search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.26 லட்சமாக குறைந்தது

    நாடு முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3.29 லட்சமாக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. 

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,80,47,534 ஆக உயர்ந்துள்ளது. 

    நாடு முழுவதும் ஒரே நாளில் 3,128 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது. 

    பரிசோதனை

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,56,92,342 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,38,022 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.17 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 91.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 9.04 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 9.07 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் தொடர்ந்து 7 நாட்களாக 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

    சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.26 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 20,26,092 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 21,31,54,129 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக இதுவரை 34,48,66,883 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×