search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational Officers"

    போராட்டம் காரணமாக திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிகளைப் பூட்டி சாவியை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது.

    போராட்டம் காரணமாக திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிகளைப் பூட்டி சாவியை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் பள்ளிகள் பூட்டியே கிடக்கின்றன.

    மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர். ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாகச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் ஒரு சில பள்ளிகளில் மாணவிகளே பாடம் கற்பித்தனர்.

    வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், ஊரக வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட அனைத்து வட்ட தலை நகரங்களிலும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட்டில் நடைபெற்ற சாலை மறியல் போராடத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள 13 வட்டத்திலும் மறியல் போராட்டம் நடந்தது. #tamilnews
    திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் கந்தசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு 14 பொருட்களை வழங்கினார். பல கோடிகள் ஒதுக்கி நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசும், இந்த ஆண்டு ரூ.27 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 4-ல் ஒரு பகுதி ஒதுக்கிய நிதியாகும்.

    இந்த அரசின் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 68 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சிறிய தவறு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. முதலில் நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

    ஏன் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. சிறிய தண்டனைக்காக நல்ல அதிகாரியை நாம் இழந்து விடக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணிபுரியும் இடத்தில் அலுவலகங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீங்கள், கட்டிடங்கள் இருக்கிறதா? கழிப்பிடம் உள்ளதா? மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்தவாரம் இந்த பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் மீண்டும் அவர்கள் அதேபள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 848 பள்ளிகளில் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். வட்டார கல்விஅலுவலர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. நீங்கள் விரும்பும் பகுதிக்கு உங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த மாத இறுதிக்குள் 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.

    பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பெரிய பிரச்சினை கழிவறைகளை சுத்தம் செய்வது. இதை போக்க, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆயிரம் வாகனங்களை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த வாகனங்கள் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்யும். இதுகுறித்து உடனடியாக கல்வித்துறைக்கு தகவல் அனுப்பும் வசதியும் முதல்- அமைச்சர் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும்.

    மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படும். புதிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார்.

    இதையடுத்து 21 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகளையும், 13 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், எம்.பி.க்கள் வனரோஜா, சேவல் வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன் மற்றும் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×