search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகளில் ஏற்றப்பட்ட மருந்துகள்
    X
    லாரிகளில் ஏற்றப்பட்ட மருந்துகள்

    சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகம் தொடங்கியது

    புனே நகரின் சீரம் இன்ஸ்டியூட்டில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகம் இன்று தொடங்கியது.
    மும்பை:

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வரும் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதன் அடுத்தகட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் 1 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு நேற்று அளித்தது. மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த ஆர்டரை அளித்தது.

    ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ.200 ஆகும். ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.210 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய அரசு கொள்முதல் ஆர்டர் வழங்கிய நிலையில், புனேயில் உள்ள சீரம் நிறுவனம் முதல்கட்டமாக 3 லாரிகளில் மருந்துகளை அனுப்பும் பணியை இன்று தொடங்கியுள்ளது. 
    Next Story
    ×