என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
- பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
கோவை:
கோவையில் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று அண்ணாமலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். நான் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. என்ற பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுபற்றி விவாதத்துக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை பற்றி எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக பேசி இருக்கிறார். அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பா.ஜ.க.வை திட்டுவதையே நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை.
- பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் முன்னிலை வகித்தார்.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மருத்துவர் அணி தலைவர் கனிமொழி சோமு எம்.பி., மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பெண்களை படிக்கக்கூடாது என்றும், இந்த உலகத்தில் உன்னால் போட்டிபோட முடியாது என்று சொல்வார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தற்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு நமது தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் காரணம். பெண்கல்வி இருந்தால் சமூகம் மாற்றம் அடையும்.
நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கள் வீட்டு பிள்ளைகள் யார் இந்தி படிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்தது கிடையாது. நான் டெல்லியில் இருக்கும்போது இந்தி தெரியாததால் எனக்கு இதுவரை எந்த சிரமமும் ஏற்படவில்லை.
இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி தமிழகம் வருகிறார்கள்.
அவர்கள் தமிழ் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். தமிழ் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். மும்மொழி கொள்கை படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.
எந்த தடையும் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.
- எம்.பி.க்கள் கூட்டம் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த நிலையில், நாளை ( மார்ச் 10-ம் தேதி) பாராளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.
நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
எம்.பி.க்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?. எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்? யார் யார் பேசு வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
- இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சிரிய அதிபர் பஷர் ஆசாத்-க்கு ஆதரவானோர், பாதுகாப்பு படையினர் மற்றும் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலைகளில் இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.
பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்பு படையை சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுத படையை சேர்ந்த 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.
கடலோர பகுதிகளான லடாகியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் சிறிய ரக உணவகங்களும் மூடப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு சவால் விடும் வகையில், கடந்த வியாழன் கிழமை தொடங்கிய தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளது. முன்னாள் அதிபர் பஷார் ஆசாத் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆயுதப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகம் திறக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில், பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் பங்கேற்றார்.
லண்டன்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.
இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையே, வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு மான்செஸ்டரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தைத் திறந்து வைத்தார். அப்போது, பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய தூதரக ஜெனரலாக விசாகா யதுவன்ஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் உள்பட பலர் பங்கேற்றனர்.
அங்குள்ள ஓல்டு டிராபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன்வாழ் இந்தியர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். பிரிட்டனில் உள்ள கவுன்டி அணியான லங்காஷைர் பெண்கள் கிரிக்கெட் அணியினரையும் அவர் சந்தித்தார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது.
- துபாயில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
துபாய்:
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 746 ரன்கள் அடித்துள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மேலும் 46 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், பிரான்சில் கரோலின் கார்சியா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-3, 6-3 என வென்று, நெதர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.
சென்னை:
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கீவ்:
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, உக்ரைனுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்து ஆயுதம், நிதியுதவி வழங்கியது. ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. உக்ரைனுக்கு அளித்துவந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. டோனெட்ஸ்க் பகுதியில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கார்கிவ் மற்றும் ஒடிசா பகுதிகளில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்பட்டன.
பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகம் ஒன்றின் மீது தாக்குதலை தொடுக்க பயன்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக, ஜெலன்ஸ்கி டெலிகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், மீட்புக்குழுவினரை இலக்காக கொண்டு ரஷியா மற்றொரு தாக்குதலை உள்நோக்கத்துடன் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல், ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை என எடுத்துக் காட்டுகின்றன என தெரிவித்தார்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
- வந்தே பாரத் ரெயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கினர்.
- அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரெயிலை பெண் லோகா பைலட் சுரேகா யாதவ், உதவி லோகோ பைலட் சங்கீதா குமாரி ஆகியோர் இயக்கினர்.
இதில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரெயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில் பணிப்பெண்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.
மத்திய ரயில்வே பயணிகள் ரயில் மேலாளர் ஸ்வேதா கோன், ஒரு பெண் பிரசவம் போன்ற கடினமான பணியைச் செய்ய முடிந்தால், அவரால் எதுதான் செய்ய முடியாது? ஒரு பெண் திறமையானவராக மாறும்போது அவர் தனது முழு குடும்பத்தையும் உயர்த்த முடியும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என தெரிவித்தார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் யுன்சாவ்கேட் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






