search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மசோதாக்களுக்கு சீக்கிரம் ஒப்புதல் கொடுங்க.. மு.க. ஸ்டாலின்
    X

    மசோதாக்களுக்கு சீக்கிரம் ஒப்புதல் கொடுங்க.. மு.க. ஸ்டாலின்

    • மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
    • இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

    அவ்வழக்கில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதலமைச்சர் அவர்களோடு ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், ஆளுநர் அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

    ஆளுநர் அவர்களின் அழைப்பினையேற்று, முதலமைச்சர் இன்று (30.12.2023) ஆளுநர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர்எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்தார்.

    ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

    அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநர் அவர்களை, முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி. வீரமணி அவர்கள் தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் அவர்கள் நிலுவையில் உள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பானது குறித்தும், மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கோப்பும், நீண்ட காலமாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

    பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் அவர்கள் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிருவாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் அவர்களது செயல்பாடு அமையும் என்றும் முதலமைச்சர், ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

    ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநர் அவர்களுக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர் அவர்கள் மனதில் கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை தவிர்த்திட வேண்டுமென்றும் ஆளுநர் அவர்களை கேட்டுக் கொண்டார்.

    முதலமைச்சர், ஆளுநர் இந்த ஆலோசனையின் போது, அரசின் சார்பாக மேற்படி கருத்துக்களை முதலமைச்சரும், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினர்.

    முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அப்போது வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    Next Story
    ×