search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

    நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் பலர் கைதானார்கள். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த டேவிஸ் என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், ‘நீட் தேர்வில் எனது மகனுக்கு பதிலாக வேறு ஒருவர் லக்னோவில் தேர்வு எழுதியதாகவும், அதனடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் என்னையும், எனது மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். என் மகனுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே ஜாமீன் வழங்கியது. அதனடிப்படையில் எனக்கு ஜாமீன் கேட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த விவகாரத்தில் புரோக்கர்களை விசாரித்து அவர்களை கைது செய்யாமல், என்னை கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டிற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    முடிவில், கடந்த 30-ந்தேதி தான் மனுதாரரின் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. சில நாட்களிலேயே மீண்டும் ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×