

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த 28-ந்தேதி பிளிப்காட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு ஆர்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அவர் தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் எக்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன் அட்டையுடன் கூடிய பெட்டியையும், அதில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டார்.
அவரது இந்த பதிவு வைரலாகியது. இதைத்தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் அவருக்கு பதிலளித்தது. அதில் நீங்கள் ஆர்டர் செய்ததை தவிர வேறு எதையும் அனுப்புவதற்கு நாங்கள் விரும்ப மாட்டோம். இந்த நிகழ்வுக்காக மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு மேலும் உதவி செய்ய தயவு செய்து உங்கள் ஆர்டர் விபரங்களை வழங்கவும் என தெரிவித்துள்ளது.