search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரிசங்கர்
    X
    கவுரிசங்கர்

    குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

    பல்லடம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 36). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பானுப்பிரியா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதையடுத்து பெற்றோர் சமாதானம் செய்தும், இருவருக்கும் இடையேயான மனஸ்தாபம் தீரவில்லை.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுரிசங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியை வயிறு, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பானுப்பிரியா வலி தாங்க முடியாமல் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அப்போதுஅங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பானுப்பிரியாவை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் மனைவியை கோபத்தில் கத்தியால் குத்தி விட்டோமே என மனமுடைந்த கவுரிசங்கர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சரணடைய சென்றார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் “கோபத்தில் மனைவியை கத்தியால் குத்தி விட்டதாகவும், இதனால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும்” கூறினார். மேலும் கவுரிசங்கர் பேசும்போதே பூச்சிக்கொல்லி வாசம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுரிசங்கர் இறந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×