search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம்: குமாரசாமி

    இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவின் அணுகுமுறையே வேறுவிதமாக உள்ளது. அந்த கட்சியை எதிர்த்து நின்று வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடுவது வீண் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ஒக்கலிகர், பெங்களூரு நகருக்காக தங்களின் நிலத்தை தியாகம் செய்துள்ளனர். அவர்கள் தொழிலாளர்களாக ஆகிவிட்டனர். மாநில அரசுக்கு ஒக்கலிகர்கள் மூலம் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. அவ்வாறு பார்த்தால் முதலில் ஒக்கலிகர்களுக்கு தான் வாரியம் அமைக்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பிராமணர், ஆர்ய வைஷ்ய சமூகங்களுக்கு புதிய வாரியத்தை அமைத்து கொடுத்தேன். அதனால் எந்த பயனும் இல்லை என்பது எனது கருத்து.

    நாங்கள் மண்டியாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தோம். இதை சித்தராமையா குறை கூறியுள்ளார். சாம்ராஜ்நகர், மைசூரு உள்ளிட்ட இடங்களில் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதே. அனைவரும் அதிகாரத்தை தேடி தான் செல்கிறார்கள். இதில் யாரும் சுத்தமானவர்கள் இல்லை. அதனால் சித்தராமையா எங்கள் கட்சியை குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.

    பெலகாவி நாடாளுமன்ற தொகுதி மற்றும் மஸ்கி, பசவ கல்யாண் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதாவின் அணுகுமுறையே வேறுவிதமாக உள்ளது. அந்த கட்சியை எதிர்த்து நின்று வெற்றி பெறுவது கடினம். எங்கள் கட்சியின் கட்டமைப்பு நன்றாகவே உள்ளது. அதனால் இடைத்தேர்தலை எங்கள் கட்சி போட்டியிடுவது வீண். ஆயினும் அந்த தொகுதிகளின் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் எனது மகன் நிகில் குமாரசாமியை நிறுத்த நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவரை தான் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைவரும் அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்திற்கு பணிந்து நான் நிகில் குமாரசாமியை நிறுத்தினேன். அனைவரும் சேர்ந்து எனது மகனை தோற்கடித்து எங்களை முடித்துவிட்டனர்.

    இதற்காக மண்டியா மக்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. மண்டியா மக்கள் வெளிப்படையானவர்கள். அனைவரையும் நம்பிவிடுவார்கள். இந்த தோல்விக்கு பிறகு அரசியலை விட்டு ஒதுங்கிவிடலாம் என்று கருதினேன். அவ்வாறு செய்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று எண்ணி, அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×