search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டுக்கோட்டை அருகே குடத்தால் தாக்கி ரவுடி கொடூரக்கொலை
    X

    பட்டுக்கோட்டை அருகே குடத்தால் தாக்கி ரவுடி கொடூரக்கொலை

    பட்டுக்கோட்டை அருகே குடத்தால் தாக்கி ரவுடியை கொடூரமாக கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் நேற்று மாலை நசுவினி காட்டாற்று கரை அருகே உள்ள ஒரு வயலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தலையில் காயமும், கழுத்து அறுபட்ட நிலையிலும் அவர் கிடந்தார்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள், பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.


    கொலையுண்ட வாலிபர் உடல் அருகே எவர்சில்வர் குடம் ரத்தக்கறையுடன் கிடந்தது. இதனால் குடத்தால் அந்த வாலிபரின் தலையில் தாக்கி பின்னர் கழுத்தை அறுத்து மர்ம கும்பல் கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

    இதில் கொலையுண்ட வாலிபர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் குட்டி பாம்பு என்கிற ஆறுமுகம் (வயது 36) என தெரியவந்தது. ரவுடியான இவர் மீது பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தன. இதனால் ரவுடி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் கடத்தி வந்து குடத்தால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    ஆறுமுகத்தின் அண்ணன் பெரிய பாம்பு என்ற பட்டபெயருடன் ரவுடியாக இருந்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ரவுடி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு இருப்பது பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

    ரவுடி ஆறுமுகத்தை கொலை செய்த கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×