search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்... குணமடையும் விகிதம் 83.26 சதவீதமாக அதிகரிப்பு

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37.10 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த வாரம் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்து பதிவானது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது புதிய தொற்று 4 லட்சத்தைவிட குறைந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது. புதிய பாதிப்பு நேற்றைவிட சற்று உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 4,120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,58,317 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,52,181 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.09 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 83.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 37,10,525 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 17,72,14,256 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×