search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College student killed"

    கந்தர்வக்கோட்டையில் இன்று காலை கல்லூரி மாணவி கழுத்தை இறுக்கி, கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளச்சேரிபட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை, விவசாயி. இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கலைக்கல் லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இதற்காக ஆர்த்தி தினமும் காலை 6 மணிக்கே வீட்டில் இருந்து புறப்படுவார். அவர் வளச்சேரிபட்டியில் இருந்து பஸ்சில் கறம்பக்குடிக்கு சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் ஓரத்தநாடு கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஆர்த்தி பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வளச்சேரிப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது வழக்கமான பஸ்சும் வந்தது. ஆனால் ஆர்த்தியை திடீரென காணவில்லை. அவருடன் தினமும் கல்லூரிக்கு செல்லும் சக தோழிகள் ஆர்த்தியை தேடினர்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள ஒரு கிணற்றின் அருகே ஒரு பை கிடந்தது. உடனே அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் ஆர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்தர்வக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஆர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் துப்பட்டாவால் ஆர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து கிணற்றில் தள்ளி விட்டது தெரியவந்தது. ஆனால் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. காதல் பிரச்சினையில் ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காலை 6 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி 8 மணிக்குள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கல்லூரி மாணவரை சரமாரி வெட்டிக் கொலை செய்த 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி தெய்வக்கன்னி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் பிரவின்குமார் (வயது 20). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    பிரவின்குமார் தான் வசிக்கும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வாராம். இதனால் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சைலோ கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சினை வந்ததால் பிரவின்குமார் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்த பிரவின்குமார் இரவு 9 மணியளவில் அதே பகுதியில் நண்பர் காளி என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த சைலோ கண்ணன், பிரவின்குமாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த சைலோ கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரவின்குமார், காளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த பிரவின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைலோ கண்ணன், அவரது ஆதரவாளர்ககள் டோரி ராஜவேல், சோப்பு செல்வகுமார், அய்யர் பிரவின்குமார், விஜி என்ற விக்கி, பாலா என்ற பாலகணேஷ், மணி, ஏபிசிடி அருண் ஆகிய 8 பேரையும் தேடி வருகின்றனர்.

    பிரவின்குமாரை கொலை செய்த இதே கும்பல் முன் விரோதம் காரணமாக அம்பேத்கார் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அரச மகாராஜன் (20) என்பவரையும் நேற்று இரவு அரிவாளால் வெட்டியது குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் தெப்பக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொடைரோடு:

    மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் புரோட்டா கடை வைத்துள்ளார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 21). மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

    இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். இவருடன் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி (21), ஆலங்குளத்தைச் சேர்ந்த நாகசூர்யா (21), செல்லூரைச் சேர்ந்த கேசவமூர்த்தி (22) ஆகியோரும் சென்றனர்.

    4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் கோவைக்கு சென்று விட்டு நேற்று இரவு மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு 4 பேரும் இறங்கினர்.

    அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் அங்கே இறங்கி தகராறு செய்தனர். தகராறு முற்றவே கத்தியால் அந்த கும்பல் அவர்களை மிரட்டியது. இதனால் மோகன்ராஜ் தரப்பினர் தப்பி ஓட முயன்றனர்.

    அந்த சமயத்தில் மோகன் ராஜ் தவறி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் வந்த வாலிபர்களிடம் கொலையாளிகள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை கொலையாளிகள் பின் தொடர்ந்து வந்து இதனை செய்திருப்பதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது காதல் பிரச்சினை காரணமாக நடந்ததா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர் ராஜேஷ் வந்து முக்கிய தடயங்களை பதிவு செய்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    ×