search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பெரம்பலூர் அருகே மருதையாற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி

    தண்ணீரில் மூழ்கி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சாத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம்-அழகேஸ்வரி தம்பதியின் மகள் சீதா (வயது 13). அதே ஊரை சேர்ந்த செல்வராஜூ-வேம்பு தம்பதியின் மகள் மஞ்சுளா (13). கந்தசாமி மகள் பிரியா (14). இவர்கள் 3 பேரும் தோழிகள் . சீதா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், மஞ்சுளா கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், பிரியா 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று பள்ளி விடுமுறை என்பதால் 3 பேரும் சாத்தனூர் குடிக்காடு கிராமத்தின் அருகே உள்ள மருதை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத மாணவிகள் சீதா, மஞ்சுளா ஆகியோர் மருதை ஆற்றில் பாலம் கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி குளித்தனர். பிரியா குளிக்காமல் கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

    இந்தநிலையில் தண்ணீருக்குள் மூழ்கிய சீதா, மஞ்சுளா ஆகியோர் வெகுநேரமாகியும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவிக்கவே, 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சீதாவும், மஞ்சுளாவும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் 2பேரது உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் மருவத்தூர் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று மாணவிகள் சீதா, மஞ்சுளா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×