என் மலர்tooltip icon

    இந்தியா

    • தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.
    • நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    சபரிமலையில் தங்கம் கொள்ளை போன விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    சிறையில் உள்ள தந்திரி கண்டரரு ராஜீவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.

    இந்த பணத்தை தந்திரி திருவல்லாவில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தந்திரி முதலீடு செய்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடப்பட்ட நிதி நிறுவனத்திலும், அதை நடத்தி வந்த என்.எம்.ராஜு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் ராஜு ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தந்திரி முதலீடு செய்ததாக கூறப்படும் ரூ.2 கோடி தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மாயக்கா தேவி கோவிலுக்கு தொடர்ந்து வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
    • மனைவி சுவாசிக்க உதவியாக ஆக்சிஜன் சிலிண்டரை, மனைவி செல்லும் இடத்துக்கு எல்லாம் அந்த விவசாயி தூக்கிச்சென்றார்.

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா சிஞ்சோலி கிரா மத்தில் பிரசித்திபெற்ற மாயக்கா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா தற்போது நடந்து வருகிறது.

    கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மாயக்கா தேவி கோவிலுக்கு தொடர்ந்து வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்தாண்டு மராட்டியத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுவாசக்கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தனது வீட்டில் வைத்து செயற்கை சுவாசம் பெற்று வந்தார்.

    இந்தநிலையில் அவர் இந்தாண்டு மாயக்கா தேவி அம்மனை தரிசிக்க முடியாதோ என கணவரிடம் கவலையுடன் சொல்லி வந்துள்ளார். இது பற்றி அவர் டாக்டர்களிடம் கூறினார். அவர்களும் சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை அழைத்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அந்த விவசாயி பெலகாவிக்கு வந்தார்.

    பின்னர் மாயக்கா தேவி கோவிலுக்கு சென்று தம்பதி இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். மனைவி சுவாசிக்க உதவியாக ஆக்சிஜன் சிலிண்டரை, மனைவி செல்லும் இடத்துக்கு எல்லாம் அந்த விவசாயி தூக்கிச்சென்றார். இதனை பார்த்த பக்தர்களும், அங்கிருந்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதனை அங்கிருந்தவர்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரின் 'லைக்குகளை அள்ளி வருகிறது. முதுமையிலும் கரம்பிடித்தவளின் ஆசையை நிறைவேற்றுவதே கடமை, அது ஒரு தனி சுகம் சிலிண்டரை சுமந்து வந்த அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.

    மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் அகமது மிர், வரும் தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் உடன் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அதிகாலை சுமார் 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    கேங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் (Gyalshing) பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை சுமார் 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

    மக்கள் உறக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    கடந்த சில நாளாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்தது.

    இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தார்.

    மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேகாலயா முதல் மந்திரி கான்ராட் சங்மா இரங்கலை தெரிவித்ததுடன், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டது.

    • ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம் புரண்டது.
    • இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புவனேஷ்வர்:

    சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி செல்லும் ஜல்பைகுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் இன்று காலை 8.51 மணிக்கு தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் ஒரு ஏசி பெட்டி, 2 பொது பெட்டி என மொத்தம் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.

    ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கும் பிறகு அப்பகுதியில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

    திடீரென ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • மணிப்பூரில் நேற்றுதான் குடியரசுத் தலைவர் வாபஸ் வாங்கப்பட்டது.
    • பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

    மணிப்பூரில் புதிய அரசு அமைந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    சூரசந்த்பூர் மாவட்டத்தில் துய்போங் பகுதியில் புதிய அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க முயன்ற பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. 

    பிப்ரவரி 4 அன்று பா.ஜ.க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. யும்னம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நெம்சா கிப்ஜென் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி-ஜோ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர்கள் அரசில் இணைந்தது "துரோகம்" என போராட்டக்காரர்கள் கருதுகின்றனர்.

    மாலையில் போராட்டம் தீவிரமடைய துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலைகளை மறித்தனர். மேலும் குக்கி-ஜோ குழுக்களின் கூட்டமைப்பு நாளை குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் 12 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் பிரிவினரும், மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று குக்கி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    மறுபக்கம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.
    • மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து குதித்து செய்துகொண்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகள் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

    இவர்கள் நீண்ட காலமாகத் தங்களை ஒரு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரிய மொழி கற்பது, கொரிய உணவுகளை உண்பது மற்றும் 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.

    இவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களை புரிந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் உள்ள வீட்டில் தங்கள் அறையில் உள்ள ஜன்னல் வழியே   குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    டைரியில் கண்டெடுக்கப்பட்ட அவர்களின் தற்கொலைக் கடிதத்தில் "நாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, எங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம். இந்தியாவின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமூகக் கட்டுக்கோப்புகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

    நாங்கள் கொரியர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் ஆன்மா ஏற்கனவே கொரியாவில் தான் வசிக்கிறது; இந்த உடலையும் அங்கேயே கொண்டு சேர்க்கப் போகிறோம்.

    எங்களை கொரியாவிற்கு அனுப்ப நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் போன்களைப் பறித்து எங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது" என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் சில ஆன்லைன் கொரிய குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும், அங்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விதமான கருத்துகள் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    நிஜ வாழ்க்கையின் கவலைகளில் இருந்து தப்பிக்க இணைய உலகையே உண்மையான வாழ்க்கையாகக் கருதும் இந்த போக்கு ஒரு தீவிரமான ஆன்லைன் அடிமைத்தனம் (Online Escapism) என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்
    • சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் பயன்படுத்தி வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆங்கில ஊடகங்கள் 16 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடுகின்றன.

    மேகாலயாவின் கிழக்கு ஜெய்ந்தியா மலை மாவட்டத்திலுள்ள தஷ்காய் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் படுகாயமடைந்து ஷில்லாங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் (Dynamite) பயன்படுத்தி வெடி வைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வெடிப்பு மிகவும் பெரிதாக இருந்ததால் அருகிலுள்ள மலைகளும் அதிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்பு பணி கடினமாக இருப்பதாகவும், மேலும் இந்த இடர்பாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    "மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மீட்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொலைதூர இடம், இடிபாடுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை தங்கள் மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாக" அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தடை விதித்துள்ள போதிலும், இதுபோன்ற சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்கின்றன. 

     

    • சுமார் 1 கோடி பெண்கள் கணக்கில் தேர்தலுக்கு சில வாரம் முன்னர் இந்த பணம் செலுத்தப்பட்டது.
    • அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21, 112, 202 மற்றும் 324 ஐ மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும்.

    2025 நவம்பரில் நடந்த பீகார் தேர்தலில் பாஜகவின் NDA கூட்டணி 202 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். 

    இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் பீகார் தேர்தல் சமயத்தில் பாஜகவின் என்டிஏ அரசு செயல்படுத்திய பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜன் சூராஜ் கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.

    பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெண்களுக்கு தலா தொழில் தொடங்க ரூ.10,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியது. சுமார் 1 கோடி பெண்கள் கணக்கில் தேர்தலுக்கு சில வாரம் முன்னர் இந்த பணம் செலுத்தப்பட்டது. 

    இந்தத் திட்டம் வாக்காளர்களைக் கவரும் ஒரு லஞ்சம் என்றும், இது நியாயமான முறையில் தேர்தல் நடப்பதைத் தடுத்தது என்றும் ஜன் சூராஜ், காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில் இந்த திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது செயல்படுத்தப்பட்டது விதிமீறல் என கூறி ஜன் சுராஜ் கட்சி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில், முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதும், மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்தபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21, 112, 202 மற்றும் 324 ஐ மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும். ரூ.10000 நேரடி பரிமாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

    தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.   

    • மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் பெறுவார்
    • கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான மம்தா போடியாமி என்பவர் போலீசாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

    மம்தா போடியாமி ஒரு எஸ்.எல்.ஆர் துப்பாக்கியுடன் சரணடைந்ததாகவும் தென்மேற்கு மண்டல டி.ஐ.ஜி கன்வர் விஷால் சிங் தெரிவித்தார். "அவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 5.5 லட்சம் நிதி உதவியும், ஆயுதத்தை ஒப்படைப்பவருக்கு கூடுதலாக ரூ.1.65 லட்சமும் வழங்கப்படும் . மேலும், மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் அவர் பெறுவார்" என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர் சரணடைந்த பிறகு, கோராபுட் இப்போது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது என்றும் விஷால் சிங் தெரிவித்தார். கோராபுட் மாவட்டத்திற்கு முன்னதாகவே, அண்டை மாவட்டங்களான மால்காங்கிரி மற்றும் நவரங்பூர்  ஆகியவையும் நக்சல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. 

    கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது. குறிப்பாக 2009-ல் டாமன்ஜோடியில் நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது இது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

    • இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?
    • போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

    மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி அரசாங்கம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    அவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்கக் கூடாது என்று மோடி அரசாங்கம் முடிவு செய்துவிட்டது. மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, இருவரையும் பேச அனுமதிப்பதில்லை."

    "இந்த நாட்டிற்காக தியாகம் செய்த, இந்த நாட்டிற்காக போராடிய, சிறை சென்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய நமது மாபெரும் தலைவர்களுக்கு எதிராக, ஒரு மனிதர் அவையில் பேசுகிறார். அவருக்கு மைக் கொடுக்கப்படுகிறது, அவர் அந்த மைக்கில் இஷ்டம்போல் அவதூறுகளை பொழிகிறார், அரசாங்கமோ மௌனமாக இருக்கிறது. இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?"

    "அதனால்தான், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், எங்களை பேச அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும், நாங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, நமது தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை, நாங்கள் கண்டிக்கிறோம்," என்றார்.

    ×