என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
    • மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    மணிப்பூரில் முதல்வர் பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கியுள்ளார்.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 இல் குக்கி மெய்தேய் இங்குளுக்குக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

    இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

    • சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.
    • கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.

    • டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
    • 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் 2-வது போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

    இந்த டெஸ்ட் போட்டியின் 3 ஆவது இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 3 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகளை பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 196 கேட்ச்களும் மார்க் வாக் - 181 கேட்ச்களும் பிடித்து அடுத்தடுத்த இடத்தில உள்ளனர்.

    குறிப்பாக மிக குறைவான டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்தவர்கள்:

    1. ராகுல் டிராவிட் (இந்தியா)- 210 (164 டெஸ்ட்)

    2. ஜோ ரூட் (இங்கிலாந்து)- 207 (152 டெஸ்ட்)

    3. ஜெயவர்த்தனே (இலங்கை)-205 (149 டெஸ்ட்)

    4. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)- 200 (166 டெஸ்ட்)

    5. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)- 200 (116 டெஸ்ட்)

    • மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார் மகேஷ் நாராயணன்
    • மகேஷ் நாராயணன் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் தற்காலிகமாக MMMN என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார்  மகேஷ் நாராயணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த டேக் ஆஃப், மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் திரைப்படம் மலையாள சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் என கூறலாம்.

    மகேஷ் நாராயணன் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் தற்காலிகமாக MMMN என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இலங்கை, துபாய், கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஃபகத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, சரின் ஷிஹாப், ராஜிவ் மேனன், ரெஞி பானிக்கர், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.

    இப்படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். நயன் தாரா மற்றும் மம்மூட்டி இதற்கு முன் தஸ்கரா வீரன், ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் புதிய நியமம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.
    • கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் உடன்பிறப்புகளால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டதால், நிரந்தர ஓய்வெடுக்க அலைகள் தாலாட்டும் வங்கக் கடற்கரைக்கு நம் தங்கத் தலைவர் சென்றபிறகு, அவருடைய அன்பு உடன்பிறப்புகளான நீங்கள், கழகத் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தினீர்கள்.

    கழகத்தைத் தோளிலும், தலைவர் கலைஞரையும் - அவருடைய உடன்பிறப்புகளான உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.

    இடைத்தேர்தல் பணிகளைக் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிப் பிரமுகர்களும் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பிப்ரவரி 6, 7 தேதிகளில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளுக்காகவும், கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் நெல்லை மாவட்டத்திற்கு உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

    ஒவ்வொரு மாவட்டமாக நடைபெறும் ஆய்வுப் பணிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான சந்திப்புக்காக அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வகையிலே மக்களின் பேரன்பும், தாய்மார்களின் பாசமும், உடன்பிறப்புகளின் கொள்கை உணர்வும் பொங்கிப் பெருகுவதைக் காண்கிறேன். அதில் நெல்லைப் பயணம் மிகுந்த உற்சாகத்தை எனக்கு அளித்துள்ளது.

    வழிநெடுகத் திரண்டிருந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள் சகோதரப் பாசத்துடன் அன்பைப் பொழிந்து அகம் மகிழச் செய்தனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சீர் செய்கிற அண்ணனாக, விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தங்கள் வேலை சார்ந்த பயணத்தை எளிதாக்கிய சகோதரனாக என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள். மாணவியர் பலரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகக் கழக அரசு இருப்பதால், மாணவிகள் பலரும் திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, "இவையெல்லாம் எங்களுக்கு ரொம்பவும் பலன் தருகிறது" என்று தெரிவித்ததைக் கேட்டதைவிட, உங்களில் ஒருவனான எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? "அப்பா.. அப்பா.." என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம்தான் கழக ஆட்சியின் ஒரே இலட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன்.

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் குழுமத்தின் சேலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருப்பதுடன், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அமையும் நல்ல சூழலும் உருவாகியுள்ளது. அரசு நலத்திட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1304.66 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 23 பணிகளைத் தொடங்கி வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நெல்லை மக்களின் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதைச் சொல்லால் மட்டுமின்றி செயலாலும் மெய்ப்பித்துள்ளேன், உங்களில் ஒருவனான நான்.

    மாவட்டக் கழகத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சார்ந்தவர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் என நெல்லை மாவட்ட உடன்பிறப்புகளைச் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சியின் அடித்தளமாக இருக்கின்ற கட்சியின் செயல்வீரர்களில் ஆற்றல் மிக்கவர்களை அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள முடிந்ததது. ஆற்றல்மிக்கவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் நெல்லை மாவட்டம் என்றும் கழகக் கோட்டையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்தில் தனக்கேயுரிய ஆற்றலுடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அவர்கள். சொந்த மாவட்டமான திருச்சியாக இருந்தாலும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எந்த மாவட்டமாக இருந்தாலும் எதையும் நேர் செய்துவிடக்கூடியவர் நேரு என்பதை நெல்லை மாவட்ட விழா மேடையிலேயே தெரிவித்தேன். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகள் சிறப்புடன் நிறைவேற முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணம் என்பது இருட்டுக்கடை அல்வாவின் இனிய சுவையாக நெஞ்சில் இனித்த வேளையில்தான், பிப்ரவரி 8ஆம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.

    மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் மற்ற நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து நின்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அதனால் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரித்தார்கள். மக்கள் வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

    மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.

    இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் - உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். 'இருநூறு இலக்கு' என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

    அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

    ஒன்றிய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.

    இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.
    • ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது.

    ராஜஸ்தானில் மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் கொடுத்த தகவல் ரெயில்வே ஆட்சேர்ப்பில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மணீஷ் மீனா என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு ரெயில்வேயில் பாயின்ஸ் - உமன் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.

    அதாவது, தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து மோசடியாக வேலை வாங்கி தர ரெயில்வே காவலரான ராஜேந்திரா என்ற முகவருக்கு ரூ.15 கோடி கொடுத்துள்ளார். இந்த பணத்தை தனது விவசாய நிலத்தை அடைமானம் வைத்துத் திரட்டியுள்ளார்.

    ஆனால் வேலைக்குச் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.

    ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மனீஷ், பணம் கொடுத்த விவகாரத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மேற்கு மத்திய ரெயில்வேயின் விஜிலென்ஸ் துறை விசாரணையைத் தொடங்கியது.

    இந்த விவகாரம் இறுதியில் சிபிஐயிடம் சென்றது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மனீஷின் மனைவி ஆஷா உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    போலி தேர்வரை பயன்படுத்தி வேலை பெற்ற ஒரே நபர் ஆஷா மட்டுமல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெயில்வேயில் ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கவுள்ளது.

    • செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
    • உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது.

    கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

    இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, மு.க.ஸ்டாலின் அவர்களே?

    செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் பயணியும், பெண் காவலர் ரூபாலியும் நடைமேடையில் விழுந்தனர்.
    • ரெயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு காப்பாற்றினர்.

    மும்பை:

    மும்பையில் கிழக்கு புறநகர் பகுதியில் சுனாபட்டி ரெயில் நிலையம் உள்ளது. சம்பவத்தன்று இந்த ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ரெயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அவரது ஆடை மற்றொரு பயணியின் பையில் சிக்கிக் கொண்டது. மேலும் ரெயில் வேகம் எடுத்த போது அந்த பெண் சமநிலை இழந்து நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டார்.

    இதை அங்கிருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ரூபாலி ஓடிச்சென்று, ஓடும் ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண் பயணி ரெயில் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில் அந்த பெண்ணை இழுத்தார். அப்போது பெண் பயணியும், பெண் காவலர் ரூபாலியும் நடைமேடையில் விழுந்தனர். உடனே அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு காப்பாற்றினர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பெண் காவலர் ரூபாலி சரியான நேரத்தில் தைரியமாக செயல்பட்டு, ரெயிலில் சிக்கிய பெண் பயணியை காப்பாற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதைப்பார்த்த பலரும் பெண் காவலரின் தைரியத்தையும், துணிச்சலான செயலையும் பாராட்டி பதிவிட்டனர்.


    • கேரள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
    • இந்தாண்டு தற்பொழுது வரை மலையாள திரையுலகில் மட்டும் 28 படங்கள் வெளியாகியுள்ளது

    கேரள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி வரிகளும் நடிகர்களைன் சம்பளங்கள் அதிகமாக இருப்பதால் மலையாள சினிமாவின் படப்பிடிப்பு பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்த விதிமுறை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இந்தாண்டு தற்பொழுது வரை மலையாள திரையுலகில் மட்டும் 28 படங்கள் வெளியாகியுள்ளது ஆனால் அதில் ரேகாசித்திரம் திரைப்படம் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆவேஷம், பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தவிர 176 திரைப்படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் மலையாள திரையுலகிற்கு 101 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டது.

    ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் செலவு தற்பொழுது அதிகமாக இருக்கிறது. 60 சதவீத தயாரிப்பு செலவுகள் படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமாக மட்டுமே செல்கிறது. 50 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 150 நாட்கள் வரை நீடிக்கப்படுகிறது. இதில் 30 சதவீத வரிகள் வேறு. இச்சுழ்நிலையில் திரையரங்கிள் வெளியாகும் திரைப்படங்கள் வெறும் 10 சதவீத அதன் தயாரிப்பு செலவுகளை வசூலிக்கிறது. இதனால் இந்த முடிவு எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி. சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
    • 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

    156 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
    • பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.

    அவர் தனது பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    வடிவேலு காமெடி ஒன்றில் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கணவன் தனது குடும்பத்தை பார்சலில் அனுப்பி வைப்பார். அதுபோல இந்த இளைஞர் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. 

    ×