

புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர்.
இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் கவிதாவிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரியின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி.யுமான கவிதாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளனர் என தகவல் வெளியானது.
இதையடுத்து, அவரது வீட்டின் முன் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அக்கட்சி எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் அங்கு வந்து தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவிதா வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.