search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை சன்னிதானத்திற்கு வந்த தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள ஆபரண பெட்டியை படத்தில் காணலாம்.
    X
    சபரிமலை சன்னிதானத்திற்கு வந்த தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள ஆபரண பெட்டியை படத்தில் காணலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை - பக்தர்கள் குவிந்தனர்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடக்க இருப்பதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி மண்டல பூஜையின் போது அய்யப்ப சாமிக்கு அணிவிக்கப்படும். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து தங்க அங்கி ஊர்வலம் கடந்த 21-ந்தேதி சபரிமலை நோக்கி புறப்பட்டது.

    வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கி ஊர்வலத்தை வரவேற்றனர். நேற்று மாலை சபரிமலைக்கு தங்க அங்கி வந்து சேர்ந்தது. இந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

    மண்டல பூஜையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். காலை 9 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணி முதல் 11.40 வரையிலான கும்ப ராசி வேளையில் அய்யப்பனுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்படும்.

    இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சூரிய கிரகணத்தையொட்டி நேற்று காலை 7.30 மணியில் இருந்து 11.30 மணி வரை 4 மணி நேரம் சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன் பிறகு நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக் கப்பட்டனர்.
    Next Story
    ×