என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
- தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிப்பு
மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
- புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.
இதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையையொட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள்.
அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும் புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.
போகிப்பண்டிகையின் போது பழையபொருட்களை எரித்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டது .
இதன் பின்னர் விழிப்புணர்வுகளால் போகிப்பண் கையின் போது பழைய பொருட்களை எரிப்பது குறைந்து விமான சேவைகள் பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது இதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியில் இருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் என சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது
- திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
- டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.
- டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 7 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படுகிறார்.
கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.
மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தவெக கடிதம் எழுதியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய மன்னார் பகுதிகளில் நிலவி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
- கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 11:00 மணி அளவில் இந்தச் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்.
- 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது.
- உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
புத்தகம்! மக்களிடையே காட்சி மீது உருவாகியுள்ள ஈர்ப்பு, எழுத்து மீது குறைந்து வருவது குறித்து அனைவரும் ஒரு கட்டத்தில் உணர நேரிடும். கண் முன் கிண்டி வைத்த படத்தை நோகாமல், எந்த மெனக்கிடலும் இல்லாமல் பார்த்துப் பழகியதால் அதிக கவனத்தை கோரும் எழுத்தின் பக்கம் பலர் செல்லாமலேயே இருந்து விடுவது உண்டு.
ஆனால் இரண்டும் வெவ்வேறு வழிகளில் அதனதன் தன்மைகளில் சுவை தருபவை. எழுத்தில் வாசகர்களின் கற்பனைக்கு அதிக இடம் உண்டு. தேடலுக்கு இடம் உண்டு. முழுமையான உணர்வுக்கு இடம் உண்டு. ஆனால் இவ்வின்பங்கள் துய்க்கப்படாமலேயே நம் கண் முன் வீணாவது வேதனையே. ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்பதற்கினங்க நம் சிந்தனைக்கு வேலை தரும் புத்தகங்கள் ஏராளம்.
புத்தக வாசிப்பு என்பது ஒரு கடல். அது முழு உலகம், அதன் கதவுகள் என்றும் அகலத் திறந்தே உள்ளன. ஆனால் தயக்கம் பலரை தடுக்கிறது. இந்த சிறு தடையை கடந்து வந்தால் இந்த உலகின் பிரமாண்டங்களையும், ஆச்சர்யங்களையும் காணலாம். மனிதர்களின் மனதின் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது. அக சிடுக்குகளை ஆராய்கிறது. இது சினிமாவில் 100 சதவீதம் சாத்தியமாவது அரிதே.
சரி, புத்தம் படிக்கலாம் என்று முடிவெடித்துவிட்டோம், எங்கு?, எப்படி தொடங்குவது? என்று கேட்கிறீர்களா?, உலகம் உருண்டையாக இருப்பதால் அதற்கு தொடக்கப் புள்ளி என்று ஒன்று கிடையாது. அதே போலவே புத்தகங்களும்.
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்" என்ற துள்ளாத மனமும் துள்ளும் குட்டியின் பாடலுக்கு இணங்க தேடல், உங்களை உங்கள் வாழ்வையே, வாழ்வு குறித்த உங்கள் பார்வையையே, மாற்றக் கூடிய புத்தகத்துக்கு உங்களை இட்டுச் செல்லலாம்.
இதற்கு ஏற்ற களம் புத்தக கண்காட்சி என கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்த்திலும் புத்தக கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடந்து தான் வருகின்றன.
ஒரு சுற்றுலாத் தளத்துக்கு செல்வது போல, திரையரங்குக்கு செல்வது போல அங்கு சென்று, உங்கள் பார்வையை அலைபாய விடுங்கள். அப்படி என்னதான் இருக்கிறது? என்ற கேள்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு அட்டைப்படம் உங்களை ஈர்க்கலாம், ஒரு எழுத்தாளரின் பெயர் உங்களை ஈர்க்கலாம், புத்தம் குறித்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் உங்களை ஈர்க்கலாம்.
பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு இதை படிக்கலாம் என்று நிச்சயம் சொல்லும். வாங்குங்கள். 199 ரூபாய் செலவில் ஒரு 2 மணிநேர சினிமாவை முடித்து வெளியே வந்தால் உங்களிடம் நிறைவு இருக்கலாம், ஆனால் உங்கள் கையில் ஒன்றும் இருக்காது. ஒரு புத்தகம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தான் இருக்கும். அதை மீண்டும் மீண்டும் மறு வாசிப்பு செய்யலாம், பிடித்தவர்களுக்கு பரிசளிக்கலாம். உங்களுக்கு புரிகிறது தானே. அவ்வளவு தான் விஷயம்.
புத்தகத்தை வாங்கிவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்று கேட்கிறீர்களா?, தயக்கத்தை தூக்கியெறியுங்கள். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் படித்தே தீர்வீர்கள். இந்த புத்தகம் வாங்கும் விஷயமே வேண்டாம் என நினைக்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது ஊர்தோறும் நூலகங்கள்.
ஒரு நாள் சுற்றிப் பார்க்கவாவது செல்லுங்கள், நூலகத்தின் மாயத்தன்மையின் புத்தக வாசமும், அறிவுச் சூழலும் நிச்சயம் உங்களை மீண்டும் அதை நோக்கி இழுக்கும். மெதுவாக ஒரு புத்தகத்தை கையில் எடுத்து அலட்சியமாக பார்ப்பீர்கள்.பின்னர், சில பக்கங்களின் மீது உங்கள் கண்கள் அலைபாயும். ஒரு வரி, பத்தி உங்களை ஈர்க்கலாம். மேஜையில் வந்து அமர்வீர்கள். முதல் பக்கத்தை படிப்பீர்கள். அது உங்களை உள்ளே இழுக்கும். பின்னர் என்ன? நீங்கள் ஒரு முழுமையான வாசகன் ஆவீர்கள். அதில் உள்ள சுகத்தை உணர்வீர்கள். ரசனை வளரும். ரசனையோடு உங்கள் பார்வையும் விரிவடையும்.

புதிதாக படிக்கும் வாசகர் என்றால் 100 பக்கங்களுக்குள் உள்ள புத்தகங்களை முதலில் தேர்ந்தெடுக்கலாம். முழுதாக படித்து முடிக்கும் அனுபவம் தான், அடுத்த புத்தகத்துக்கு உங்களை அழைத்து போகும். தினம் டிவி பார்ப்பது போல சில பக்கங்களை அசை போடுங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். 2026 சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி.
பல புத்தக விரும்பிகளுக்கு இது சொர்க்கம். பதிப்பகம் வாரியாக அரங்குகள் அமைத்து 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். இதே போல உங்கள் ஊரிலோ மாவட்டத்திலோ வருடந்தோறும் நடக்கும். பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தனையும் பேசிவிட்டு தலைப்பிற்கு இணங்க நல்லதொரு தொடக்கத்திற்கு சில புத்தகங்களை குறிப்பிடாமல் போனால் நன்றாக இருக்காது. எனவே அவை கீழ்வருமாறு..
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (நாவல்) - ஜெயகாந்தன்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சுந்தர ராமசாமி
தமிழ் நவீன இலக்கிய உலகில் பலருக்கும் பிடித்தமான நாவல் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை. 1966-ல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து வாசகர்கள் பலரால் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிற்பாடு வரையிலான ஒரு கால கட்டத்தை புளியமரத்தோடு பல நிகழ்வுகைளைத் தொகுத்து நமக்குக் காட்டும் நாவல் இது.
கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
இது இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், தமிழகத்திலிருந்து பர்மா, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை, காதல், பிரிவு மற்றும் துயரங்களை சித்தரிக்கிறது.
எழுத்தாளர் சி.மோகன் கூற்றுப்படி, ப. சிங்காரம், நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றது.
புயலிலே ஒரு தோணி (நாவல்) - ப.சிங்காரம்
கடலுக்கு அப்பால் நாவலின் இன்னும் ஆழமான தொடர்ச்சி புயலிலே ஒரு தோணி. பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும்.
நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது. 'மனதை இழக்காதவரை நாம் எதையும் இழப்பதில்லை' - புயலிலே ஒரு தோணி நாவலின் கடைசி வரி இது.
கோபல்ல கிராமம் (நாவல்) - கி.ராஜநாராயணன்
கரிசல் நிலத்தை, கரிசல் மக்களின் வாழ்வை, கரிசல் மண்ணின் வாசனையோடு பதிவு செய்யும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
எரியும் பனிக்காடு – மூலம் - Red Tea - பி.எச். டேனியல்
பாலாவின் "பரதேசி" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கங்காணி முறையினை பயன்படுத்தி எப்படி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக ஆனைமலைக் காட்டில், தேயிலை தோட்டங்களில் எப்படியாக சிறைபடுத்தினார்கள் என்பதை சித்தரிக்கும் வரலாற்றுப் புதினம்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துகிறது. சாதிய, பாலியல், மற்றும் உழைப்பு சுரண்டல்களால் அன்றைய காலங்களில் மக்களின் வாழ்வு எப்படி சீர்குலைந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
ஏழு தலைமுறைகள் (நாவல்) - அலெக்ஸ் ஹேலி
இது 18-ஆம் நூற்றாண்டில் கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கறுப்பின இளைஞனின் குடும்ப வரலாறு, அவர்களின் வேர்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கொடூரமான பாதிப்புகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் ஆழமான, வேதனை நிறைந்த கதை.
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
- கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
- ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட ஜன நாயகன் வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சண்முகம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவிற்கு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவதை விட வேறு வேலை கிடையாது. தணிக்கை குழுவில் U/A சான்றிதழ் கொடுக்கலாம் என 4 பேர் சொல்லும்போது, ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் நீதிமன்றம் செல்லப்பட்டுள்ளது.
பெரும்பான்மையினர் தெரிவிக்கும் சான்றிதழ் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. இப்படி நடந்து கொண்டால் சினிமாத்துறையால் பிழைக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசு இதுபோன்ற நிர்ப்பந்தங்களை கொடுத்து விஜயை வளைத்து விடலாம் என்ற நோக்கத்தோடு இத்தகைய தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
இப்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். அநீதி என்பதெல்லாம் தெரிந்து கொண்டும் ஜன நாயகன் வாயே திறக்கவில்லை. கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
மத்திய அரசின் தூண்டுதல் பேரில்தான் தணிக்கை குழு இப்படிப்பட்ட நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று சொன்னால் தனக்கு சங்கடமான, பின் விளைவுகளை ஏற்படுத்துமே என்ற காரணத்தினால் அவர் வாய் திறக்காமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.






