என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் யுன்சாவ்கேட் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
- ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மும்பை:
ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மொத்தம் 225 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் வென்டிலேசனில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதனால், குடிமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் உள்பட தரமுள்ள குடிநீரை குடிக்கவும், புதிதான மற்றும் தூய்மையான உணவை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
- அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களுரு பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜார்ஜியா வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேகனா 12 பந்தில் 27 ரன்னும், எல்லீஸ் பெரி 28 ரன்னும், ராக்வி பிஸ்ட் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிச்சா கோஷ் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஸ்னே ரானா 6 பந்தில் 26 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், பெங்களூரு அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் உ.பி.வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உ.பி.வாரியர்ஸ் பெற்ற 3வது வெற்றி ஆகும்.
- பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் லின் சுன் யீ உடன் மோதினார்.
இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
- பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
வரிவிதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா, ரஷியாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
ரஷியாவின் ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.
இந்தியாவில் நடந்த தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது, இந்தியா வரலாற்று ரீதியாக ரஷியாவிடமிருந்து தனது இராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை வாங்கியுள்ளது.
ரஷியாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா கொடுத்த ஆஃபர்
மேலும் டாலருக்கு மாற்றாக உலகளாவிய நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் முயற்சிக்கிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உள்ளது.
இது அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்துகிறது. இந்த வகையான விஷயங்கள் அமெரிக்கா - இந்தியா இடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவதில்லை.
இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
- ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள்.
தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க.வினரை விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துவரும் அராஜக சீண்டல்கள், பாலியல் வன்முறைகள், பாதுகாப்பற்ற சூழல் போன்ற குற்றங்களைக் கண்டித்து சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகம் முழுவதும் அடையாள அறவழிப் போராட்டத்தை நடத்தினர் நமது கழக மகளிரணி தோழர்கள்.
மகளிர் பாதுகாப்பை மதிக்காத ஆட்சியாளர்கள், அரசியலமைப்பு கொடுத்த ஜனநாயக உரிமையையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
இதனை, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் விமர்சனக் குரலைச் சகித்துக்கொள்ள முடியாத அரசின் எதேச்சதிகார போக்காகவே கருத வேண்டியுள்ளது.
அரசின் காவல்துறை பெண்கள் உட்பட தமது குடிமக்களைப் பாதுகாக்க உள்ளதா? அல்லது அதற்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க உள்ளதா? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
பிரச்சனைகளைப் பேசி யாரும் எதிர்க்குரல் எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசு, அந்த சுறுசுறுப்பை சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் காட்டுவதில்லை.
பெண்கள் உரிமையைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினால் கைது செய்வேன் என்ற அச்சுறுத்தலை நம் மகளிருக்கு இந்த மகளிர் தின பரிசாக வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
இத்தகைய ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள். மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட மகளிரணி தோழர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றால் கேப்டனாக நீடிப்பாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு பின் கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததிலிருந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை முன்வைத்து அவரை கேப்டன் பதிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்ததாக உறுதியான தகவல் வெளியாகி இருந்தன.
தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நாளை நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.
ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. மேலும் ஓய்வு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து புதிதாக ஆலோசனை நடத்தப்படும்.
இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இது தொடர்பாக கூறியதாவது:-
தற்போது வரை நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும், சாம்பியன் டிராபியில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளளோபம். ரோகித் சர்மா என்னிடமோ அல்லது அணியிடமோ அவருடைய ஓய்வு குறித்து ஏதும் பேசவில்லை. ரோகித் சர்மா அப்படி ஒரு நினைப்பில் இருப்பதுபோல் எனக்குத் தோன்றவில்லை.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பதவி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு ரோகித் சர்மா விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றார்.
- ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த ஆயுதப் போராளிகளும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அண்டை நாடான மியான்மரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் 4 வருட ராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மியான்மரின் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மின் ஆங் அங்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அதில் அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மியான்மரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, ராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும்.
- பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் சார்பில் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், நாளை காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்த்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?
- எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் மனநிலையைக் களைய பெண்கள் ஒரேயொரு கொலை செய்தால் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குடியரசுத் தலைவரிடம் பரப்பரப்பு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில் கூறியதாவது, இந்த நாடு புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் நாடாகக் கருதப்படுகிறது. அமைதி மற்றும் அகிம்சையின் சிறந்த சின்னமாக இருக்கும் பூமி, இப்போது மன்னிப்பை எதிர்பார்த்து கோரிக்கை வைக்கிறது.
இன்று நாட்டில் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு, மும்பையில் 12 வயது சிறுமி ஒருத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?
உலக மக்கள்தொகை சீரமைப்பு கணக்கெடுப்பு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை கொண்ட பல்வேறு நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலேயே இந்தியா உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளது. இதில் பெண்கள் கடத்தல், குடும்ப வன்முறை குற்றங்கள் மற்றும் பிற தீவிர குற்றச் செயல்கள் ஆகியவை அடங்கும். எனவே, அனைத்து பெண்கள் சார்பாக ஒரேயொரு குற்றத்துக்காக எங்களை மன்னிக்க கோருகிறோம்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மனநிலை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டுமென்ற மனநிலையை, செயலற்று கிடக்கும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைக் கொல்ல நாங்கள் விழைகிறோம்.
இன்னலுற்ற நமது தேசத்தை காக்க மகாராணி, தாராராணி, புண்யஷ்லோக் அஹில்யாதேவி வாளை எடுத்துக்கொண்டு, நம் சமூகத்தை சீர்திருத்த நம்மிடம் கேட்கிறாள்.
எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சர்வதேச மகளிர் நாளான இன்று , இதையே உங்களிடமிருந்து கிடைக்கும் பரிசாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
- பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
- வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ ரெயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624-வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன, இதன் மூலம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
இந்த இறுதி யு-கர்டர் குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள SP-04-05 தூண்களுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது. மேலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3,202 முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements) மற்றும் 2 திறந்த வலை உத்திரங்கள் (Open Web Girders), உட்பட 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.
இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது.
- நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள்.
ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 10 அணிகளில் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் முன்னணி அணிகளில் ஒன்று. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
10 அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில் "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது. நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள். இந்திய அணியில் விளையாடுவதற்காக செல்வீர்கள்" என்றார்.
சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணி கேப்டனாக உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனி தொடக்க போட்டியில் வருகிற 23-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.






