என் மலர்
அமெரிக்கா
- பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.
- கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ந் தேதி 47-வது அதிபராக பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பது இது 2-வது முறையாகும்.
இந்த நிலையில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்ததால் தங்கம், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. அத்தனையையும் விட கவனம் பெற்றது கிரிப்டோகரன்சியின் விலை உயர்வு.
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம் ) என்று இருந்தது. விரைவில் 1 லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலரை இன்று தொட்டது. இந்திய ரூபாயின் மதிப்புபடி 85 லட்சத்தை தொட்டது. இன்று எட்டியுள்ள புதிய உச்சம் கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல் முறையாக 1 லட்சம் அமெரிக்க டாலரை தொட்டது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற 4 வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் நாளில் கிரிப்டோ கரன்சி 69,374 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
- மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி நிலையில் 103 வது இடத்தில் உள்ளது
- கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.
உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி ஏர்ஹெல்ப் நிறுவனம் வருடந்தோறும் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.
வாடிக்கையாளரின் மதிப்பீடும், சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 54 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளின் கருத்தை பெற்று 2024 ஆம் ஆண்டின் ஏர்ஹெல்ப் அறிக்கை வெளியாகியுள்ளது.
விமான நிறுவனங்கள் திடீர் இடையூறுகளை எவ்வாறு கையாளுகின்றன, இழப்பீடு கோரிக்கைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன, சர்வதேச வழித்தடங்களில் நிலையான சேவையை எவ்வாறு வழங்குகின்றன உள்ளிட்ட தரவுகளும் இந்த அறிக்கைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது. மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103 வது இடத்தில் உள்ளது. சரியான நேரத்தில் வழங்கப்படும் சேவை, வாடிக்கையாளர் சர்வீஸ் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில் இண்டிகோ பின்தங்கியுள்ளது.

இண்டிகோவை தவிர்த்து துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸ் 104 வது இடத்திலும், இஸ்ரேலின் எல் அல் ஏர்லைன்ஸ் 105 வது, பல்கேரியா ஏர் 106, நேவால் துனிசியா 107, போலந்து buzz 108, துனிசியாவின் துனிஸ் ஏர் 109 வது இடங்களில் உள்ளன. மாறாக சிறந்த 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ்முதல் இடத்தில் உள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

- ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
- போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்:
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணய கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் அடக்கம். பணய கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. அதேவேளை, தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அழித்து, பணய கைதிகளை மீட்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாசுக்கு டொனால்டு டிரம்ப் கெடு விதித்துளார்.
தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
ஜனாதிபதியாக தான் பதவியேற்கும் தினத்திற்கு முன்பு பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவேண்டும், அவ்வாறு பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'நான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனவரி 20ம் தேதிக்கு முன்பு பணய கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் ஆயுதக்குழு) மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்' என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீதத்தில் முடிந்தது
- விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வுகூடமான இந்தியா
இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் கூறியுள்ள கருத்துக்கு கண்டங்கள் எழுந்துள்ளது. வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் தளத்தின் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும் அவை போதுமான அளவு நிலையான வருவாய் உருவாகி வருகிறது.
இன்னும் 20 வருடங்கள் கழித்து அங்குள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பார்கள். எனவே இந்தியா [புதிய] விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடம் போன்றது. அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை [திட்டங்களை] இடங்களுக்கு[ நாடுகளுக்கு] எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

சோதனை எலிகளான பழங்குடியின மாணவிகள்
முன்னதாக பில் கேட்ஸ் தனது மனைவி பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன்14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளைசுட்டிக்காட்டி பலர் பில் கேட்ஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் PATH (Programme for Appropriate Technology in Health) என்ற அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [ ICMR] உடன் இணைத்து தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டது. 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு, தற்கொலை என வேறு விதமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

கோப்புப் படம்
விழிப்புணர்ச்சி
விசாரணையின்மூலம் ஆராய்ச்சியில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சுகாதார முன்னெடுப்பு என கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் சம்மத படிவத்தில் பழங்குடியின மாணவிகளின் பெற்றோருக்குப் பதில் அவர்கள் தங்கிப் படித்து வந்த விடுதி காப்பாளர்கள் கையெழுத்திட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியின சிறுமிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்கின் டாக்டர்
2009 தடுப்பூசி சோதனைகள், வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவனங்களால் இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் எவ்வாறு சோதனைக் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஸ்கின் டாக்டர்' என்ற விமர்சகர், நிதியுதவி பெறும் எத்தனை என்ஜிஓக்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

எங்களை வெளிப்படையாகக் கினிப் பன்றிகளாக நடத்தும் அதே வேளையில், எங்கள் ஆட்சியாளர்களை அவர்கள் எவ்வளவு எளிதாக அணுகுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தார்.
- லாப நோக்கத்திற்காக சட்டவிரோத விசா மோசடியில் இன்போசிஸ் நிறுவனம் ஈடுபட்டதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ள்ளது.
அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்துவதாக இன்போசிஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா பெறுவதற்கு பதில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ கண்டுபிடித்தது.
H-1B விசா பயன்படுத்தினால் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், குடிவரவு ஆகியவற்றில் அமெரிக்க சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதலால் இன்போசிஸ் நிறுவனம் H-1B விசாவுக்கு பதில் B-1 பார்வையாளர் விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணியாற்ற வைத்து குறைவான சம்பளம் கொடுத்துள்ளனர் என்பதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ-ன் விசாரணையில் தெரிய வந்தது.
பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமே லாபநோக்கத்திற்காக மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் ஃபக்ரி தற்போது பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலனின் வீட்டில் வேண்டுமென்றே தீ வைத்து அவரது முன்னாள் காதலன் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா எட்டியென் (33) ஆகியோரைக் கொன்றதாக அலியா ஃபக்ரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எட்வர்ட் ஜேக்கப்ஸ் உடன் மீண்டும் சேருவதற்கு அலியா ஃபக்ரி முயற்சி செய்துள்ளார் என்றும் ஆனால் அதற்கு அவரது காதலர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தற்போது அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும்.
- என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன்
நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்த அமரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜோ பைடன் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஜனவரியுடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைகிறது.
பதவியேற்கும் முன்பே டிரம்ப் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். இதற்கிடையே பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடனும் கடைசியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை செயல்படுத்தி வருகிறார்.
ரஷியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கி ஜோ பைடன் திடீர் அதிரடி காட்டினார். இந்நிலையில் கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் ஹண்டர் பைடனுக்கு ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் [54 வயது] சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கிலும், பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்த வழக்கிலும் சிக்கியுள்ளார். இதற்கிடையே தனது போதைப் பழக்கத்தில் இருந்தும் அவர் மீண்டு வருகிறார்.
அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும். ஆனால் தனது மகனுக்கு அவ்வாறு மன்னிப்பு வழங்கமாட்டேன் என ஜோ பைடன் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக ஹண்டர் பைடனுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று, என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்ற போது நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தேன், அதை இதுநாள் வரை காப்பாற்றி வந்துள்ளேன்.
என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மகன் என்ற ஒரே காரணத்தால் ஹண்டர் மீது விசாரணை நடந்துள்ளது. என் மகனை வைத்து எனது செயல்பாடுகளை நிறுத்த முயற்சி நடந்தது. எனவே தற்போது மன்னிப்பு வழங்கியுள்ளேன் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகன் சிறைக்குச் செல்வதிலிருந்து ஜோ பைடன் காப்பாற்றி உள்ள நிலையில் அடுத்து அதிபராகப்போகும் டிரம்ப் இதை விமர்சித்துள்ளார். நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கியதுபோல் 2021 இல் டிரம்ப் ஆட்சியை இழந்தபோது வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சேர்த்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்ப் பாலியல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் பதவியேற்றதும் தனக்குத் தானே பொது மன்னிப்பு வழங்கிக்கொள்வார் என்ற கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
- போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது
- ஜோ பைடன் பதவியை விட்டு செல்வதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கலாம்
உக்ரைன் போர்
உக்ரைன் மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் இணைய முயன்றால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா கடந்த 2022 பிப்ரவரியில் போரை தொடங்கியது. 1000 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கினார்.

இதனால் உக்ரைன் முதல் முறையாக கடந்த மாதம் ரஷியா மீது அந்த பாலிஸ்டிக் மிசைல்களை பயன்படுத்தியது. அவற்றை தாக்கி அழித்த ரஷியா உக்ரைன் மீது தாங்கள் கண்டுபிடித்த புதிய ரக பாலிஸ்டிக் மிசலை ஏவியது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும் அமெரிக்கா அடுத்ததாக அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற செய்திகள் பரவின.

புதின் மிரட்டல்
ரஷிய அதிபர் புதின், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு எந்த அணு ஆயுதம் கொண்ட நாடு உதவினாலும் தங்களின் அணு ஆயுதங்களை அவர்கள் மீது பயன்படுத்தலாம் என ரஷியவின் அணு ஆயுத விதியை திருத்தி எழுதினார். இதன் பிறகே அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன.
சோவியத் யூனியன்
கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்த சமயத்தில் ரஷியா உக்ரைன் தனித்தனி நாடானது. அப்போது சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களில் ஒரு பங்கு புதிதாக உருவான உக்ரைன் நாட்டுக்கு கிடைத்தது.
ஆனால் 1994 புடாபெஸ்ட் உடன்படிக்கையின் படி உக்ரைன் தனது அணு ஆயுதங்களைத் துறந்தது. இந்நிலையில் உக்ரைன் துறந்த அந்த அணு ஆயுதங்களை மீண்டும் இந்த போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஜேக் சல்லிவன்
இது தொடர்பாக நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஏபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சில மேற்கத்திய அதிகாரிகள் ஜோ பைடன் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க பரிந்துரைத்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால் அது பரிசீலனையில் இல்லை, போரில் உக்ரைனின் இயல்பான திறன்களை அதிகரிப்பதே நாங்கள் செய்வது, இதனால் அவர்கள் திறம்பட தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும, ஆனால் அவர்களுக்கு அணுசக்தி திறன் வழங்கப்படாது என்று தெரிவித்தார். நேட்டோ நாடுகளுடன் தங்களை இணைத்துக்கொள்வதே போருக்கு தீர்வு என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து அங்கு கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர் வீசி பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பனித்துகள்கள் சாலை மற்றும ரெயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. அதிகப்பட்சமாக பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- உயிரிழந்த மாணவரின் பெயர் சாய் தேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது.
- சாய் தேஜா சிகாகோவில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த மாணவரின் பெயர் சாய் தேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் தேஜா இந்தியாவில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் சிகாகோவில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "இந்திய மாணவர் சாய் தேஜா கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதரக பதிவை பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தச் செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுவதாக" பதிவிட்டுள்ளார்.
- அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார்.
- அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். அதிபர் பதவியேற்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார்.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் இடம்பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ. (FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் படேல்-ஐ டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்யப் சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி. அமெரிக்காவிற்கு முன்னுரிமை என்பதை தனது கொள்கையாக கொண்ட அவர், ஊழலை எதிர்த்தும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எஃப்.பி.ஐ. இயக்குநராக இருக்கும் கிறிஸ்டோபர் ரே-வை, கடந்த 2017 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தான் நியமித்து இருந்தார். எனினும், தன் மீதான வழக்குகளை எஃப்.பி.ஐ. கையாண்ட விதம் குறித்தும் அதன் இயக்குநர் கிறிஸ்டோபர் மீதும் டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தான் எஃப்.பி.ஐ. இயக்குநராக 44 வயதான காஷ்யப் படேல் நியமிக்கப்படுகிறார்.
- 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
- அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில், "பிரிக்ஸ் நாடுகள் டாலரை தவிர்க்க முயற்சிக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது. இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க கூடாது. இதை மீறும் போது 100% கூடுதல் வரிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இல்லையெனில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெற்று கொள்ளலாம்."
"அவர்கள் மற்றொரு "ஏமாளியை தேடிக் கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் மாற்றும் வாய்ப்பு இல்லை, இப்படி செய்ய நினைக்கும் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.






