search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Chillies"

    • பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.

    அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகிறது.

    இதில் பச்சைமிளகாய், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த ஆண்டு துவக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பல கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி ஓரளவு இருந்தது. இதனால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பச்சை மிளகாய் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் சுற்று வட்டார கிராமங்களில் புதிதாக சாகுபடியால் வெளியிடங்களிலும் பச்சை மிளகாய் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பச்சை மிளகாய் வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100 முதல் ரூ.110 வரை என கூடுதல் விலைக்கு போனது. வரும் நாட்களில் பச்சை மிளகாய் வரத்து இன்னும் குறைந்தால், அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×