search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HIV Blood"

    பரிசோதிக்காமல் ரத்தம் செலுத்தியதால் எச்.ஐ.வி. கிருமி பாதித்த கர்ப்பிணியை சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து பேசினார். அப்போது, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். #HIVBlood
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 24 வயதான மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

    உடல்நலக்குறைவின் காரணமாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இவருக்கு, கடந்த 3-ந்தேதி ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பதும், அதில் எச்.ஐ.வி. கிருமி கலந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் உறவினர்களும் அங்கு போராட்டம் நடத்தினார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி நேற்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்த காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடமும், சாத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

    கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று விருதுநகர் சென்று அங்குள்ள கலெக்டர் அலுவலத்தில் அந்த கர்ப்பிணியையும், அவரது கணவரையும் நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது அந்த பெண்ணிடம், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததுடன், அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

    பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாநிலம் முழுவதும் 574 ரத்த இருப்பு மையங்களும், 284 ரத்த வங்கிகளும் உள்ளன. அங்கெல்லாம் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. இது தவறுதலாக நடந்துவிட்டது.

    இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் வேதனை அடைந்த முதல்-அமைச்சர் என்னை அழைத்து, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்த ஊழியர்கள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்பேரில் நான் இங்கு வந்து, அந்த பெண்ணையும், அவரது கணவரையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தேன்.

    அந்த பெண்ணின் கணவர், ‘என் மனைவிக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். என் மனைவிக்கும், குழந்தைக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து அவர்களின் உறவினர்கள், வக்கீலுடன் பேசி, உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறினேன். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கவில்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி உள்ளேன். இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    கர்ப்பிணிக்கு ஏற்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்காக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து உள்ள 4 வகையான மாத்திரைகள் வழங்கவும், அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி நிபுணர் களிடம் ஆலோசனை கேட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் 2 தனியார் ரத்த சேமிப்பு வங்கிகளும், 2 அரசு ரத்த சேமிப்பு வங்கிகளும், 7 ரத்த இருப்பு மையங்களும் உள்ளன. அங்கு சேமிக்கப்பட்டுள்ள அனைத்து வகை ரத்தத்தையும் உடனடியாக மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய வந்த வாலிபரிடம், அவரது ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் பெற்றுள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. விதிகளை பின்பற்றி, ரத்த மாதிரியை பரிசோதிக்காத பரிசோதனை கூடத்தின் தொழில்நுட்ப ஊழியர் வளர்மதி நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு அந்த வாலிபர் ரத்தம்தானம் செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்தும், முறையாக பதிவு செய்யாமலும், வாலிபருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் தவறிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குழு ஊழியர்கள் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து மேலும் விசாரிக்க தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர்-செயலாளர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இதில் வேறு அலுவலர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரத்த சேமிப்பு வங்கியில் இருந்து ரத்தம் கொடுக்கப்பட்ட உடன், அந்த ரத்த வகை நோயாளியின் ரத்தத்துடன் ஒத்துப்போகிறதா என்று மட்டும் பார்க்கப்படும். இனி அரசு ஆஸ்பத்திரிகளில், ரத்தம் செலுத்தும் முன் அந்த ரத்தத்தில் நோய் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறியவும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    தவறுக்கு காரணமான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணியும், அவரது கணவரும் போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுத்து உள்ளனர். அதில், இந்த தவறுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்ற விவரம் இல்லை. இதனால் விசாரணை அறிக்கை வந்தபின், அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    உயர்மட்ட குழு விசாரணையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தமிழக மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு போதிய அளவு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்றும் கூறினார்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் தவறு நடப்பது ஏன்? எந்தெந்த இடங்களில் தவறு நடைபெறுகிறது? என்பதை கண்காணித்து பொது சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். #HIVBlood #PregnantWoman
    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #HIVBlood #PregnantWoman

    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இன்று சாத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #HIVBlood #PregnantWoman

    சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைந்துள்ளார். #HIVBlood #PregnantWoman
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 23 வயது பெண் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனக்கு ஏற்பட்ட பாதிப்பு வேறு யாருக்கும் வரக்கூடாது. அரசு ஆஸ்பத்திரியை நம்பிச்சென்ற நான் இன்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளேன்.

    ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் எனக்கு செலுத்தி எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியவர்கள் இதற்கு வேறு ஊசி போட்டு என்னை கொலை செய்திருக்கலாம்.

    தவறு நடந்த பிறகு என்னை சந்திக்கும் மருத்துவ துறையினர் உங்களுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கிறோம். இதனை பெரிதுபடுத்தாதீர்கள். அரசு வேலை மற்றும் நிவாரணம் பெற்று தருகிறோம். என்றெல்லாம் கூறுகின்றனர்.

    அவர்களது தவறான செயலால் இந்த சமுதாயம் என்ன புறந்தள்ளக்கூடாது. எனக்கு தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    மேலும் தவறுசெய்தோர் மீது நடவடிக்கை எடுக்க சாத்தூர் போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க உள்ளேன். என் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் தனது கணவருடன் சென்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் டெல்லியில் இருப்பதால் நாங்கள் வந்தோம். அவர் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில்:-

    எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது அழுது கண்ணீர் வற்றியது தான் மிச்சம். தற்போது எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்படாதது மக்களுக்கு அரசு மருத்துவமனையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

    எங்களுக்கு அரசும் அரசியல் பிரமுகர்களும் உதவ வேண்டும் என்றார்.



    இதற்கிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைந்துள்ளார். #HIVBlood  #PregnantWoman

    எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #HIV #HIVBlood #Pregnantwoman

    விருதுநகர்:

    சாத்தூரில் 8 மாத கர்ப்பிணி பெண் உடல்நலக் குறைவுக்காக பெற்ற ரத்த தானம் அவருக்கு எமனாக மாறி இருக்கும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் கிருமிகளான எச்.ஐ.வி. கிருமிகள் கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதால் தற்போது அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி உள்ளது. மனதை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். 24 வயதாகும் அந்த பெண் குழந்தை பேறுக்காக சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அந்த பெண் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த குறைப்பாட்டை நீக்குவதற்கு உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணிடம் தெரிவித்தனர்.

    அந்த பெண்ணின் ரத்த வகை ‘ஓ பாசிடிவ்” ஆகும். அந்த ரத்தத்தை தானம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. பல்வேறு இடங்களிலும் கேட்கப்பட்ட பிறகு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ‘ஓ பாசிடிவ்’ ரத்தம் கையிருப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டது. கடந்த 3-ந்தேதி இந்த ரத்தத்தை அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றினார்கள். பிறகு அந்த பெண் வீடு திரும்பினார்.

    மறுநாள் அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி-வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அந்த பெண்ணை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

    8 மாத கர்ப்பமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. கலந்து இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த பெண்ணின் ரத்தத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்பம் உண்டானது முதல் கடந்த நவம்பர் மாதம் இறுதி வரை அந்த பெண் நல்ல சுகாதாரமாக இருந்தார். மாதந்தோறும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருந்தது.

    ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி டாக்டர்கள் ரத்தம் ஏற்றிய பிறகுதான் அந்த பெண்ணுக்கு பிரச்சினை வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரால் தானம் செய்யப்பட்டதாகும். அவர் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி இந்த ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் தானம் செய்து உள்ளார்.

    2016-ம் ஆண்டு முதல் இவர் ரத்த தானம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில் அவரது ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் எடுத்து சேமித்து வைத்து உள்ளனர்.

    முதலில் அந்த ரத்தம் ரமேசின் அண்ணி ஒருவருக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணிக்கு அந்த ரத்தம் ஒத்துவராததால் இருப்பு வைத்து விட்டனர். அந்த சமயத்தில்தான் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ‘ஓ பாசிடிவ்’ ரத்தம் தேவை என்ற தகவல் வந்து இருக்கிறது.

    உடனே சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் அந்த ரத்தத்தை எடுத்து சாத்தூருக்கு அனுப்பி விட்டனர். சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவில்லை.

    பரிசோதனை செய்யாமலேயே நம்பிக்கையின் அடிப்படையில் அந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தி விட்டனர். ஆனால் அது உயிருக்கே உலை வைக்கும் எமன் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

    உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகே கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்த ரத்தம் ஏற்றப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பொதுவாக ஒருவரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டதும் 5 விதமான சோதனை செய்வார்கள். அவ்வாறு 5 விதமான பரிசோதனைகள் செய்து இருந்தால் அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்து இருக்கலாம்.

    ஆனால் ரத்தத்தை முறைப்படி பரிசோதிக்காததால் அப்பாவி பெண் இன்று உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் அலட்சிய போக்கும் இந்த விபரீதம் ஏற்பட காரணமாகி இருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    ரத்த தானம் செய்த ரமேஷ் சமீபத்தில் வெளி நாடு செல்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். அதற்காக அவர் ரத்த பரிசோதனை செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது இருந்தது. அவர் ரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அறிந்ததும் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவருக்கு ஏற்கனவே நவம்பர் மாதம் 30-ந்தேதி ரத்த தானம் செய்து இருந்ததுதான் நினைவுக்கு வந்தது. அந்த ரத்தத்தை யாருக்காவது செலுத்தி விட்டால் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு விடுமோ என்று கவலை அடைந்தார்.

    உடனடியாக அவர் சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு சென்று தான் தானமாக கொடுத்த ரத்தத்தை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று மனிதாபி மானத்துடன் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

    கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டதற்கு சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களும், சாத்தூர் மருத்துவமனை ஊழியர்களும் தான் காரணம். 2 இடங்களிலுமே தானமாக பெறப்பட்ட ரத்தம் பரிசோதிக்கப்படவில்லை.

    இது தெரிய வந்ததும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார் அளித்தார். அதன்பேரில் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன்பேரில் முதல் கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    பொதுவாக ரத்த தானம் செய்யப்பட்டதும் அந்த ரத்தம் நல்ல ரத்தம்தான் என்று டாக்டர் ஒருவர் சான்றிதழ் அளிப்பார். ரமேஷ் தானம் செய்த ரத்தத்திற்கும் அவ்வாறு ரத்த வங்கியின் டாக்டர் சான்றிதழ் அளித்து உள்ளார்.

    அந்த ரத்தத்திற்கு எவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்டது என்று டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே எச்.ஐ. வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த ரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அந்த பெண்ணை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இருந்தனர். அங்கு அவருக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பெண் சாத்தூரில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம் சாணடோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவ மனையில் இருந்து மருந்து- மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே அந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தீவிர சிகிச்சை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் டெல்லியில் இருப்பதால் நாங்கள் வந்தோம். அவர் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண் இன்று புகார் அளிக்க குடும்பத்துடன் சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

    எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை வழங்கிய சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மூலம் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை, நோய் தொற்று தொடர்பான எந்த முறையான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இத்தகைய தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ரத்த சேமிப்புகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 89 ரத்த வங்கிகள் மற்றும் 357 ரத்த இருப்பு மையங்களிலும் மறு பரிசோதனையை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை ரத்த வங்கிகளில் இருந்து ரத்தத்தை மருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #HIV #HIVBlood #Pregnantwoman

    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #HIV #HIVBlood
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார். குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.



    இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  #HIV #HIVBlood
    ×