என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், பிரான்சில் கரோலின் கார்சியா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-3, 6-3 என வென்று, நெதர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.

    சென்னை:

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

    இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, உக்ரைனுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்து ஆயுதம், நிதியுதவி வழங்கியது. ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. உக்ரைனுக்கு அளித்துவந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. டோனெட்ஸ்க் பகுதியில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கார்கிவ் மற்றும் ஒடிசா பகுதிகளில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்பட்டன.

    பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகம் ஒன்றின் மீது தாக்குதலை தொடுக்க பயன்படுத்தப்பட்டன.

    இதுதொடர்பாக, ஜெலன்ஸ்கி டெலிகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், மீட்புக்குழுவினரை இலக்காக கொண்டு ரஷியா மற்றொரு தாக்குதலை உள்நோக்கத்துடன் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல், ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை என எடுத்துக் காட்டுகின்றன என தெரிவித்தார்.

    • ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
    • இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

    • வந்தே பாரத் ரெயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கினர்.
    • அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டது.

    இந்த சிறப்பு ரெயிலை பெண் லோகா பைலட் சுரேகா யாதவ், உதவி லோகோ பைலட் சங்கீதா குமாரி ஆகியோர் இயக்கினர்.

    இதில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரெயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில் பணிப்பெண்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

    ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.

    மத்திய ரயில்வே பயணிகள் ரயில் மேலாளர் ஸ்வேதா கோன், ஒரு பெண் பிரசவம் போன்ற கடினமான பணியைச் செய்ய முடிந்தால், அவரால் எதுதான் செய்ய முடியாது? ஒரு பெண் திறமையானவராக மாறும்போது அவர் தனது முழு குடும்பத்தையும் உயர்த்த முடியும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என தெரிவித்தார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் யுன்சாவ்கேட் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மும்பை:

    ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

    இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.

    இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மொத்தம் 225 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    இதுவரை 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் வென்டிலேசனில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதனால், குடிமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் உள்பட தரமுள்ள குடிநீரை குடிக்கவும், புதிதான மற்றும் தூய்மையான உணவை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
    • அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லக்னோ:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களுரு பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜார்ஜியா வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேகனா 12 பந்தில் 27 ரன்னும், எல்லீஸ் பெரி 28 ரன்னும், ராக்வி பிஸ்ட் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ரிச்சா கோஷ் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஸ்னே ரானா 6 பந்தில் 26 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், பெங்களூரு அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் உ.பி.வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உ.பி.வாரியர்ஸ் பெற்ற 3வது வெற்றி ஆகும்.

    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் லின் சுன் யீ உடன் மோதினார்.

    இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
    • பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

    வரிவிதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா, ரஷியாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.

    இந்தியாவில் நடந்த தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது, இந்தியா வரலாற்று ரீதியாக ரஷியாவிடமிருந்து தனது இராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை வாங்கியுள்ளது.  

    ரஷியாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா கொடுத்த ஆஃபர்

    மேலும் டாலருக்கு மாற்றாக உலகளாவிய நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் முயற்சிக்கிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உள்ளது.

    இது அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்துகிறது. இந்த வகையான விஷயங்கள் அமெரிக்கா - இந்தியா இடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவதில்லை.

    இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
    • ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள்.

    தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க.வினரை விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துவரும் அராஜக சீண்டல்கள், பாலியல் வன்முறைகள், பாதுகாப்பற்ற சூழல் போன்ற குற்றங்களைக் கண்டித்து சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகம் முழுவதும் அடையாள அறவழிப் போராட்டத்தை நடத்தினர் நமது கழக மகளிரணி தோழர்கள்.

    மகளிர் பாதுகாப்பை மதிக்காத ஆட்சியாளர்கள், அரசியலமைப்பு கொடுத்த ஜனநாயக உரிமையையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.

    இதனை, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் விமர்சனக் குரலைச் சகித்துக்கொள்ள முடியாத அரசின் எதேச்சதிகார போக்காகவே கருத வேண்டியுள்ளது.

    அரசின் காவல்துறை பெண்கள் உட்பட தமது குடிமக்களைப் பாதுகாக்க உள்ளதா? அல்லது அதற்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க உள்ளதா? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

    பிரச்சனைகளைப் பேசி யாரும் எதிர்க்குரல் எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசு, அந்த சுறுசுறுப்பை சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் காட்டுவதில்லை.

    பெண்கள் உரிமையைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினால் கைது செய்வேன் என்ற அச்சுறுத்தலை நம் மகளிருக்கு இந்த மகளிர் தின பரிசாக வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

    இத்தகைய ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள். மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட மகளிரணி தோழர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ளது.
    • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றால் கேப்டனாக நீடிப்பாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு பின் கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததிலிருந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை முன்வைத்து அவரை கேப்டன் பதிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்ததாக உறுதியான தகவல் வெளியாகி இருந்தன.

    தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நாளை நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

    ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. மேலும் ஓய்வு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

    நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து புதிதாக ஆலோசனை நடத்தப்படும்.

    இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இது தொடர்பாக கூறியதாவது:-

    தற்போது வரை நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும், சாம்பியன் டிராபியில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளளோபம். ரோகித் சர்மா என்னிடமோ அல்லது அணியிடமோ அவருடைய ஓய்வு குறித்து ஏதும் பேசவில்லை. ரோகித் சர்மா அப்படி ஒரு நினைப்பில் இருப்பதுபோல் எனக்குத் தோன்றவில்லை.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    கேப்டன் பதவி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு ரோகித் சர்மா விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×