search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs"

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #18MLAs #MadrasHighCourt
    சென்னை:

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இத்துடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.

    இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.



    இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

    பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து தற்போது அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர டி.டி.வி.தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

    தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தற்போதைய சூழ்நிலையில் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    இதுபோன்று ஒரு சூழ்நிலை வந்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கவில்லை. அவர்கள், அவ்வப்போது எதிர்மறையான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளனர். எனவே, தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் தற்போது இருந்து வருகிறது.

    அதே வேளையில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை அளித்தால் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால் அவர்களது விளக்கத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

    எனவே, இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAs #MadrasHighCourt
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #MLAsDisqualification #18MLAs #disqualification
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 அணிகளாக பிளவுபட்டது. அதன்பிறகு தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. கட்சி பெயர், சின்னம் அவர்களுக்கே திரும்ப கிடைத்தது.

    ஆனால் டி.டி.வி.தினகரன் மட்டும் ஆதரவாளர்களுடன் தனியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் தினகரன் அணியில் இணைந்தனர். அவர்கள் கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

    18 பேரும் கொறடா அனுமதி இல்லாமல் கவர்னரை சந்தித்ததாக கூறி அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகருக்கு அ.தி.மு.க. கொறடா பரிந்துரை செய்தார். இதை ஏற்று 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வந்த இந்த வழக்கில் ஜனவரி மாதம் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

    தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நாங்கள் எந்த அணிக்கும் தாவவில்லை, முதல்வரை மட்டுமே மாற்ற கோரினோம், எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    உள்கட்சி பிரச்சனையை கவர்னரிடம் கொண்டு சென்றது தவறு. எனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அல்லது இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


    கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஐகோர்ட்டு செயல்படத் தொடங்கியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பை, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிர்பார்த்து இருக்கின்றன. தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கூறப்பட்டாலும், செல்லாது என்று கூறப்பட்டாலும் அது ஆளும் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும்.

    செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். செல்லாது என்று கூறினால் மீண்டும் சட்டசபைக்கு வந்து தினகரனுடன் தனி அணியாக செயல்பட்டு அரசை எதிர்ப்பார்கள். அவர்கள் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சிக்கு எதிராக செயல்படும் நிலையும் உள்ளது.  #MLAsDisqualification #18MLAs #disqualification
    ×