என் மலர்
உலகம்
- இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
- இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதால் டிரம்ப் பணிந்தார். இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியா மீதான 50 சதவீத வரிக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டெபோரா ராஸ், மார்க் வீசே ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்த அதிபர் டிரம்பின் தேசிய அவசர கால அறிவிப்பை முடி வுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக் கைகள் சட்டவிரோத மானவை மற்றும் அமெ ரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர், இருதரப்பு உறவுகளுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டெபோரா ராஸ் எம்.பி கூறும்போது, வட கரோலினாவின் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகியவை ஒரு இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.
இந்திய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்து, உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை களை உருவாக்கியுள்ளன.
அதேபோல் வட கரோ லினா உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, இந்த வரிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து அமெரிக்கத் தொழிலாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.
மேலும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்கா- இந்தியா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றார். இந்த தீர்மானத்தில் பிரேசில் மீதான வரியையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டு உள்ளது.
- முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
- பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்த பாலஸ்தீன நகரமான காசாவில் 'பைரன்' புயல் பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர்.
புயலில் நான்கு பேர் இறந்த நிலையில் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக கூடாரம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் இறந்தனர். போரில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் சுவர் கூடாரத்தின் மீது விழுந்ததில் இரண்டு பேர் இறந்தனர்.
கடுமையான குளிரால் உறைந்து சில குழந்தைகளும் இறந்தனர். முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
வரும் நாட்களில் காசாவில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
போரில் வீடுகள் அழிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கூடாரங்கள் தொடர்ந்து இடிந்து விழுகின்றன. மக்கள் குளிர் மற்றும் கனமழையில் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் காரணமாக வெள்ளம் மற்றும் குளிரை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்று உள்ளூர் நிர்வாகம் கூறியுள்ளது.
- தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது
- இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர். அதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்த்தால் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 8-தேதி தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்-கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன்.
இதன் பயனாக தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. 2 நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும் என்றார்.
- உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாயகமாக வெனிசுலா உள்ளது.
- கடந்த 2022-ம் ஆண்டு ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்ல அமெரிக்கா தடை விதித்தது.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாயகமாக வெனிசுலா உள்ளது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கரீபியன் கடற்பகுதி வழியாக அவ்வப்போது ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்லப்படுகிறது. இதன்மூலம் அங்குள்ள பயங்கரவாதிகள் வருவாய் ஈட்ட உதவுவதாக வெனிசுலா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்ல அமெரிக்கா தடை விதித்தது. அதனை மீறி வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு கச்சா எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனை அமெரிக்க கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்தநிலையில் கச்சா எண்ணெய் கடத்தலுக்கு உதவிய வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் மற்றும் 6 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
- கம்போடியா உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக தாய்லாந்து அறிவித்தது.
- புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
பாங்காங்:
ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன
இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக்கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இருநாட்டு வீரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர்.
புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
2025-ஆம் ஆண்டு உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படுகொலைகளால் நிரம்பி உள்ளது.
சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவிய இந்தக் கொலைகள் குறித்த செய்திகள், உலகில் அரசியல் வன்முறையின் ஒரு புதிய, ஆபத்தான சகாப்தத்தை உணர்த்துகின்றன. அவ்வாறாக இந்தாண்டு நடந்த 5 அரசியல் படுகொலைகளை இங்கு காண்போம்.
அமெரிக்கா:
குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்காவில் நிகழ்ந்த இரு முக்கிய கொலைகள், நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த சித்தாந்தப் பிளவை அம்பலப்படுத்தின.
சார்லி கிர்க் கொலை: செப்டம்பர் மாதம், டிரம்ப் உடைய தீவிர ஆதரவாளரான பிரபல பழமைவாத அரசியல் ஆர்வலரும் 'டேர்னிங் பாயின்ட் USA' அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

31 வயதே ஆன இவரது மரணம், வலதுசாரி மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கிடையில் வளர்ந்து வரும் வெறுப்பைக் குறிக்கும் ஒரு அரசியல் நிகழ்வாக மாறியது.
மெலிசா ஹார்ட்மேன் படுகொலை: மினசோட்டா மாநிலத்தின் ஹவுஸ் சபாநாயகர் எமரிடா மெலிசா ஹார்ட்மேன், ஜூன் மாதம் தனது கணவருடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனநாயக கட்சி வட்டாரங்களில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவரது மரணம், உள்ளூர் அரசியலை உலுக்கியதுடன், அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக் குறித்து தேசிய அளவில் விவாதத்தை எழுப்பியது.
கொலம்பியா:
கொலம்பியா நாட்டில், 2026 அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட்டருமான மிகைல் உரைபே டர்பே-இன் மரணம் வளர்ந்து வரும் வன்முறை அரசியலின் மற்றொரு சான்று.

ஜூன் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சுடப்பட்ட மிகைல், ஆகஸ்ட் மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் களத்தையே அடியோடு மாற்றி அமைத்தது.
ஈரான்:
ஜனவரி மாதம், ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அலி ரஸினி மற்றும் முகமது மோகிசே ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வந்த இவர்களின் படுகொலை அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
உக்ரைன்:
உக்ரைனிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபிய், ஆகஸ்ட் மாதம் லிவிவ் நகரில் கூரியர் வேடமிட்ட ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே ரஷியாவுடன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்த அரசியல் கொலை மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

2025-இல் நிகழ்ந்த இந்த ஆறு படுகொலைகளும் சில நாடுகளின் சம்பவங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, சித்தாந்தங்களுக்கிடையே வளர்த்து வரும் வெறுப்பு மற்றும் மோதலை எடுத்துக் காட்டுகிறது.
இவை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு தீவிர எச்சரிக்கை மணியை ஒலிப்பதாக அமைந்துள்ளது.
- ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
- உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன என்று நம்ப வைத்தது.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சுசான் ஆடம்ஸ் (83) என்ற மூதாட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவரது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) என்பவரால் அவர்களது வீட்டில் கடுமையாக அடித்து கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்.
பின்னர் சோல்பெர்க் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
கொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு சோல்பெர்க் ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் குடும்பத்தினர் வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து, இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி ஓபன் ஏஐ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56) முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார். உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.
இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.
சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.
"உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.
இதன் விளைவாகவே எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் ஆய்வில், தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தது.
Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.
- எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
- உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தெற்கு உக்ரைனில் ஓடேசா பகுதியில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
- 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.
- பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தை பிறப்பு சதவீதம் வீழ்ச்சி சீனாவில் 'ஆணுறைக்கு வரி' கருத்தடை மருந்துகளுக்கு வரி விலக்கு ரத்தாகிறது
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக் கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது.
இதற்கிடையே சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.
இதற்காக பல்வேறு சலுகைகள், உதவித் தொகை உள்ளிட்டவற்றை அரசு அறிவித்தது. ஆனாலும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆண்டு தோறும் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு அதிகரித்தது. இதனால் சீனாவில் முதிய வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் புதிய ஆணுறை வரி திட்டம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின்படி, ஜனவரி 1-ந்தேதி முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்பு களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.
இதற்கிடையே கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது என்பது மக்களை திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வரி விதிப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. விலை உயர்த்தப்பட்டாலும் ஆணுறை வாங்குவதை விடக் குழந்தை களை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக் கும் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர்.
சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமானதால் 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, இவாட் ஆகிய மாகாணங்களில் கடந்த 8-ந்தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சுனாமி அலைகளும் தாக்கின.
இந்த நிலையில் ஜப்பானின் வடகிழக்கில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தீவான ஹோன்ஷு வின் வடக்கே உள்ள அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் உண்டானது.
இது ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவானது 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ, அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களில் 3.2 அடி வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து ஏற்பட்டு உள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
- 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
- போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கூட்டம்.
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை. சமீபத்தில் அமெரிக்க குழுவினர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினர்.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இரு தரப்பினரும் முரண்டு பிடிப்பதால் அமைதி ஒப்பந்தத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி அடைந்துள்ளனர். இதில் அவர் ரஷியா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கூட்டத்தில் அவர்கள் என்ன ஆலோசிக்க போகிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முதன்மை மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லாத மற்றும் விரும்பிய முடிவுகள் கிடைக்காமல் வெறும் கூட்டங்கள் மட்டும் நடந்துள்ளதில் டிரம்ப் சோர்வடைந்து விட்டார்.
இரு தரப்பிலும் நடந்து வரும் இந்த போரால் டிரம்ப் பெரிய அளவில் மனமுடைந்து போய் உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் காணப்படும் காலதாமதம் டிரம்ப்பை விரக்தியடைய செய்துவிட்டது.
அவர் இனியும் இதுதொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றார்.
- பொது மருத்துவமனையை குறிவைத்து ராணுவ போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாங்காக்:
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.
மருத்துவமனை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.






