search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sleeper"

    கழிவறை, ஏசி, படுக்கை வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட அரசு சொகுசு பேருந்துக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. #TNSTC #SETC #TransportDept
    சென்னை:

    அரசு பஸ்களில் இருக்கை வசதிகள், கைபிடிகள், கூரைகள், பக்கவாட்டு கண்ணாடிகள் போன்றவை உடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய தயங்கினர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு டீசல் செலவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்து வந்தது.

    புதிய பஸ்களை அறிமுகம் செய்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதலால் முதலில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.

    இதையடுத்து புதிய பஸ்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு நேற்று முதல் கட்டமாக 515 புதிய பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய பஸ்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன.

    படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா, சொகுசு இருக்கைகள், உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கும், டிரைவருக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


    புதிய பஸ்கள் 8 போக்குவரத்து கழகங்களுக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டன. அதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 40 பஸ்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் இருந்து 18 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் 6 நகரங்களுக்கு விடப்பட்டுள்ளது. புதிய சொகுசு பஸ்களுக்கு 3 வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.55-ம், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.30-ம், ஏ.சி. வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

    சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்குகிறார்கள். அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் (யூ.டி) பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். #TNSTC #SETC #TransportDept
    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழகத்தில் பதிவு செய்யப்படும் பஸ்களில் படுக்கை வசதி வைத்துக்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மாநிலத்துக்கு உள்ளே, அண்டை மாநிலங்கள் என தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்ய ரெயில் போக்குவரத்துக்கு அடுத்து பெரும்பாலானோர் நம்பி இருப்பது பஸ் சேவைகளைத்தான்.

    இருக்கை வசதி மட்டும் உள்ள பஸ்களில் பயணம் செய்யும்போது பல்வேறு சிரமங்களை பயணிகள் சந்திக்கவேண்டியது உள்ளது. படுக்கை வசதி உள்ள பஸ்களில் பயணிகள் சவுகரியமான பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

    இதனால் தொலைதூரங்களுக்கு செல்பவர்கள் படுக்கை வசதி உடைய பஸ்களையே பெரும்பாலும் தேர்வுசெய்கின்றனர்.

    படுக்கை வசதியுடன் தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். வெளி மாநிலங்களில் பதிவு செய்து, தற்காலிகமாக அனுமதிச் சீட்டு பெற்று படுக்கை வசதி உடைய ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் படுக்கை வசதி உடைய பஸ்களுக்கு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்தநிலையில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து தமிழகத்தில் பதிவு செய்யும் பஸ்களுக்கு படுக்கை வசதிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மோட்டார் வாகன சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் பதிவு செய்யும் பஸ்களில் படுக்கை வசதி, படுக்கை மற்றும் இருக்கை வசதிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொலைதூரங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் படுக்கை வசதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. படுக்கை வசதி பஸ்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு முன்னாள் மாநில தலைவரும், சட்ட ஆலோசகருமான கு.பால்பாண்டியன் கூறுகையில், “படுக்கை வசதி பஸ்களுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த புதிய முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் தொலைதூரங்களுக்கு செல்பவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்றார். #tamilnews
    ×