search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு செய்த சதி - அமைச்சர் ரகுபதி விளக்கம்
    X

    தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு செய்த சதி - அமைச்சர் ரகுபதி விளக்கம்

    • கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி வினோத் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் போல இதுவரை யாரும் எடுத்ததில்லை. ஆளுநர் மாளிகையின் முன்பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

    அவருக்கு எந்தவித பின்புலமும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. அவர் 8 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார். சிறையில் அவருக்கு மற்ற நபர்களுடன் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. சிறையில் இதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் இதுவரை தெரியவில்லை. மேலும் அவர் இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் முழு விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆளுநர் மாளிகைக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் போகிற யாரோ ஒருவர் எதையோ வீசிவிட்டுச் செல்கிறார் என்றால் அதற்கு உளவுத்துறையோ, யாரோ எப்படி பொறுப்பேற்க முடியும்? அதேநேரத்தில், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிரியையும் பாதுகாக்க வேண்டும் என்பவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்று போகிற போக்கில் சொல்லக் கூடாது. தி.மு.க.விற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதிச்செயல்தான் இந்த சம்பவம். தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் ஆளுநர் மீது வாய்மொழித் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். அவர் தான் எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். நாங்களும் பொறுத்துச் சென்றோம்.

    ஆனால் தவறான தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டியது எங்களின் கடமை. அதன்படி நாங்கள் அவருக்கு பதில் தான் கொடுத்து வருகிறோம். யாரையும் அசிங்கப்படுத்த வேண்டிய நோக்கம் எங்களுக்கு இல்லை .

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    Next Story
    ×