search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    ஜெ.அன்பழகன் நலம் பெறும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்- மு.க.ஸ்டாலின் உருக்கம்

    “சளைக்காத போராளியான ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாடுகளுக்காக சென்னையின் பல பகுதிகளுக்கு நான் நேரில் சென்று உதவிகள் வழங்கிய நிலையில், தனது மாவட்டத்திற்கு உட்பட்ட நிகழ்வுகளில் என்னை சிரமப்படுத்தக்கூடாது என்ற கவனத்துடன், தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் ஜெ.அன்பழகன்.

    களத்தில் இறங்கிய போர் வீரனைப்போல இலக்கை தவிர வேறெதையும் சிந்திக்காமல் செயல்பட்டார். தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். 80 சதவீதத்துக்கு மேல் செயற்கை சுவாசம் தேவைப்பட்ட நிலையில், தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையினால் வெள்ளிக்கிழமை (நேற்று) காலையில் 45 சதவீதம் அளவிற்கு செயற்கை சுவாசம் என்கிற மெலிதான முன்னேற்ற நிலை ஏற்பட்டு, தொடர்ந்து சீரான நிலையில் இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மருத்துவர்களின் அயராத உழைப்பும், அக்கறையும், சிகிச்சை முறையும் நிச்சயமாக ஜெ.அன்பழகனை முழுமையாக நலன் பெறச்செய்து, கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து வந்து நம்முடன் முன்புபோல பழகிப்பேசி பணிகளை கவனிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சளைக்காத போராளியான ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×