search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட அரவிந்த்- மணி
    X
    கொலையுண்ட அரவிந்த்- மணி

    குடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை

    திருச்செங்கோட்டில் குடிபோதையில் சொத்து கேட்டு தகராறு செய்த மகனை, தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் மணி (58). பட்டறை மேடு பகுதியில் பாடி பில்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி (52) என்ற மனைவியும் ஆனந்த் (38), அரவிந்த் (28). என்ற 2 மகன்கள் உள்ளனர். தொண்டிக் கரடு பகுதியில் சொந்த வீடு உள்ளது.

    மூத்தமகன் ஆனந்த் திருமணமாகி தனியே வசித்து வருகிறார். இளையமகன் அரவிந்த் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    டிங்கரிங் வேலை பார்த்து வந்த அரவிந்த் குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு சரியாக செல்லாமல் அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவரது தந்தை சொந்த வீட்டை விட்டு அதே பகுதியில் வேறு தெருவில வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அடிதடி தகராறு வழக்கில் அரவிந்த கடந்த சில மாதங்களுக்கு முன் சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு குடிபோதையில் தனது தந்தை மணி, தாய் சாந்தியிடம் சொத்தை விற்று தருமாறு அடிக்கடி தகராறு செய்து அடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சாந்தி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவில் குடிபோதையில் வந்த அரவிந்த் வழக்கம் போல் சொத்தை விற்று பணம் தர கேட்டு தந்தை மணியை அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாத மணி பக்கத்தில் சென்று ஒளிந்து கொண்டார். சுமார் 11 மணிக்கு வந்து பார்த்த போது அரவிந்த் வீட்டிற்குள் போதையில் படுத்து தூங்குவதை பார்த்தார்.

    தன்னை போதையில் தாக்கியதாலும் தொடர்ந்து தகராறு செய்வதாலும் அக்கம் பக்கத்தினரிடம் அவமான பட்டதாலும் ஆத்திரத்தில் இருந்த மணி அருகில் இருந்த கட்டையை எடுத்து மகன் அரவிந்தை கடுமையாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து மூளை சிதறி முகம் சிதைந்த நிலையில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மணி நள்ளிரவில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    Next Story
    ×