என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
    • நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர்.
    • முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்.

    பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.

    இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும்,

    அ.தி.மு.க. சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார். 

    • அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.

    அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.

    இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு
    • பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பப்பட்டது

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தபப்பட்டது.

    இதனால் படத்தை ஆர்வமுடன் ரசித்து பார்த்து வந்த சில ஆண் பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த பெண் பயணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாள் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    நடிகை பாலியல் வழக்கு தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள சமயத்தில் கேரளாவில் இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

    • இவ்வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    • ஞானசேகரனின் தாயார் கங்காதேவி வழக்கு தொடர்ந்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புழல் அறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. 2-வது போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக ஜோஸ் டங் அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றப்படி எந்த மாற்றமும் இல்லை.

    3-வது போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும் நிலையில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

    இங்கிலாந்து அணியில் ஆடும் லெவன்:-

    க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர், ஜோஷ் டோங்.

    • தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது.
    • எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.

    ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சங்களை பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

    இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை என்று இசையமைப்பாளர் தமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    அகண்டா 2 பட நிகழ்கை ஒன்றில் பேசிய தமன், "தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக வேலை செய்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • 2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வலியைப் பொய் என்றும் இது பொய்யான வழக்கு என்று கூறியவர்கள் இப்போது உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.

    முதல் குற்றவாளி எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று இன்னுமே சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் பொய்.. அவர் எனது ஓட்டுநர் அல்ல.எனக்குத் தெரிந்தவரும் இல்லை.

    2016-ல் நான் நடித்த ஒரு படத்தில் மட்டும் எனக்கு ஏதோ ஓட்டுநராக இருந்தவர். ஆதலால் தயவுசெய்து தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்.

    2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

    அதனால் தான் விசாரணை நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். இருப்பினும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. அனைத்து நீதிமன்றங்களும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை என உணர்ந்துள்ளேன். என் மீது அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள், வாங்கிய காசுக்கு சுதந்திரமாக பணியை தொடரட்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கூறினார்.

    • கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
    • துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    சென்னை:

    துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என அன்புமணி கூறியிருந்தார். இதற்கு, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி கூறியிருப்பதாவது:-

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டினார்.

    * ராமதாசுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.

    * கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்தார்.

    * வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.

    * ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.

    * ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேறத் தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    * ராமதாஸ், அன்புமணி இணைவதற்காக பா.ம.க.விலிருந்து விலகுவதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவும் தயார்.

    * துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். 

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தது.
    • கடற்கரையில் 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்

    இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில், யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அகமத் அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதுகுறித்து பேசிய அகமதுவின் உறவினர் முஸ்தஃபா, "அகமத் ஒரு ஹிரோ என்றும், இரு இடங்களில் குண்டடிப்பட்ட அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    • ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்தார்.

    தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் ஒரு மாணவர் மேடையில் ஆளுநரை வெளிப்படையாக அவமதித்தது இது முதல் முறையாகும்.

     

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி...

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.

    அப்போது, ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணைவேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவிட ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார்.

     

    இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை.

    இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறி உள்ளார். காலம் காலமாக கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.வினர் அரங்கேற்றி வரும் நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

     

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாணவி ஒருவர், ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல. அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது சபை நாகரிகமும் முக்கியம். தமிழையும், தமிழ் மக்களையும் ஆளுநர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.

     

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த பிஎச்.டி மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் இருக்கும்போது, பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

    சிலர் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பாகப் பார்க்க, பலர் இது போன்ற ஒரு புனிதமான விழாவை அவமதிப்பது சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்...

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்.14-ந்தேதி 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.

    அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    மாணவர் பிரகாஷ் அளித்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.

    வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள சில வழிகாட்டிகளுக்கு பணம், உணவு, தங்கம் வழங்குகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்

     

    இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

    விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

    இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பல்கலையில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
    • இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.

    12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.

    இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.

    முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

    அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

    ×