search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை - வேதாந்தா நிறுவனம் தகவல்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை - வேதாந்தா நிறுவனம் தகவல்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. #Thoothukudisterlite #Sterliteprotest

    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மே மாதம் ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

    வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததுடன் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆலையை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஆலையால் ஆலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து என தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பயம் காரணமாகவே வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்றன. 2013-ம் ஆண்டு சட்ட ரீதியாக பெறப்பட்ட அனுமதியை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம். இந்த ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. எனவே நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் நிலத்தடிநீர் மையம் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் மாசுபடுவது தான் அந்தப் பகுதியில் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அங்கு இல்லை. அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தோம். இதுதொடர்பான பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#Thoothukudisterlite #Sterliteprotest

    Next Story
    ×