என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன்.
    • என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது.

    அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விப்ராஜ் நிகம்- அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக கடைசி வரை அசுதோஷ் சர்மா வெற்றிக்காக போராடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த பரபரப்பான போட்டியில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அசுதோஷ் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன். மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்சர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

    எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இருந்தது. என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது என கூறினார்.

    • மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    • சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி ரத்த காயத்துடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் புகார் கூறியுள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த SFI மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னையில் யு டியூபர் சவுக்கு சங்கரின் இல்லம் தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் வந்தவர்களால் அருவருக்கத்தக்க வகையில் தாக்கப்பட்டிருப்பதும், அவரது வயது முதிர்ந்த தாயார் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் கடுமையான கண்டிக்கத்தக்கவை.

    ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.



    • பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
    • ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான்.

    இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.

    இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 -25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் ரயான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார்.

    பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா, டென்ட் கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் கண்டுகளிக்க முடியும்.

    இந்தப் படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

    அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
    • இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார். 

    • லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    • திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம்

    கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.

    37 வயதான லோக்நாத் சிங் பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் லோக்நாத் சிங்கின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.
    • மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

    ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது.

    கூட்டுக் குழுவின் தலைவர் பிபி சவுத்ரி, ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதா (129 வது சட்டத்திருத்தம் 2024), யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2024 ஆகிட்டவற்றின் மீதான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்தது. இதற்கிடையே இன்று மதியம் 3 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
    • வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

    இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-

    பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

    முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
    • கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

    அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

    இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். 

    • குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
    • ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வருகிற 28-ந் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்ததாக தகவல் வெளியானது.

    இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் வேதனையடைந்தனர். மும்பை- சென்னை அணிகளுக்கான ஆட்டத்திற்கும் இதேபோல் தான் உடனே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வாங்குவது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நிர்வாகம் கொடுக்கும் இணையதளத்தின் உள்ளே சென்றாலே 3 லட்சம் பேர் காத்திருப்பதாக மெசெஜ் வருகிறது. காத்திருந்தால் கூட டிக்கெட் பெற இயலவில்லை எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக சென்னை போட்டிகளின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் லட்ச கணக்கில் விற்பனை செய்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்தும் வாங்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் எக்ஸ் தளம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னிடம் டிக்கெட் இருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்ள தனது நம்பருக்கு கால் செய்யுங்கள் அல்லது மெசெஜ் செய்யுங்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


    உடனே டிக்கெட்டுக்காக அதனையும் ரசிகர்கள் யோசிக்காமல் செய்கிறனர். இதனால் பெரிய அளவில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். டிக்கெட் இல்லாமலே தன்னிடம் டிக்கெட் இருப்பதாக கூறி ஏமாற்று வேலையிலும் சிலர் ஈடுபடுகின்றனர். டிக்கெட் வேண்டும் என்ற ஆசையில் முதலில் கேட்டவுடன் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி விடுகின்றனர். பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் போன் அனைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

    மேலும் பலர் ஒரு டிக்கெட்டை பல பேருக்கு அனுப்பி வைத்து விட்டு அனைவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கடைசியில் டிக்கெட்டை கொடுக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உஷாரக இருக்க வேண்டும்.

    இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×