search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் சவுமியா சுவாமிநாதன்
    X
    டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

    கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பு சக்தியை பெற நீண்ட காலம் ஆகும்- டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

    கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
    ஜெனீவா:

    ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்த சமூக ஊடக நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:-

    கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஹெர்ட் இம்யூனிட்டி (மந்தை எதிர்ப்பு சக்தி) மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விரைவுப்படுத்த வேண்டும். அதன்மூலம்தான் மந்தைத் தடுப்பாற்றலை உருவாக்குவதுதான் பாதுகாப்பானது.

    கொரோனா வைரசுக்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி எனச் சொல்லப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்டகாலமாகும். மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம்.

    உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 50 முதல் 60 சதவீத மக்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்தால்தான் ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம். அந்த வகையில் இயற்கையாக அதைப் பெறுவதற்கு இன்னும் நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

    கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்குள்ள மக்களில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளார்கள். இன்னும் சில நாடுகளில் மிக அதிகபட்சமாக 20 சதவீதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளார்கள்.

    இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு நாடு முழுவதும் நோய்த்தொற்று, அலை அலையாகப் பரவ வேண்டும், அதன்மூலம் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இயற்கையாக மனிதர்கள் ஹெர்ட் இம்யூனிட்டி பெற வேண்டுமென்றால் 70 முதல் 80 சதவீதம் வரை எதிர்ப்பு சக்தியை பெற வேண்டும் என்றுகூட சில ஆய்வுகள் கூறுகின்றன.

    ஆனால், உலக சுகாதார அமைப்பின்படி, தடுப்பூசி மூலமே மக்கள் நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதுதான் பாதுகாப்பானது. மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும்.

    ஆதலால் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை பெறுவதைவிட, தடுப்பூசி மூலம் பெறுவதுதான் சிறந்த வழி. இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை பெற அதிகமானோருக்கு நோய்தொற்றை பரவச் செய்ய வேண்டும், அதனால் ஆபத்துகளும், உயிரிழப்புகளும் நேரலாம்.

    அதேசமயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்பது இறப்பு வீதத்தைக் குறைக்க உதவும்.

    எங்களின் கணக்கின்படி தடுப்பூசி மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனங்களின் தடுப்பூசி தயாராகிவிடும். ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும். மக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க தயாராக வேண்டும்.

    உலகளவில் 200 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் பல்வேறு கட்டங்களில் இருக்கிறார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து மிகவேகமாக தடுப்புமருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.

    பொதுவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி என்பது நீண்டகால நடைமுறை, ஒவ்வொரு கட்டமாகத்தான் செல்ல முடியும். சூழல் கருதி தற்போது அனைத்தும் விரைவுப்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
    Next Story
    ×