந்த ராஜ்குமார், சிவசெல்வி ஆகியோரை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மருங்கூரில் வசித்து வந்த ராஜ்குமார்-சிவசெல்வி ஆகிய இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் நெருக்கமாக பழகி உள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளனர்.

    அதேபோல் முதலில் அவர்களை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு நகைகளை வாங்கிக்கொடுத்து லட்சக்கணக்கில் லாபம் பெறச்செய்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டுள்ளனர். அவ்வாறு லாபம் பெற்றவர்கள் பலரிடம் தாங்கள் லாபம் அடைந்ததையும், அதற்கு காரணமான ராஜ்குமார் மற்றும் சிவசெல்வியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

    இதை நம்பி மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வாசன் (44) உள்பட 11 பேர் ரூ.1½ கோடி பணத்தை கொடுத்துள்ளனர். அதைப் பெற்றுக்கொண்ட ராஜ்குமார், சிவசெல்வி இருவரும் திடீரென மருங்கூரில் தங்கிய வீட்டை காலிசெய்துவிட்டு தலைமறைவாகினர். அவர்கள் பற்றி விசாரித்தபோதுதான் நாக்பூரில் ரெயிலில் சென்றது தெரிய வந்தது. நாக்பூர் போலீசார் மூலம் கைது செய்ய முயன்றபோது அவர்கள் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இவர்கள் 2 பேர் பற்றியும் அவர்கள் வசித்த பகுதியில் விசாரித்தபோது, 2 பேரும் கணவன்-மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் திருமணமாகாதவர்.

    தொழிலில் நஷ்டம் அடைந்த ராஜ்குமாருக்கும், ஏற்கனவே திருமணமான சிவசெல்விக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு குமரி மாவட்டம் வந்த அவர்கள் மருங்கூரில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது உண்மையா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

    நாக்பூர் போலீசார் தம்பதியை சுற்றி வளைத்தபோது கைப்பற்றப்பட்ட பேக்குகளில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுடைய உடல்கள் குமரி மாவட்டம் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை. உறவினர்கள் யாராவது உடல்களை பெற முன்வந்தால் நாக்பூர் போலீசார் ஒப்படைப்பார்கள்.

    இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    ராஜ்குமார் தன்னிடம் பணம் கொடுத்த சிலருக்கு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளில் இருந்து நகைகளை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பழக்கத்தை வைத்து நாகர்கோவில் நகைக்கடைகள் சிலவற்றில் ராஜ்குமார் கடனாக லட்சக்கணக்கில் நகை வாங்கியதாகவும் தெரிகிறது.

    அப்படி சில நகைக்கடைக்காரர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் அவர் ஏமாற்றி மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×