search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சேரன்மகாதேவி அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு வலைவீச்சு

    சேரன்மகாதேவி அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேரன்மகாதேவி:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள இடையன்குளம் வடக்கு எருக்கலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாசன். இவருடைய மகன் ரூபன் வேததுரை (வயது 32). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    நேற்று மதியம் ரூபன் வேததுரை ஊருக்கு அருகே புலவன் குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். குளத்தின் அருகில் சென்ற போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபன் வேததுரை தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை தப்பவிடாமல் பிடித்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த ரூபன் வேததுரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அங்கு ஆட்கள் வந்ததால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்துக்கும், ரூபன் வேததுரை வீட்டிற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரூபன் வேததுரையை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    கொலைக்கான காரணம் குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடையன்குளத்தை சேர்ந்த தங்கசாமி என்பவர் குளத்தில் இருந்து மண் அள்ளி உள்ளார். இதை பார்த்த ரூபன் வேததுரை, தனது நண்பர்களுடன் சென்று மண்ணை கொண்டு செல்ல விடாமல் அங்கேயே தட்ட வைத்து விட்டனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை காரணமாக தங்கசாமி மற்றும் இடையன்குளத்தை சேர்ந்த சுரேஷ், ஆத்தியான் குளத்தை சேர்ந்த எட்வின் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரூபன் வேததுரையை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதனால் போலீசார் அவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×