search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb Threaten"

    • ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர்.
    • மோப்ப நாய் மியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.

    அதில் எதிர்புறம் பேசிய நபர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெட்டி வெடிக்கும் என்று கூறி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை காரணமாக இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த ரெயில் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டது.

    இதேபோல் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அந்த ரெயில் புறப்பட்டு செல்லும் வரை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதன் சிக்னல் குரும்பூரை காட்டியது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 42) என்பது தெரியவந்தது.

    அவரை குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், கணேசமூர்த்திக்கு மனைவி மற்றும் 1 மகன் இருப்பதும், அவர் வெல்டிங் பட்டறை தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திய கணேசமூர்த்தி போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் விளைவிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தியை கைது செய்தார்.

    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கட்சி பொதுக்குழு கூட்டத்தில், தலைமை பொறுப்பு வழங்கவில்லை என்றால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைப்பேன் என மிரட்டல் விடுத்தார்.
    • சேலம் மாநகர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சென்னை காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கட்சி பொதுக்குழு கூட்டத்தில், தலைமை பொறுப்பு வழங்கவில்லை என்றால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைப்பேன் என மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கும், சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரெயில்நிலையம் கொண்டு வரப்பட்டது.

    சேலம் மாநகர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு ரெயில் நிலைய அறைகள் மற்றும் பார்சல்கள், பயணிகள் உடமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். தொடர்ந்து சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் விடிய விடிய போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதனிடையே மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை கொண்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் அந்த நபர் தாம்பரத்தில் இருந்து மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அந்த நபரை இன்று காலை தாம்பரம் சேலையூர் பகுதியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது பெயர் வினோத்குமார் (வயது 36) என்பதும், அவர் சிதம்பரம், உடையூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சிதம்பரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

    கைதான வினோத்குமார் ஓ.பன்னீர் செல்வம் மீது இருந்த பற்று காரணமாக மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    கே.கே.நகரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK #Bombthreat

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு ரூ. 1 லட்சத்து 42 ஆயிரம் நிதி வழங்கும் நிகழ்ச்சி அப்பகுதியில் நடந்தது.

    இதில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வி.என். ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ‘கே.கே. நகரில் எம்.எல்.ஏ. பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதுபற்றி உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், கே.கே. நகர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஜூலியுடன் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபர் குறித்து கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. #ADMK #Bombthreat

    ×