என் மலர்
இந்தியா
- பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
- என்.டி.ஏ. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்து 6 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூரு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக பெரும்பாலானோர் குற்றச்சாட்டு.
- அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்தியாவிலேயே போக்குவரத்து மிகுந்த நகரமாகும். இங்குள்ள சாலைகள் குண்டு குழியுமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு சரியான நேரத்தில்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
பெங்களூருவை சுற்றி ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுத்தின் தலைவர்கள் மோசமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ளனர். சில நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறுவதாகக் கூட தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெங்களூரு சாலை பள்ளங்கள் நிரப்பப்பட வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு பெருநகர ஆணையத்தின் தலைமை ஆணையர் மகேஸ்வர் ராவ், கூடுதல் தலைமை செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை துஷார் கிரிநாத் ஆகியோ் உள்ள அரசு அதிகாரிகளிடம பேசியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பள்ளங்களும் சரி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.
மழையால் பள்ளங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதான் பிரச்சினை. இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளது. நாங்கள் பள்ளங்களை நிரப்புவோம். பெரும்பாலான இடங்களில் ஒயிட்-டாப்லிங் பணியை மேற்கொள்வோம். இது சாலையை பள்ளமாக்குவதில் இருந்து பாதுகாக்கும்.
எம்.எல்.ஏ.-க்களுக்கு அவர்களது தொகுதி மேம்பாட்டிற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நகர் மற்றும் கிராமப்புற எம்.எல்.ஏ.-க்களுக்கும் கொடுக்கப்படும். ஏனென்றால், நாங்கள் ஆல்-ரவுண்ட் வளர்ச்சியை விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
- 3 தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர்கள் வாபஸ்.
- பீகாரில் என்டிஏ-வை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது.
அந்த கட்சியின் மூன்று வேட்பாளர்கள் திடீரென தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர கூறியதாவது:-
கடந்த சில வருடங்களாக யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பாஜக-தான் ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது. ஜன் சுராஜ் வெறும் வாக்கை பிரிக்கம் கட்சி, எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை என்று கூறிய கட்சியின் நிலையைப் பாருங்கள். வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அச்சத்தில் உள்ளது.
மக்களை பயமுறுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்தும் லாலு கட்சி கூட்டணிக்கு அவர்கள் பயப்படுவதில்லை. மக்களுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், லாலு யாதவின் 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த முறை, மக்களுக்கு ஒரு புதிய வழி இருக்கிறது, அது ஜன் சுராஜ்.
லாலுவின் பயத்தால் மக்கள் பாஜகவிற்கும் நிதிஷ் குமாருக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜகவின் பயத்தால் லாலு ஜிக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த 30 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி ஜன் சுராஜ்தான்.
தனபூர், பிரஹாம்பூர், கோபால்கஞ்ச்ஆகிய தொகுதிகளில் வலுக்கட்டாயமாக ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர். ஜன் சுராஜ் தலைவர்கள் ஓடிப்போகிறார்களா அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறதா என்பதை பீகார் தெரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள்..
எங்கள் கட்சியில் 240 வீரர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். அவர்கள் NDA-வை வேரறுக்கும் வரை ஓய மாட்டார்கள். நவம்பர் 14 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று எல்லாம் தெளிவாகிவிடும். பிரசாந்த் கிஷோரும் அவரது ஜன் சுராஜ் கூட்டாளிகளும் பயப்படப் போவதில்லை. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வாங்கினாலும், அச்சுறுத்தினாலும் அல்லது கட்டுப்படுத்தினாலும் தேர்தலில் வலுவாகப் போராடும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- முன்னாள் டிஜிபி-யின் மகன் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.
- அவரது மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், வீடியோ ஒன்றில் தந்தை, தாய் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 33 வயதான அகில் அக்தர் என்பவரின் மரணம் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதற்கிடையே, அகில் ரெக்கார்டு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் என தந்தைக்கும், மனைவிக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், தாய் மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் அவரது தந்தையான முன்னாள் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா, தாயாரான முன்னாள் பஞ்சாப் மாநில அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ரஜியா சுல்தானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அகில் அக்தர் கடந்த வியாழக்கிழமை இரவு அவருடைய பஞ்ச்குலா வீட்டில் மயக்கமான நிலையில் கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அகில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், சில மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அதனால இறந்திருக்கலாம் என தொடக்க விசாரணையில் கண்டுபிடித்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அகில் பதிவு செய்து, குடும்ப நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது, விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் அகில் தனது தந்தை மற்றும் மனைவிக்கு இடையில் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அகில் அந்த வீடியோவில் "என்னுடைய தந்தையோடு, என் மனைவியின் தகாத உறவை நான் கண்டுபிடித்தேன். இதனால் நான் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்ன செய்வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று நான் தினமும் உணர்கிறேன்.
என்னை பொய்யாக சிறையில் அடைப்பது அல்லது கொலை செய்வதுதான் எனது தாய் மற்றும் சகோதரியின் திட்டம். எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, எனது மனைவியை எனது தந்தைக்கு தெரியும். முதல்நாள், என் மனைவி, அவளை தொட அனுமதிக்கவில்லை. அவள் என்னை திருமணம் செய்யவில்லை. எனது தந்தையை திருமணம் செய்தாள்.
நான் ஒரு சரியான வாதத்தை முன்வைக்கும் போதெல்லாம், அவர்களின் கதை மாறுகிறது. தனது குடும்பத்தினர் தன்னை பைத்தியம் என்று கூறி தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
நான் அவர்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை அல்லது கொலை வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று என்னை மிரட்டுகிறார்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் அகில் கூறுகிறார்.
அதேவேளையில், மற்றொரு வீடியோவில் என் குடும்பத்தினர் மீது சுமற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளும், என்னுடைய மனநிலை பிரச்சினையால் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
அகிலின் மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை. அவரது மரணத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு இருப்பதாக ஒரு புகார் வந்தது. மேலும் அகில் அக்தரின் சமூக ஊடகப் பதிவுகள், சில வீடியோக்கள், சில புகைப்படங்கள், சில சந்தேகங்களை எழுப்பின. அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்று துணை காவல் ஆணையர் சிருஷ்டி குப்தா தெரிவித்தார்.
மிக உயர் பதவி வகித்த தந்தை மற்றும் தாய் மீது மகன் வீடியோவில் குற்றம்சாட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
- டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு உள்ளது.
- பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மோசடைந்ததாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டு.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் இரவில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை மற்றும் இரவு அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
என்றாலும், பட்டாசு வெடிக்கப்பட்டால் காற்று மாசு அதிகரித்தது. இன்று காலை காற்றின் தரநிலை மிகவும் மோசடைந்திருந்தது. இதனால ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு, காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்க ஆம் ஆத்மி கட்சி அவர்களை கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மஜிந்தர் சிங் சிஸ்ரா கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளதால். தீபாவளி கொண்டாடியதற்காகவும், பட்டாசு வெடித்ததற்காகவும் டெல்லி முதல்வர், பாஜக மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் காற்று மாசுவிற்கான உண்மையான காரணம் பஞ்சாபில் பயிர்க்கழிவுகளை எரித்ததுதான்.
தீபாவளிக்கு முன்னதாக காற்றின் தரநிலை 341 (AQI) ஆக இருந்தது. தீபாவளிக்குப் பிறகு 356 ஆக அதிகரித்துள்ளது. வெறும் 15 புள்ளிகள் தான் அதிகரித்துள்ளது. பாரம்பரிய முறையில் தீபாவளியைக் கொண்டாட மக்களுக்கு எங்கள் அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது என்பதை பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம். பட்டாசு வெடித்ததால் 11 புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மி அரசால் பஞ்சாபில் விவசாயிகள் அவர்கள் நிலத்தில் பயிர்க்கழிவுகளை எரிக்க வற்றுவத்தபடுகிறார்கள். ஆத் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளி இரவு அதிக அளவில் பயிர்க்கழிவுகள் எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு இருந்தபோதிலும் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மாசுபாட்டின் தாக்கத்தை டெல்லி தாங்கி வருகிறது,
இவ்வாறு மஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
- பகவான் ராமர் நமக்கு நேர்மையாக வாழவும், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நீதியை நிலைநாட்டியது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வரும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு கொண்டாடப்படும் 2-வது தீபாவளி இதுவாகும்.
பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையை இந்தியா நேர்மையான முறையில் மட்டுமின்றி அநீதிக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் அதிரடியாக மேற்கொண்டது.
பகவான் ராமர் நமக்கு நேர்மையாக வாழவும், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டதை சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் பார்த்தீர்கள்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நீதியை நிலைநாட்டியது. அதோடு அநீதி அழிக்கப்பட்டது.
நமக்கெல்லாம் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தீப ஒளி ஏற்றப்பட்டது. குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இந்த ஆண்டு உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டதை காண முடிகிறது.
இந்த மாவட்டங்களில் எல்லாம் மாவோயிஸ்டு தீவிரவாதம் இருந்தது. இன்று அவை அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பலரும் வன்முறை பாதையை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்புவதை நாம் காண முடிகிறது.
நாட்டின் அரசியல் கட்டமைப்பு மீது அவர்கள் நம்பிக்கை கொண்டு போராட்டத்தை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளனர். இது நமது நாடு செய்துள்ள மிகப்பெரிய சாதனையாகும்.
அடுத்து மத்திய அரசு அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டது. அந்த ஜி.எஸ.டி. சீர்திருத்தம் கடந்த மாதம் 22-ந் தேதி நவராத்திரி தொடங்கிய தினத்தன்று நாடு முழுவதும் அமல்படுதுதப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைந்தது. மக்களின் வாங்கும் திறன் நாடு முழுவதும் அதிகரித்து இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்று நான் தெரிவித்தேன். அதை உறுதிப்படுத்தும் வகையில் பண்டிகை நாளில் மக்கள் முக்கிய பொருட்களை குறைந்த விலைக்கு பெற்றனர். இதனால் மக்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவுகிறது. பல நாடுகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. ஆனால் இந்திய பொருளாதாரம் வலுவாக, சிறப்பானதாக உள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் நிலையான தன்மையும், வளர்ச்சியும் இணைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ளது. இந்த பயணத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
வளர்ச்சியடைந்த, சுய சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் முதன்மை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய வரலாற்று சாதனைகளுடன் அடுத்த கட்ட சீர்திருத்தங்களையும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஒரே பாரதம் என்று உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். அனைத்து மாநில மொழிகளுக்கும் நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும். நமது உடல் நலத்தை கவனிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
உணவில் எண்ணை பயன்படுத்துவதை 10 சதவீதம் குறைக்க வேண்டும். தினமும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மிகப்பெரிய வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
இன்றைய தீப ஒளியை ஏற்றி நாம் பிரகாசமாக்கும்போது அது மற்றொரு விளக்கில் ஏற்றப்படும்போது அதன் ஒளி குறையாது. மேலும் அதிகரிக்கவே செய்யும்.
அதே உணர்வுடன் நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கம், அமைதி, ஒத்துழைப்பு, நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- அந்த கட்சி வேட்பாளர் சந்தோஷ் சாகினியை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படவில்லை. இந்த குழப்பத்தில் நட்பு போட்டிகள் ஏற்பட்டு உள்ளன. கூட்டணியினரே ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.
தர்பங்கா கவுரா பவுராம் தொகுதி யாருக்கு என்று இறுதி செய்யப்படுவதற்கு முன்பே ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) அப்சல் அலிகானை வேட்பாளராக அறிவித்தது. கட்சி தலைமை அதற்கான ஆவணங்களையும் வழங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்சல் பிரசாரம் செய்ய தொகுதிக்கு சென்றார்.
அப்போது அவரது தொகுதி கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் சந்தோஷ் சாகினியை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஷ்டிரீய ஜனதா தளம் அப்சல்கானை தொடர்பு கொண்டு கட்சி சின்னத்தின் ஆவணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். ராஷ்டிரீய ஜனதா தள வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தார்.
அப்சல் அலிகானை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று ஆர்.ஜே.டி. தெரிவித்தது. முறையான ஆவணங்களுடன் அவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் நிராகரிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் அந்த தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்வுக்கு பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
- தீபாவளியுடன் போனஸ் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டனர். கேட்டை மூடினால், வாகனம் அதன்முன் வந்து நிற்கும். fastag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் கேட் திறக்கப்படும்.
போனஸ் வழங்காத கோபத்தில் ஊழியர்கள் கேட்டை திறந்து விட்டனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காலை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல சென்றது. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீசாய் அண்டு தத்தார் நிறுவனத்திற்கான ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார். நிறுவனம் தீபாவளியுடன் போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு வங்கி கணக்கில் போனஸ் வரவு வைக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு ஊழியர் "கடந்த ஒருவருடமாக நான் இங்கே வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தவிதமான போனஸும் தரவில்லை. நாங்கள் கடுமையான வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், சம்பளம் கூட சரியான நேரத்தில் தரப்படுவதில்லை. நாங்கள் ஊழியர்களை மாற்றிவிடுவோம் என நிறுவனம் தெரவிக்கிறது. ஆனால், எந்த போனஸும் கொடுக்கப்படவில்லை" என தனது கவலையை தெரிவித்தார்.
- நிகிதாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி மஹானாவிடம் கெஞ்சியுள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியை சேர்ந்த நிகிதா (வயது 25). இவருக்கும் கான்பூரில் சிமெண்டு தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபர் மஹானாவுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
மஹானா லக்னோவில் செய்து வந்த தொழில் நஷ்டம் அடைந்துவிட்ட தால் அவருக்கு பணப்பிரச்சனை ஏற்பட்டது. அவர் நிகிதாவிடம் ரூ.15 லட்சம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். நிகிதாவின் மாமியாரும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தினார்.
இந்த நிலையில் தீபாவளி விருந்து ஒன்றில் நிகிதாவும், மஹானாவும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்த அவர்களிடம் மீண்டும் பணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திடீரென நிகிதா மயங்கி கீழே விழுந்தார்.
இந்த நேரத்தில் நிகிதாவின் சகோதரி முஸ்கன் யதார்த்தமாக அவருக்கு போன் செய்தார். நிகிதா மயக்கமடைந்து இருப்பது அவருக்கு தெரியவந்தது. அவர் நிகிதாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி மஹானாவிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நிகிதா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் நிகிதா உயிரிழந்ததை அவரது தாயாரிடம் மஹானாவும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
தங்கள் மகள் இறந்த செய்தியை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தனர். வரதட்சணை கேட்டு தன் மகளை கொடுமைப்படுத்தி அடித்து கொன்றுவிட்டதாக நிகிதாவின் கணவர் மற்றும் மாமியார் அவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
- பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-ெதாய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய 2 பயங்கரவாத இயக்கங்களும் ஆட்சியாளர்கள் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவமும் இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து பயிற்சியும் கொடுத்து வருகிறது.
பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவ செய்து நாச வேலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி திட்டமும் வகுத்து கொடுக்கிறது. சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலும், அப்படித்தான் நடந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இவ்வளவு அடிபட்டும் திருந்தாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தற்போது காஷ்மீர் எல்லை அருகே கொண்டுவந்து நிறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் 120 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருப்பதை இந்திய ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது. அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை.
- திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்தார். ஏழுமலையானின் படைத்தளபதி விஸ்வக்சேனர் மற்றொரு பல்லக்கில் பவனி வந்தார்.
அர்ச்சகர்கள் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையானுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை. தோமாலா அர்ச்சனை சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கலந்துகொண்டு பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர். 23,304 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3. 86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.






