search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டியூரில் விவசாயிகள் அடிபம்பில் இருந்து தண்ணீர் பிடித்து நாற்றங்காலில் ஊற்றினர்
    X
    கண்டியூரில் விவசாயிகள் அடிபம்பில் இருந்து தண்ணீர் பிடித்து நாற்றங்காலில் ஊற்றினர்

    வாய்க்காலை எட்டாத காவிரி நீர்- அடிபம்பில், தண்ணீர் பிடித்து நாற்றங்காலில் ஊற்றும் விவசாயிகள்

    காவிரி நீர் வாய்க்காலை எட்டாத காரணத்தால் திருவையாறு அருகே விவசாயிகள் அடிபம்பில் தண்ணீர் பிடித்து நாற்றங்காலில் ஊற்றி நாற்றை வளர்த்து வருகிறார்கள். கல்லணை அருகிலேயே இந்த அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
    திருவையாறு:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு, காவிரி ஆறு பாயும் ஊராகும். இதன் அருகே திருப்பூந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை காவிரி நீர் இன்னும் எட்டவில்லை.

    இதன் காரணமாக இந்த பகுதியில் குறுவை சாகுபடிக்காக தயாரான நாற்றங்கால்கள் தண்ணீரின்றி காயும் நிலை ஏற்பட்டுள்ளது. இளம் நாற்றுகளை காப்பாற்ற அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கண்டியூர்-திருப்பூந்துருத்தி மெயின் சாலை பகுதியில் உள்ள அடிபம்பில் இருந்து குடம், வாளியில் தண்ணீர் பிடித்து நாற்றங்காலில் ஊற்றி நாற்றை வளர்த்து வருகிறார்கள்.

    கல்லணையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் குடமுருட்டி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள கண்டியூர் வாய்க்கால், சங்கரன்குளம் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால், இவ்வாறு அடிபம்பில் தண்ணீர் பிடித்து நாற்றங்காலுக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

    இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கண்டியூர் வாய்க்காலின் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆற்று நீரை நம்பி நகைகளை அடகு வைத்து குறுவை சாகுபடிக்கு தயாராக இருந்தோம். கல்லணை திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக நாற்றங்காலில் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்து வருகிறது.

    பாதிக்கப்பட்டுள்ள நாற்றங்காலுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி பணிக்கு தேவையான தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
    Next Story
    ×