search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi sterlite company"

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால் ஸ்டெர்லைட்டை ஆலையை திறக்க அரசு துணை போகிறதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Sterlite

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத்திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ந் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார்.

    அந்த ஆணையின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்தில் இருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடைதான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியை யும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    எனவே, சுற்றுச் சூழல் துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. #Thoothukudisterlite #Sterliteprotest

    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மே மாதம் ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

    வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததுடன் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆலையை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஆலையால் ஆலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து என தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பயம் காரணமாகவே வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்றன. 2013-ம் ஆண்டு சட்ட ரீதியாக பெறப்பட்ட அனுமதியை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம். இந்த ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. எனவே நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் நிலத்தடிநீர் மையம் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் மாசுபடுவது தான் அந்தப் பகுதியில் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அங்கு இல்லை. அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தோம். இதுதொடர்பான பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#Thoothukudisterlite #Sterliteprotest

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைதான் நேர்மையாக இருக்கும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு தனிப்பட்ட அமைப்பு விசாரித்தால்தான் விசாரணை நேர்மையாக நடைபெறும்.

    இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? குட்கா விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு இருந்ததால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்தேன். இதில் போலீசார், அரசியல்வாதிகள் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறினார்.

    இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் வருகிற ஜூலை 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காத பலியானவர்களின் உறவினர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை அணுகி பெற்று கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தந்தை-2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். #Thoothukudifiring #sterliteprotest

    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை கைது செய்த நெல்லை போலீசார் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


    கைதான முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஓமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    கலில்ரகுமான், அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் ஆகிய 3 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், எனது கணவருக்கும், மகன்களுக்கும் இந்த சம்பவங்களில் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் போலீசார் திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளனர். இதனால் எனது மகன்கள் 2 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நசீபா பானு சார்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் கணேஷ்பிரபு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

    மேலும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியுமான காளியப்பன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவில் தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்ற போராட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    6 பேர் கைது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்வது கலெக்டர் அலுவலகம். அப்படிப்பட்ட இடத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் கைது செய்யவில்லை என்றனர்.

    மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மருது கூறுகையில், கலில்ரகுமான் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் போலீசார் 2 மகன்களுடன் அவரை கைது செய்து இருப்பது தவறான நடவடிக்கை ஆகும் என்றார். #Thoothukudifiring #SterliteProtest

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.#Thoothukudi #Sterlite #SterliteProtest #BanSterlite #TalkAboutSterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 9.4.2018 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தற்கு கூறி உள்ள 5 குறைபாடுகளை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டம் வக்கீல் ராமசுப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த பாத்திமாபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், ‘ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் எந்தவித விளக்கமும் கோராமல் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது இயற்கை நீதிக்கு புறம்பானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததற்கு 5 குறைபாடுகளை கூறி உள்ளது. இந்த குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இதில், ஒரு குறைபாட்டை சரி செய்ய 2019-ம் ஆண்டு வரை காலக்கெடு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை மாசு ஏற்படவில்லை’ என்று வாதாடினர்.

    அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தங்களது முழுமையான வாதத்தை எடுத்து வைத்த பின்பு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    இதன்பின்பு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Thoothukudi #Sterlite #SterliteProtest  #BanSterlite #TalkAboutSterlite
    ×