search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு
    X

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன.
    நியூயார்க்:

    சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.
     
    இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

    15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது. புதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்கும்.



    இந்நிலையில், வரும் 2021-22 ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை (தற்காலிக) உறுப்பினர் பதவியில் இந்தியா  இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன.
     
    ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×